Saturday, July 19, 2008

கருவாச்சி காவியம் விட்டுச் சென்ற தடயங்கள்

இன்னையோட வைரமுத்துவோட "கருவாச்சிய" நெஞ்சில தூக்கிச் சுமக்க ஆரம்பிச்சு மூணு வாரம் ஓடிப்போச்சு. படிச்சு முடிச்சக் கையோட மனசில பட்டதை எழுதி இங்கு பதிஞ்சு வைச்சிரணுமின்னு கொண்டு வந்திருக்கேன். இந்தக் "கருவாச்சி காவியம்" முதலில் எப்பொழுது புத்தக வடிவமாக வெளி வந்ததுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, எனக்கு நினைவிலிருக்கு போன வருடம் புதுகையில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய புத்தகக் கண்காட்சியில் இதனையும், கள்ளிக்காட்டு இசிகாசத்தையும் பார்த்துவிட்டு, முதலில் இரண்டாவது புத்தகத்தை வாங்கியதனை.

ஆனால், படிக்க படிக்க எழுத வருபவர்கள் எதற்காக எழுத முன் வர வேண்டுமென்ற உணர்வை வரி தவறாமல் கருவாச்சிக் காவியம் உணர்த்திக் கொண்டே வரத் தவறவில்லை. தமிழகத்தின் வறண்ட பூமிக் கிராமங்களில் இப்படியும் மூர்க்கமான நம்பிக்கையும், அன்பும், மனித விகாரங்களில் சகிப்புத்தன்மைமிக்க மனிதர்களும் ஒருங்கே பின்னிக் கிடப்பதனை படிக்க படிக்க நெஞ்சில் நமக்கே ஈரமும் நம்பிக்கையும் ஒருங்கே சுரக்கிறது. மேலும் வட்டார வழக்க மொழிகளில் மேலும் இது போன்ற படைப்புகள் எழுத வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவே பட்டது.

உலகத்தின் கடைக் கோடியில் உள்ள ஏதோ ஒரு சொக்கத்தேவன் பட்டியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியலைக் கொண்டு ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தின் ஆசா பாசங்களையும், மன விகாரங்களையும் இந்தக் காவியம் தூக்கிச் சுமக்கிறது. எழுத்தாளனின் பெரும் ஆசையைப் போலவே இது கால வெள்ளச் சுழிப்புகளைக் கடந்து இந்தக் காவியம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை எனக்குமிருக்கிறது.

கதையின் ஓட்டத்தில் கருவாச்சி சந்திக்கும் நம்பிக்கை துரோகங்களும், காலம் அவளுக்கு முன்னால் வைக்கும் சவால்களையும், மரணங்களையும், வறட்சியையும்,

பட்டினியையும் அவள் முகம் கொடுத்து சந்திக்கும் பாங்கு மீதமுள்ள மனுச ஜீவராசிகளுக்கு

ஒரு நம்பிக்கையூட்டும் விதமாகவுள்ள கடற்கரையோர ஒளி விளக்கு. கடைசி அத்தியாங்களில் அவள் வழி வருகின்ற ஒரு சுவாமிஜிக்கும், கருவாச்சிக்கும் நடைபெறும் சம்பாஷனைகளைக் கொண்டு ஒட்டு மொத்த வாழ்வியல் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. அதன் எச்சம் சமா காலத்தில் வாழும் கருவாச்சிகளிடத்தே நம்மை சம்பாஷனைத் நிகழ்த்த ஊண்டு கோலாக அமையலாம்.

சுவாமிஜி, கருவாச்சிப் பேசப் பேச தன்னோட படிப்பறிவில் நிற்கும் ஒரு உபதேசத்தை நினைவில் நிறுத்துவதாக வரும் இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு, என்னோட குறிப்பேட்டில் நிறந்தரமாக இருத்தல் எண்ணி இங்கு பதிந்து வைக்கிறேன்...

...பொருளே பற்றுறுத்தும்;
பற்று ஆசையாய் முற்றும்;
அவ்வாசை தடைப்படின்
சினமே தீயாய்ப் பரவும்;
சினம் சித்தம் குழப்பும்;
சித்தக் குழப்பம் புத்தியழிக்கும்;
புத்தி அழிவுறின் சரீரம் ஆத்மம் சரியும்."

ஏண்டா படிச்சு சீக்கிரமே முடிச்சிட்டோமின்னு இருக்கு.

50 comments:

செல்வ கருப்பையா said...

எனக்குக் கள்ளிக்காட்டு இதிகாசம் மனதில் நின்ற அளவுகூட கருவாச்சி காவியம் நிற்கவில்லை. கருவாச்சி ஒரே அழுகாச்சியாகவே மட்டும் சோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக படைக்கப் பட்டிருப்பதுபோன்று தோன்றியது - செயற்கையாகப் பட்டது.

Thekkikattan|தெகா said...

வாங்க செல்வ கருப்பையா,

கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் வாசித்தேன் அதுவும் இது போன்ற வாழ்க்கைப் போராட்டங்களையும் நிறைய வட்டார பழக்க, வழக்கங்களையும் தாக்கங்களாக விட்டுச் சென்றன மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் நீங்கள் கூறியபடியே கருவாச்சி ஒட்டு மொத்த அழுகாச்சியாகப் படைப்பட்ட விதம் கொஞ்சம் சினிமாப் படுத்தப்பட்டதனைப் போன்றே இருந்தாலும், எத்தனையோ கருவாச்சிகள் தனது வாழ்வு தோரும் சோதனைகளை மட்டுமே வாழ்வாக வாழ்ந்துவருவதும் நடைமுறையிலில்லை என்று ஒதுக்குவதற்கில்லை, இல்லையா? செல்வா.

வாழ்க்கை தானே சினிமா, இல்லையா - செல்வ கருப்பையா?

இராம்/Raam said...

தெக்ஸ்,

நல்ல விமர்சனம்..... எனக்கு படித்துமுடிந்ததும் எழுந்த உணர்ச்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கு... :)

கருவாச்சி காவியத்தையும், தமிழ்செல்வி'யின் அளம்'யும் ஒப்பிட்டு எழுதிய எலக்கிய சூராவளி கதிர்'ன் பதிவை படித்து பாருங்களேன்.

தருமி said...

//வாழ்க்கை தானே சினிமா, இல்லையா -//

நம்மூரு சினிமாக்களைப் பார்த்த பிறகுமா இப்படி சொல்கிறீர்கள்!!

இதிகாசம் வாசித்தேன்; காவியம் இன்னும் இல்லை :(

சுரேகா.. said...

அழகா, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பொறுமையும் , சகிப்புத்தன்மையும்தான் கருவாச்சி!

எது நடந்தாலும் இயல்பாக இருக்கும் மனுஷியின் எழுத்துருவம்தான் கருவாச்சி!

நல்லாப்படிங்க! நிறைய எழுதுங்கப்பு!

Veera said...

நல்ல விமர்சனம்!

நானும் இரண்டு புத்தகங்களையும் படித்துள்ளேன், ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னை கவர்ந்த அளவுக்கு, கருவாச்சி காவியம் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

Thekkikattan|தெகா said...

கருவாச்சி காவியத்தையும், தமிழ்செல்வி'யின் அளம்'யும் ஒப்பிட்டு எழுதிய எலக்கிய சூராவளி கதிர்'ன் பதிவை படித்து பாருங்களேன்.//

இராம், நீங்க கொடுத்த சுட்டியில் போய் படித்தேன், "அளம்" பற்றிய அதே விமர்சனப் பதிவை நான் முன்னமே வாசித்திருகிறேன், ஆனால் நீங்க உரையாடிய பின்னூட்டங்களை படிக்கவில்லை போல. அங்கே நிறைய விசயங்கலை ஊடாடி இருக்கீங்க.

எனக்கும் சில இடங்களில் இதெல்லாம் சினிமாத்தனமோ என்ற அய்யம் எழாமலில்லை, இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் சில மக்களை கவனித்து வாழும் வாய்ப்புகிட்டியதால் அந்த எண்ணத்தை அடக்கியே வைத்துக் கொள்ள முடிந்தது.

ஆனால், சில திருப்பங்களுக்காக அழகு சிங்கத்தையும், கட்டையனையும் பட்டுப் போகுமிடங்களில் கொஞ்சம் தூக்குதலனா சித்தகரிப்புகனூடேயே வழங்கப் பட்டிருந்தது. அதுபோலவே, அந்த சுவாமியர் கேள்வி பதில் செஷனும் ;) (எனக்கு அது பயங்கர எஃபக்ட் கொடுத்துச்சு), இருந்தாலும் அவர் வருவதால் தான் கருவாச்சியின் "நிலை" நன்கே உடைத்து போடப்பட்டது சில கேள்விகளின் மூலமாக.

இது காவியமா என்றால், என்னைப் பொருத்த மட்டில் வட்டார வாழ்க்கை முறையை சித்தரித்து அந்த காலக் கட்டத்தில் நிலவிய அணைத்தும் இணைக்பட்டிருப்பதால் அப்படியும் எடுத்துக்கலாம் ஒரு காலத்தில் தேவைப் படும் பொழுது :-).

கோவி.கண்ணன் said...

//
உலகத்தின் கடைக் கோடியில் உள்ள ஏதோ ஒரு சொக்கத்தேவன் பட்டியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியலைக் கொண்டு ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தின் ஆசா பாசங்களையும், மன விகாரங்களையும் இந்தக் காவியம் தூக்கிச் சுமக்கிறது.
//
தெகா,

இதுவரை வாசிக்கக் கிடைத்தது இல்லை, தேடிப்போகவும் இல்லை, நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்து படிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை நூலகம் சென்றால் எடுத்துவர நினைத்துள்ளேன்.

இராம்/Raam said...

//இராம், நீங்க கொடுத்த சுட்டியில் போய் படித்தேன், "அளம்" பற்றிய அதே விமர்சனப் பதிவை நான் முன்னமே வாசித்திருகிறேன், ஆனால் நீங்க உரையாடிய பின்னூட்டங்களை படிக்கவில்லை போல. அங்கே நிறைய விசயங்கலை ஊடாடி இருக்கீங்க.///

ஆமாம்.... அந்த பதிவிலெ கதிரு கருவாச்சி காவியத்தை ஒப்பிட்டு அளவு'லே குறைவு'ன்னு சொல்லாமே வேற முறையிலே சொன்னாதாலே பெரிய அளவுக்கு விவாதம் போச்சு.... :)


//ஆனால், சில திருப்பங்களுக்காக அழகு சிங்கத்தையும், கட்டையனையும் பட்டுப் போகுமிடங்களில் கொஞ்சம் தூக்குதலனா சித்தகரிப்புகனூடேயே வழங்கப் பட்டிருந்தது.//

ஹிம்... வளையல் விக்கிற செட்டியாரு, ஊரு நாட்டாமை பெருசு'ன்னு எல்லாரும் நம்ம வாழ்க்கையோட பயணிக்கிறவங்களா சித்திரிச்ச பாங்கு நல்லாயிருந்தது.

தங்கம் செய்ய கொடுக்க போற இடத்திலே தோலா,குண்டுமணி அளவைகள் பத்தியும் தெளிவா எடுத்து வந்தது'னு வைரமுத்து நிறைவாகவே எழுதியிருப்பார்.

//அதுபோலவே, அந்த சுவாமியர் கேள்வி பதில் செஷனும் ;) (எனக்கு அது பயங்கர எஃபக்ட் கொடுத்துச்சு), இருந்தாலும் அவர் வருவதால் தான் கருவாச்சியின் "நிலை" நன்கே உடைத்து போடப்பட்டது சில கேள்விகளின் மூலமாக.//

அந்த சுவாமி பத்தின பகுதியைதான் கதிரு செயற்கைதனமா இருந்துச்சு'ன்னு சொல்லியிருந்தாரு.

//இது காவியமா என்றால், என்னைப் பொருத்த மட்டில் வட்டார வாழ்க்கை முறையை சித்தரித்து அந்த காலக் கட்டத்தில் நிலவிய அணைத்தும் இணைக்பட்டிருப்பதால் அப்படியும் எடுத்துக்கலாம் ஒரு காலத்தில் தேவைப் படும் பொழுது :-).//


அதே அதே..... இந்த புத்தகத்தை வாசிக்கிற சமயத்திலே மருத மண்ணை கையிலே படிய வைச்சது'லே வைரமுத்து வெற்றி பெற்றுருக்காரு.... :)

Thekkikattan|தெகா said...

தருமி,

//நம்மூரு சினிமாக்களைப் பார்த்த பிறகுமா இப்படி சொல்கிறீர்கள்!!//

அடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சேந்தான், 100ல 98அ கழிச்சிட்டு ஏதோ ஒண்ணு ரெண்டு வருதுல்ல ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கான்னு அதில வைச்சிக்குவோம்... அதான் சினிமா வியாபாரமாச்சாம், அதுனாலே அங்கே விக்கிறதைத்தான் விக்க முடியுமாம், சொல்லிக்கிடுறாக.

//இதிகாசம் வாசித்தேன்; காவியம் இன்னும் இல்லை :(//

சீக்கிரமாகட்டும். அதான் கையில புத்தகம் இருக்கில்ல ஆரம்பிச்சுட வேண்டியதுதானே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா பழய கதையெல்லாம் கிழிச்சி பைண்ட் செய்வாங்க..எங்கவீட்டுல இப்படி நிறைய இருக்கு.. நான் என் வீட்டுல முதல்ல இந்த கதை தான் கிழிச்சி சேர்த்தேன்.. ஏன்னா புத்தகமா வந்தாலும் அதுல இப்படி அழகான படங்கள் உயிரோட்டமான படங்கள் ..அவங்களை மனக்கண்ணில் கொண்டுவரும் வர்ணனையோட ஒத்துப்போகும் படங்கள் கிடைக்காதேன்னு..

Thekkikattan|தெகா said...

சுரேகா,

ரொம்ப நாளாச்சு ஆளக் கண்டு. ரொம்ப அசதியா இருக்கியோ ;-).

//அழகா, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பொறுமையும் , சகிப்புத்தன்மையும்தான் கருவாச்சி!//

இல்லாதவங்களுக்கும், தெளிவு பட தேடுறவங்களுக்கும் இது போன்ற காவியங்கள் கொஞ்சம், கொஞ்சம் அதனை உணர்த்த நிறையவே உதவலாம், இல்லையா?

//எது நடந்தாலும் இயல்பாக இருக்கும் மனுஷியின் எழுத்துருவம்தான் கருவாச்சி!//

எங்களோடவே ஒரு கருவாச்சி இருந்துருக்காய்யா, மிஸ் பண்ணிட்டோம்பா முழுக் கதையை அதுக்கிட்ட இருந்து கறக்காமலையே விட்டாச்சு... இனிமே, கொஞ்சம் விழிப்போட இருக்கணும்.

//நல்லாப்படிங்க! நிறைய எழுதுங்கப்பு//

ஆசையாத்தான் இருக்கு. அப்பப்ப வாழ்க்கை குடுமிய பிடிச்சு உழுக்குவதற்குமிடையே, காலத்தோட இதெல்லாம் செஞ்சிடணுமின்னு...

ராஜ நடராஜன் said...

வணக்கம்.வந்தேன் மட்டும் சொல்லிவிட்டுப் போறேன்.போறதுக்கு முன்னாடி டாப்ஸிலிப் பக்கமெல்லாம் போயிருக்கீங்க.அந்தப் பக்கம் கூட நிறைய வாழும் கருவாச்சிகள் கண்ணுல பட்டிருப்பாங்களே.

Thekkikattan|தெகா said...

நல்ல விமர்சனம்!//

நன்றி வீர சுந்தர்.

//நானும் இரண்டு புத்தகங்களையும் படித்துள்ளேன், ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னை கவர்ந்த அளவுக்கு, கருவாச்சி காவியம் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.//

மேலே செல்வ கருப்பையாவும் கிட்டத்தட்ட அதே கருத்தினைத்தான் கூறியிருக்கார். இதற்கு தலையாயக் காரணமாக வைரமுத்து சினிமா துறையை பின்புலமாக கொண்டு வருவதனால் கருவாச்சி கொஞ்சம் தூக்கலாக சினிமாத்தனம் எஞ்சி நிற்பதாக நம் மனது நிலைப்பாட்டினைக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகமென நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

கோவி,

//இதுவரை வாசிக்கக் கிடைத்தது இல்லை, தேடிப்போகவும் இல்லை, நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்து படிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை நூலகம் சென்றால் எடுத்துவர நினைத்துள்ளேன்.//

ஓ! அது அதுக்குமின்னு ஒரு காலம் வரும் போல அப்பப்ப அது கிடைச்சாத்தான் அதன் கருப் பொருள் அறிஞ்சு சுவைச்சு பருக முடியும் போல. அதான் இப்பக் கிடைச்சிருச்சே பொறகென்னா மேஞ்சிட வேண்டியதுதானே... :-).

புருனோ Bruno said...

நான் சுள்ளிக்காட்டு இதிகாசத்தை முழுவதும் படித்ததில்லை.

கருவாச்சி காவியங்கள் ஏறத்தாழ அனைத்து அத்தியாயங்களையும் விகடனில் வரும்பொழுது படித்தேன்.

கண்டிப்பாக அதை காவியம் என்று கூறலாம்.

தமிழ் சமுகத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தின் வரலாறு அதில் பதியப்பட்டிருக்கிறது

மீன்துள்ளியான் said...

கருவாச்சி காவியம் தேனி மாவட்ட மக்கள் வாழ்வை மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் மக்க்ளின் வாழ்வை பிர்திபலிக்கிறது.
இதுவும் பிள்ளை பாசத்தினால் ஆன கதை . ஆனால் இன்று அதே பிள்ளை பாசத்தை விட்டு எத்தனையோ பேர் இன்று "முதியோர் இல்லங்க்ளில்" உறவை இழந்து
ஊரை இழந்து ..

மீன்துள்ளியான் said...

கருவாச்சி காவியம் தேனி மாவட்ட மக்கள் வாழ்வை மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் மக்க்ளின் வாழ்வை பிர்திபலிக்கிறது.
இதுவும் பிள்ளை பாசத்தினால் ஆன கதை . ஆனால் இன்று அதே பிள்ளை பாசத்தை விட்டு எத்தனையோ பேர் இன்று "முதியோர் இல்லங்க்ளில்" உறவை இழந்து
ஊரை இழந்து ..

Thekkikattan|தெகா said...

இராம்,

//ஆமாம்.... அந்த பதிவிலெ கதிரு கருவாச்சி காவியத்தை ஒப்பிட்டு அளவு'லே குறைவு'ன்னு சொல்லாமே வேற முறையிலே சொன்னாதாலே பெரிய அளவுக்கு விவாதம் போச்சு.... :)//

நானும் கவனித்தேன். நான் இன்னமும் "அளம்" படிக்கவில்லையாதலால் ஒப்பீட்டுளவில் பேச முடியாதெனினும், படைப்புகள் என்று வரும் பொழுது எப்படி நடைமுறை வாழ்க்கையில் ஒரு குடும்பத்தின் மணமும், குணமும் ஒன்றிலிருந்து பிரிதொன்று வித்தியாசப் பட்டு நிற்கிறதோ அதனைப் போன்றே படைப்பாளிகளின் படைப்புகளும், கதைக்களத்தின் ஊர்களும், அவ்வூர் மக்களின் பண்பாடும், இயற்கைச் சூழலும் வித்தியாசப் பட்டே நிற்கலாம்.

மேலாக அவ்வூர்க்காரராக அங்கேயே சமகாலத்தில் வாழ நேர்ந்திருக்கும் பட்சத்தில் அதனை இன்னமும் ஆழமாக ஜீவனேற்றி விசயங்களை வெளிக் கொணர முடியும். எனவே, ஓப்பிட்டளவில் இது இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது, இராம்.

//ஹிம்... வளையல் விக்கிற செட்டியாரு, ஊரு நாட்டாமை பெருசு'ன்னு எல்லாரும் நம்ம வாழ்க்கையோட பயணிக்கிறவங்களா சித்திரிச்ச பாங்கு நல்லாயிருந்தது.

தங்கம் செய்ய கொடுக்க போற இடத்திலே தோலா,குண்டுமணி அளவைகள் பத்தியும் தெளிவா எடுத்து வந்தது'னு வைரமுத்து நிறைவாகவே எழுதியிருப்பார்.//

ஆமாம், கதாபாத்திரங்களை மனதில் நிறுத்துவதில்தான் ஒரு புதினத்தின் வெற்றியே அமைந்திருக்கிறது போல. அப்படியே சுப்பஞ் செட்டியாரின் வீட்டினுள் நிகழும் குழப்பத்துக்குள் நாமும் மண்டையை நுழைத்தனைப் போன்றதொரு பிரமை :-).

மூத்த நகைக் கடை செட்டியாரின் தொழில் பக்தி, இளைஞ மணமானவரின் புதுக் குசும்பு அப்படியே பதியப் பட்டு விட்டது கால காலத்திற்கும்.

அதாவது இது எப்படியாக ஒரு காவியமாகலாமென்றால் அக் காலக் கட்டத்தில் கடை பிடிக்கப் பட்ட அளவைக் குறியீடுகள், இயற்கை சம்பந்தப் பட்ட நிகழ்வுகள் (மழை, வறட்சி), கண்ணுற்ற வன தாவர, விலங்குகள் அமைவு முறை இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்... இந்த கருவாச்சியில் அது நன்றாகவே படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன்.

//அந்த சுவாமி பத்தின பகுதியைதான் கதிரு செயற்கைதனமா இருந்துச்சு'ன்னு சொல்லியிருந்தாரு.//

அப்படித்தான் தேற்றத்தில் இருக்கிறது. இதனையே நன்கே படிப்பறிவுமிக்க((இருந்துருந்து..) ஒரு ஊர்ப் பெரிசு உருமாப்பெருமாத் தேவரு அதே வார்த்தைகளை பயன் படுத்தி கேட்டதாக நினைத்துக் கொண்டால்... எனக்குக் கூட அது போன்று உரையாடுவதற்கு ஒரு கருவாச்சிக்கு இணையான பாட்டி என் கூட வாழ நேர்ந்திருந்தும் அது போன்ற வாழ்வு ப்ரக்ஞை சார்ந்த ஆழக் கேள்விகள் கேக்கும் நிலையில் கூட என் தேடல் அப்பொழுது இல்லாததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறேன் என்று அந்த அத்தியாயம் இன்று படிக்கும் பொழுது எனக்குத் தோன்றச் செய்தது.

//அதே அதே..... இந்த புத்தகத்தை வாசிக்கிற சமயத்திலே மருத மண்ணை கையிலே படிய வைச்சது'லே வைரமுத்து வெற்றி பெற்றுருக்காரு.... :)//

இருந்தாலும் அநியாயத்திற்கு பஞ்சமுங்கோ (இப்பவும்தானே), நினைச்சுப் பார்க்கவே பயம்மா இருக்கு. அது போன்ற சூழலில் வாழ்ந்து, வாழ்ந்துதான் அப்படி வீரமான மக்களாகிப் போனீகளோ? இன்னிக்கு சென்னை கோடம்பக்கத்தையே குத்தகைக்கு எடுத்துக்கிட்டீகளே :))??

Thekkikattan|தெகா said...

//அம்மா பழய கதையெல்லாம் கிழிச்சி பைண்ட் செய்வாங்க..எங்கவீட்டுல இப்படி நிறைய இருக்கு.. நான் என் வீட்டுல முதல்ல இந்த கதை தான் கிழிச்சி சேர்த்தேன்.. ஏன்னா புத்தகமா வந்தாலும் அதுல இப்படி அழகான படங்கள் உயிரோட்டமான படங்கள் ..அவங்களை மனக்கண்ணில் கொண்டுவரும் வர்ணனையோட ஒத்துப்போகும் படங்கள் கிடைக்காதேன்னு...//

நீங்க சொன்னபடியே அந்த ம.செ' வின் படங்கள் மேலும் சிறப்பைக் கொடுப்பது உண்மைதான். நல்லவேளை நான் படித்த பிரதியில் அதே படங்களும் இருந்தன, வார வாரம் தொடரும்... போட்ட பக்கமுமிருந்துச்சு... எனவே நீங்க கிழிச்சி தைச்ச வாரப் பத்திரிக்கை பிரதியை ஓசி வாங்கி படிச்ச மாதிரி இருந்துச்சுப்பா. அதுனாலே, நான் எதனையும் மிஸ் பண்ணலை :-).

Thekkikattan|தெகா said...

ராஜ நடராஜன்,

//வணக்கம்.வந்தேன் மட்டும் சொல்லிவிட்டுப் போறேன்.போறதுக்கு முன்னாடி டாப்ஸிலிப் பக்கமெல்லாம் போயிருக்கீங்க.அந்தப் பக்கம் கூட நிறைய வாழும் கருவாச்சிகள் கண்ணுல பட்டிருப்பாங்களே.//

இரண்டு மூன்று ஆதிவாசிகள் குழுக்கள் இருக்கிறார்களே. கிட்டத்தட்ட இது போன்றே வாழ்வுமுறை என்கிறீர்களா பார்த்துங்க வெட்டுக் குத்தாகிடப் போகுது :-))).

ம்ம் அங்கே வாழும் சில பெண்களின் நிலையும் கடினமான போராட்ட வாழ்க்கைதான் மாற்றமேயில்லை. உணவு தட்டுப்பாட்டுக் காலத்தில் கிழங்கு சேகரிப்பது, நீண்ட நடை தண்ணீருக்கென இப்படி... மருத்துவ பராமரிப்பின்றி வாழும் நிலையென கஷ்டமோ கஷ்டம்தான்.

Santhosh said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க.. படிக்க தூண்டுகிறது.. ஹிஹி.. ஆனா படிப்பேனான்னு தெரிலை..

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர். புருனோ,

//நான் சுள்ளிக்காட்டு இதிகாசத்தை முழுவதும் படித்ததில்லை.//

அந்த கள்ளிக்காட்டை முழுசும் படிச்சிருங்க.

//கருவாச்சி காவியங்கள் ஏறத்தாழ அனைத்து அத்தியாயங்களையும் விகடனில் வரும்பொழுது படித்தேன்.

கண்டிப்பாக அதை காவியம் என்று கூறலாம்.

தமிழ் சமுகத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தின் வரலாறு அதில் பதியப்பட்டிருக்கிறது.//

அதனையேத்தான் நானும் எனது முந்திய பின்னூட்டங்களில் சொல்லி வந்திருக்கிறேன். தங்களின் கருத்திர்க்கும், வருகைக்கும் நன்றி.

கப்பி | Kappi said...

பதிவுக்கும் புத்தகத்திற்கும் நன்றி! :)

Thekkikattan|தெகா said...

Meenthulliyaan said...

//"முதியோர் இல்லங்களில்" உறவை இழந்து
ஊரை இழந்து .. //

நீங்க சொல்றது மிக்கச் சரி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். முதியோர்களைப் பற்றி பேசும் பொழுது அன்றைய நாட்களை விட இன்றைய நாட்களில் கொஞ்சம் சுயநலம் மேலோங்கி முதியோர்கள் புறக்கணிக்கப்படுவது அதிகமாக நடந்தேறுவதனைப் போல் தான் உள்ளது. நம்ம பழைய பதிவுகளில் ஒன்றினில் இதனைப் பற்றி பேசியிருப்போம், முடிந்தால் தோண்டிப் பாருங்க.

கிரி said...

நான் இதுவரை எதையும் படித்தது இல்லை :-(

வாய்ப்பு கிடைத்தால் படிக்கிறேன்

Thekkikattan|தெகா said...

தல அனுபவிச்சி எழுதி இருக்கீங்க.. படிக்க தூண்டுகிறது.. ஹிஹி.. ஆனா படிப்பேனான்னு தெரிலை..//

சந்தோஷம், படிப்பீங்கன்னுதானே மெனக்கெட்டு புத்தகம் கொடுத்திட்டுருக்கேன் ஆனா படிப்பேனான்னு தெரியலையேன்னு சொல்லீட்டிகளே ;)). படிங்கப்பா.

கயல்விழி said...

ஆனந்த விகடனில் முன்பு தொடராக வந்த போது கருவாச்சி காவியத்தில் நிறைய சினிமாத்தனம் கலந்திருப்பது போன்ற தோற்றத்தை கொடுத்தது உண்மை தான். பெண்களை அந்த அளவு பொறுமையின் சிகரமாக சித்தரிக்கும் பழக்கம் தேவையற்றது.

வைரமுத்துவின் எழுத்து நடைக்காக படிக்கலாம், முக்கியமாக கருவாச்சி தனியே பிரசவிக்கும் கட்டம்.

Thekkikattan|தெகா said...

வாங்க கயல்விழி,

முதல் முறையா வந்திருங்கீங்க, வணக்கம்.

சினிமத்தனமாக ஏன் தோன்றியிருக்கக் கூடுமென்பதற்கு நமக்கு அது போன்ற போராட்ட வாழ்க்கை பழக்கமில்லாமலோ அல்லது பார்த்திருக்க, கேட்டிருக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருப்பதால் இருக்கலாம். மேலும் சில விபரங்கள் இங்கு பின்னூட்டங்களில் பேசப் பட்டிருக்கிறது.

//பெண்களை அந்த அளவு பொறுமையின் சிகரமாக சித்தரிக்கும் பழக்கம் தேவையற்றது. //

ஏனுங்க அப்படி பொறுமையா இருக்கிறதில ஏதாவது தப்பு இருக்குதுங்களா. அவரு விளக்கின கருவாச்சி 50 வருஷத்திற்கு முன்னாடி வாழ்ந்தவ, அப்படி இருந்திருக்காங்க. ஏன் அவ்வளவு தொலைவு போகணும் என்னோட பாட்டி, அம்மா எல்லாம் நிரம்ப பொறுமைசாலிகளா இருந்து பல விசயங்களில் ஜெயித்து காமிச்சிருக்காங்க.

இன்றும் கிராமத்துப் பக்கம் போனா இது மாதிரி பல கருவாச்சிகள் இருக்குறாங்க. நாம கம்யூட்டருக்கும், கைப்பேசிக்கும் மாறியாச்சி... அது போல எல்லாரும் மாறிட்டாங்களா? இல்லையே.

பெண்கள் எல்லாரும் பொறுமையின் சிகரங்கள் என சொல்லவரல அவர். படைப்பின் நாயகி சாதாரணமான அசாதாரணமான ஆளு. அப்படின்னு இருக்குது.

இதில வைரமுத்து பொறுமைசாலியா ஜோடிச்சு காமிக்கலை இயல்பா எப்படி ஒரு கருவாச்சி இருந்தாளோ அவளை எடுத்து வெளி உலகத்துக்கு காமிச்சிருக்கார், அப்படித்தான் எனக்குத் தோணுது.

கயல்விழி said...

//ஏனுங்க அப்படி பொறுமையா இருக்கிறதில ஏதாவது தப்பு இருக்குதுங்களா. அவரு விளக்கின கருவாச்சி 50 வருஷத்திற்கு முன்னாடி வாழ்ந்தவ, அப்படி இருந்திருக்காங்க. ஏன் அவ்வளவு தொலைவு போகணும் என்னோட பாட்டி, அம்மா எல்லாம் நிரம்ப பொறுமைசாலிகளா இருந்து பல விசயங்களில் ஜெயித்து காமிச்சிருக்காங்க.

இன்றும் கிராமத்துப் பக்கம் போனா இது மாதிரி பல கருவாச்சிகள் இருக்குறாங்க. நாம கம்யூட்டருக்கும், கைப்பேசிக்கும் மாறியாச்சி... அது போல எல்லாரும் மாறிட்டாங்களா? இல்லையே.
//

அந்த கால பெண்கள் வேறு வழி இல்லாமல் பொறுமையாக இருந்தார்கள் என்பது என் கருத்து. பொருளாதார சுதந்திரம் இல்லாத பல பெண்கள், பொருளாதார சுதந்திரம் இருந்தும் தனியே போராட தைரியமில்லாத பெண்கள் தங்கள் வருத்தத்தை, கோபத்தை எல்லாம் பொறுமை என்ற முகமூடி போட்டு அடக்கி வைத்தார்கள்.

கருவாச்சி அந்த காலத்தில் வாழ்ந்த பெண்ணாக இருந்தாலும் கதாநாயகி என்பதால் ஒரு முன்னுதாரணமாக கருதப்படுவார். இப்படிப்பட்ட பாத்திரங்கள் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இது வெறும் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

Thekkikattan|தெகா said...

எனக்கு இது பிடிச்சிருக்கு. :-)

//அந்த கால பெண்கள் வேறு வழி இல்லாமல் பொறுமையாக இருந்தார்கள் என்பது என் கருத்து.//

கொஞ்சனுண்டு உண்மை இருந்தாலும், இது எந்தளவிற்கு உண்மை என்பதனை நான் கூறிய எனது பாட்டியிடமும், என் அம்மாவிடம் கேட்டுத்தான் ஒரு முடிவிற்கு வர முடியும்.

//பொருளாதார சுதந்திரம் இல்லாத பல பெண்கள், பொருளாதார சுதந்திரம் இருந்தும் தனியே போராட தைரியமில்லாத பெண்கள் தங்கள் வருத்தத்தை, கோபத்தை எல்லாம் பொறுமை என்ற முகமூடி போட்டு அடக்கி வைத்தார்கள்.//

பொருளாதாரம் மட்டுமே ஒரு தனிப்பட்ட நபரின் ஆசா பாசங்களையும், குண நலன்களையும் தீர்மானிப்பதில்லை என்றே கருதுகிறேன். பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் தன் இயல்புதனை மாற்றியமைத்துக் கொள்கிறான் என்றால் அவன் இரட்டைத் தன்மையில் உழன்றே மாண்டு போகிறான் என்றுதானே பொருள்.

அவ் காலக் கட்டத்தில் பெண்களும், ஆண்களுக்கும் மேலாகவே குடும்ப பொறுப்புகளை சுமந்தே வந்திருக்கிறார்கள், இங்கே கருவாச்சியும் அவரது தாயிம், ஒரு ஏர்க் கலப்பையின் ஒரு பக்கம் அவர்களிடமுள்ள ஒரே பசுவை ஒரு பக்கமும், மறுபக்கம் கருவாச்சியும் ஏற்று பழுவை இழுக்கும் ஒரு விவரிப்பே பெண்களின் மன வைராக்கியத்தை பறைசாற்றும், வீட்டீலேயேயும், தனிமையிலும் இருந்தே பிள்ளை பெற்றுக் கொள்ளும் அசாத்திய துணிச்சல் அப்ப, இக்கதையில் கருவாச்சி தனியே பிள்ளை பெற்றெடுத்தல்.

அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும், கயல்? இன்று நமக்கு வலி தெரியாம இருக்க எபிட்யூரல் தேவைப் படுகிறது, அல்லது சிசேரியன் இன்னும் வசதி என போய்க் கொண்டிருக்கிறது. சோ, அந்தக் காலத்தில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்று தெரிய வருகிறது.

அப்படியெனில் எது அவர்களை குடும்பம் என்ற ஒரு கட்டுக் கோப்பிற்குள் வைத்திருக்கக் கூடும், இந்த ஆண்கள் இழைக்கும் chauvinism என்ற பொது கருத்தினைத் தாண்டியும்.

இப்பொழுது கொடுக்கும் இந்த பொருளாதார தன்னிரைவு இரு பாலருக்கும் வேண்டுமானல் ஒரு சமசீரான எண்ண ஓட்டத்திற்கு வழிகோணலாம். இருப்பின், இப்பொழுது நடை பெறும் இந்தா போட்டா போட்டியில் நீயா? நானாவில்? இழப்பு என்னவோ குடும்பமென்ற கட்டமைபிற்கும் வருங்கால சந்ததியான குழந்தைகளுக்கும்தான் என்பது என்னோட இன்றைய புரிதல்.

முன்னுதாரனமாக சிந்தித்து ஒரு படைப்பாளி அவன் கதாபாத்திரத்தை படைப்பதில்லை. அப்படி படைப்பதாயிருந்தால்… நம்முடைய இன்றைய சினிமா கதாபாத்திரங்கள்?????

அப்படியே இந்த அனுபவத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்திடுங்க
சிரமம் பார்க்காம :-)

எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை

கயல்விழி said...

//பொருளாதாரம் மட்டுமே ஒரு தனிப்பட்ட நபரின் ஆசா பாசங்களையும், குண நலன்களையும் தீர்மானிப்பதில்லை என்றே கருதுகிறேன். //

பொருளாதாரம் மட்டுமே ஒரு காரணம் என்று சொல்ல மாட்டேன், பொருளாதாரமும் ஒரு காரணம். கல்வியறிவு மற்றொரு முக்கியமான காரணம்.


//நீயா? நானாவில்? இழப்பு என்னவோ குடும்பமென்ற கட்டமைபிற்கும் வருங்கால சந்ததியான குழந்தைகளுக்கும்தான் என்பது என்னோட இன்றைய புரிதல்.//

குடும்ப கட்டுக்கோப்புக்காக பெண்களின் சுயமரியாதையே தொடர்ந்து பலியாக்கப்பட்டு வருவதை இந்திய சமுதாயத்தில் பார்த்து பார்த்து சலித்துவிட்டேன்.


//அவ் காலக் கட்டத்தில் பெண்களும், ஆண்களுக்கும் மேலாகவே குடும்ப பொறுப்புகளை சுமந்தே வந்திருக்கிறார்கள், இங்கே கருவாச்சியும் அவரது தாயிம், ஒரு ஏர்க் கலப்பையின் ஒரு பக்கம் அவர்களிடமுள்ள ஒரே பசுவை ஒரு பக்கமும், மறுபக்கம் கருவாச்சியும் ஏற்று பழுவை இழுக்கும் ஒரு விவரிப்பே பெண்களின் மன வைராக்கியத்தை பறைசாற்றும், வீட்டீலேயேயும், தனிமையிலும் இருந்தே பிள்ளை பெற்றுக் கொள்ளும் அசாத்திய துணிச்சல் அப்ப, இக்கதையில் கருவாச்சி தனியே பிள்ளை பெற்றெடுத்தல்.

அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும், கயல்? இன்று நமக்கு வலி தெரியாம இருக்க எபிட்யூரல் தேவைப் படுகிறது, அல்லது சிசேரியன் இன்னும் வசதி என போய்க் கொண்டிருக்கிறது. சோ, அந்தக் காலத்தில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்று தெரிய வருகிறது.
//

தைரியம் என்று நான் இங்கே குறிப்பிடுவது, உடல் ரீதியான தைரியத்தையோ, உறுதியையோ அல்ல. சமுதாயப்பிரச்சனைகள் என்று வரும் போது பெண்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள். மாடுக்கு பதில் நிலத்தில் உழ உறுதி இருக்கும், தனியே பிரசவம் பாக்க உறுதி இருக்கும் கருவாச்சி, தன்னுடைய கணவன் அடிக்கும் போது திரும்ப அடிக்க உறுதி இருக்காதா?? ஏன் அந்த உறுதியோ அல்லது தைரியமோ கருவாச்சிக்கு இல்லை?

Thekkikattan|தெகா said...

கயல்விழி,

ஹா ஹா ஹா... நீங்க எழுதிய பின்னூட்டத்தை படிக்கும் பொழுது என்னால சிரிப்பை கன்ரோல் பண்ண முடியலங்க. நல்ல, நல்ல நியாயமான கேள்வியா முன் வைச்சிருக்கீங்க.

இப்ப நேரமாச்சு, வீட்டுக்கு ஓடணும் இல்லன்னா பொண்டாட்டி வைவா :-).

கயல்விழி said...

//ஹா ஹா ஹா... நீங்க எழுதிய பின்னூட்டத்தை படிக்கும் பொழுது என்னால சிரிப்பை கன்ரோல்//

தெகா,

நான் நகைச்சுவைக்காக அதை எழுதவில்லை, சீரியசாகவே எழுதினேன். :)

Thekkikattan|தெகா said...

கப்பிஸ்,

//பதிவுக்கும் புத்தகத்திற்கும் நன்றி! :)//

எப்ப வேணாலும் :-). யூ வார் வெல்கம்.

கோவி.கண்ணன் said...

//தன்னுடைய கணவன் அடிக்கும் போது திரும்ப அடிக்க உறுதி இருக்காதா?? ஏன் அந்த உறுதியோ அல்லது தைரியமோ கருவாச்சிக்கு இல்லை?//

கயல்விழி மேடம்,

திருப்பி அடிப்பதுதான் தைரியமா ? கணவரை அடிக்கும் பெண்களை பெண்களே பெண் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனக்கும் நிறைய விசயம் புரிவதில்லை. பெண்கள் தன்னைவிட இளைய ஆணை மணக்க தடையாக இருப்பது சமுகமா ? தனி மனிதர்களா ? எத்தனைப் பெண்கள் தன்னைவிட வயது குறைவான ஆணை மணக்க தயாராக இருக்கிறார்கள் ?

பெண் எப்போதும் தன்னைவிட வயது அதிகமானவர்களையே மணக்க நேரிடுகிறது. நம்ம சமூகத்தில் தப்பு செய்த வளர்ந்த பிறகு அண்ணனை தம்பி அடிக்கவே யோசிப்பான். மனைவி கணவனை அடிக்காமல் இருப்பதற்கு வயதுதான் காரணம் என்று நினைக்கிறேன். கணவன் மீது கோபம் என்றால் குழந்தைகளிடம் காட்டிவிடுகிறார்களே. மாமியாருக்கு உப்பு இல்லாதா பத்திய சோறு கிடைக்கும். ஆக கோபம் எப்படியோ திசைமாறிவிடும் அவ்வளவுதான், பொறுமையாக பூமாதேவி போல இருக்கிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஆக வயது வித்யாசம் தான் யார் அடிவாங்குவது என்பதை தீர்மாணிக்கிறது, கணவனை அடிக்க விரும்பும் பெண்கள் தன்னைவிட இளைய ஆணை மணக்கலாம். :)

Thekkikattan|தெகா said...

//தைரியம் என்று நான் இங்கே குறிப்பிடுவது, உடல் ரீதியான தைரியத்தையோ, உறுதியையோ அல்ல. சமுதாயப்பிரச்சனைகள் என்று வரும் போது பெண்கள் பயந்து ஒதுங்குகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள். மாடுக்கு பதில் நிலத்தில் உழ உறுதி இருக்கும், தனியே பிரசவம் பாக்க உறுதி இருக்கும் கருவாச்சி, தன்னுடைய கணவன் அடிக்கும் போது திரும்ப அடிக்க உறுதி இருக்காதா?? ஏன் அந்த உறுதியோ அல்லது தைரியமோ கருவாச்சிக்கு இல்லை?//

அருமையான கேள்வி உடலளவில் எல்லா திறனுமிருக்கு ஆனா, ஏன் திரும்ப கணவன அடிக்க கை வரமாட்டீங்குது...? சமூகம்(ஏன் இயற்கையும் கூட) என்னாத்தையோ பால்யம்(ஏன், ஜீன்ல கூட?!) முதல் மண்டைக்குள்ளர வைச்சி தைச்சிருச்சோ? ஆனா அது நல்லதுக்கா? கெட்டதுக்கா? ஆனா, உயிரியியல்ல வேற என்னமோ ஈஸ்ட்ரோஷன்னா தன்மைகள் இப்படி இப்படி... ஆண்ட்ரோஷன்னா தன்மைகள் இப்படி இப்படின்னு வரையறுத்து வைச்சிருக்காங்க அதுக்கும், இந்த மாதிரி கருவாச்சிகள் பின் வாங்கி போறதுக்கும் எமோஷனலாவே சில காரணங்கள் இருக்கலாமோ (டோபமைன் போன்ற வஸ்த்துக்கள்)? அதாவது சமூகம் வைச்சி தைச்சதையும் தாண்டி?

நான் குரங்குகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கெண்டிருந்த சமயங்களில் கூட ஆண் குரங்களுக்குள் ஆல்ஃபா சண்டை வரும் பொழுது, இரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொண்டு தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டாலும், பெண் குரங்குகள் அப்படி குடுமி பிடி சண்டை நிகழ்த்திக் கொள்வது கிடையாதே, ஏன்? அப்படியும் ஒரு குரூப்பில் 15 குரங்குகள் இருக்கிறதென்றால் அதனில் 12 கிட்டத்தட்ட பல பருவத்தில் இருக்கும் பெண் குரங்குகளே இருந்தும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதோ ஆண் குரங்கை அடித்து துவம்சம் பண்ணுவதோ போலவோ எனக்குக் காண கிடைக்கவில்லை, என்ன காரணமாக இருக்கலாம்?

ஒரு பேச்சுக்கு கேக்கிறேன், நீங்க பாட்டுக்கு ஏதாவது தப்பா எடுத்துக்காதீங்க:-).

இங்கே மேற்கத்திய நாடுகளில் கூட எல்லா பெண்களும், கணவன்-மனைவிக்கிடையே அந்த மாதிரி பேச்சு வார்த்தை - அடி, தடி (அந்த மாதிரி குணநலன்களைக் கொண்ட ஜோடிகளுக்கிடையே கூட)நடைபெறும் பொழுது எப்பொழுதாவது கணவன் ப்ளாக் ஐ கொடுக்கும் பொழுது திரும்ப கொடுக்கிற மாதிரி தெரியலையே, அதுவும் ஏன்?

இப்ப நம்ம அப்பாவே(இதில் அம்மாவும் அடக்கம்) நல்லா எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமா தெரியற மாதிரி ஒரு தவறைச் செஞ்சாலும், நல்லா வளர்ந்த பிள்ளைகள் படார்னு இழுத்து ஒரு அறை விடணுமின்னு தோன்றதில்லையே ஏன்?

ஆனா, நீங்க சொன்ன சில சமூகக் கோளாறுகளும் இருக்கு, ஆனா, பதிவர் கோவி. கண்ணன் சில கேள்விகள் கேட்டிருக்கார் இந்த வயது வித்தியாசத்தில் நம் நிலை என்னான்னு அதுவும் யோசிக்கிற மாதிரிதான் இருக்குது. படிச்சிட்டு சொல்லுங்க, பேசுவோம்.

தருமி said...

//பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் தன் இயல்புதனை மாற்றியமைத்துக் கொள்கிறான் என்றால் அவன் இரட்டைத் தன்மையில் உழன்றே மாண்டு போகிறான் என்றுதானே பொருள்.//

இல்லையா பின்னே .. ? நீங்கள் சொல்வது போல் இரட்டைத்தன்மையில்லை..நாம் ஒவ்வொருவருமே பன்முகத்தன்மையில்தானே நம் வாழ்க்கையை வாழ்கிறோம்..இல்லையா. நம் ஒவ்வொருவருக்கும்தான் எத்தெத்தனை முகங்கள்.


//அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும், கயல்? ..... சோ, அந்தக் காலத்தில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்று தெரிய வருகிறது.//

அவர்களே சொல்லிவிட்டார்கள் நீங்கள் சொல்லும் தைரியமும் அவர்கள் சொல்லும் மனத்திண்மையும் வேறு வேறு என்று.

நீங்கள் சொன்ன genes + அதோடு சமூகம் தொடர்ந்து பெண்களுக்குக் குடும்பங்களில் கொடுத்துள்ள இடம் அல்லது கொடுக்காமலிருந்த பல சமூக உரிமைகள் - இவைகளினாலேயே எழும் பெண்களின் நிலையைப் பற்றித்தான் கயல் இந்தக் கேள்விகளை -நியாயமான கேள்விகளை - எழுப்புகிறாரென நினைக்கிறேன்.

நீங்கள் கூட //ஏனுங்க அப்படி பொறுமையா இருக்கிறதில ஏதாவது தப்பு இருக்குதுங்களா.// என்று கேட்கும்போது அந்தப் பொறுமையை ஒரு கட்டாயச் சுமையாகப் பெண்கள் மேல் ஏற்றுகிறீர்கள் என்பது தெரியவில்லையா?

//குடும்ப கட்டுக்கோப்புக்காக பெண்களின் சுயமரியாதையே தொடர்ந்து பலியாக்கப்பட்டு வருவதை...// நிதர்சனங்களை உரித்துக் காட்டும், ஆண் வர்க்கத்தைத் தட்டிக் கேட்கும் வலிய கேள்வியாக இதை நினைக்கிறேன். வலி தெரிகிறது ...

Thekkikattan|தெகா said...

//நான் நகைச்சுவைக்காக அதை எழுதவில்லை, சீரியசாகவே எழுதினேன். :)//

நான் நகைச்சுவையாக இருந்ததென சொல்ல வந்தது, ஏன் திரும்ப கருவாச்சி இழுத்து ரெண்டு கொடுத்திருக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதைப் படிச்சவுடன் அட அதெப்படி இருந்திருக்குமின்னு நினைச்சுப் பார்க்கும் பொழுது வந்த நகைப்பும், உண்மையாக நீங்க நிறைய உரைக்கும் கேள்விகளை கேட்டதும் அதனை படிக்கும் பொழுது எழுந்த ஆச்சர்யம் கலந்த சிரிப்பு, அது.

சொல்றேன் மேலும் பின்னாலே.

கயல்விழி said...

//கயல்விழி மேடம்,

திருப்பி அடிப்பதுதான் தைரியமா ? கணவரை அடிக்கும் பெண்களை பெண்களே பெண் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனக்கும் நிறைய விசயம் புரிவதில்லை. பெண்கள் தன்னைவிட இளைய ஆணை மணக்க தடையாக இருப்பது சமுகமா ? தனி மனிதர்களா ? எத்தனைப் பெண்கள் தன்னைவிட வயது குறைவான ஆணை மணக்க தயாராக இருக்கிறார்கள் ?

பெண் எப்போதும் தன்னைவிட வயது அதிகமானவர்களையே மணக்க நேரிடுகிறது. நம்ம சமூகத்தில் தப்பு செய்த வளர்ந்த பிறகு அண்ணனை தம்பி அடிக்கவே யோசிப்பான். மனைவி கணவனை அடிக்காமல் இருப்பதற்கு வயதுதான் காரணம் என்று நினைக்கிறேன். கணவன் மீது கோபம் என்றால் குழந்தைகளிடம் காட்டிவிடுகிறார்களே. மாமியாருக்கு உப்பு இல்லாதா பத்திய சோறு கிடைக்கும். ஆக கோபம் எப்படியோ திசைமாறிவிடும் அவ்வளவுதான், பொறுமையாக பூமாதேவி போல இருக்கிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஆக வயது வித்யாசம் தான் யார் அடிவாங்குவது என்பதை தீர்மாணிக்கிறது, கணவனை அடிக்க விரும்பும் பெண்கள் தன்னைவிட இளைய ஆணை மணக்கலாம். :)//

திரும்ப அடிப்பது தற்காப்புக்காக. ஒரு பூச்சியை சீண்டினால் கூட அது தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கும். உயிருள்ள பெண் தற்காப்பு முயற்சிக்காக ஏதும் செய்யக்கூடாதா? இது அநியாயம் இல்லையா? சக மனிதரை அதுவும் தன்னை மட்டுமே நம்பி வந்த மனைவியை அடிக்கும் மனிதன் மனிதனே அல்ல, மிருகம்.
பெண்கள் பொறுமையின் சிகரம் இல்லை என்பதால் தான் கருவாச்சி பாத்திரத்தில் செயற்கைத்தனம் இருப்பதாக குறிப்பிட்டேன்.

வயதில் இளைய கணவரை திருமணம் செய்துக்கொண்டால் மட்டும் அடிக்கலாமா? அதுவும் ரொம்ப தவறு. கணவரோ, மனைவியோ எந்த வயதாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் அடிப்பதை சரி என்று சொல்லவே மாட்டேன்(தற்காப்பு நீக்கமாக).

கணவரை அடிக்க விரும்புவது என்பது வேறு, அடிக்கும் கணவரிடம் இருந்து தற்காப்புக்காக திரும்பத்தாக்குவது என்பது வேறு. இரண்டுக்கும் வித்யாசம் புரியும் என நம்புகிறேன்.

கயல்விழி said...

//பெண்கள் தன்னைவிட இளைய ஆணை மணக்க தடையாக இருப்பது சமுகமா ? தனி மனிதர்களா ? எத்தனைப் பெண்கள் தன்னைவிட வயது குறைவான ஆணை மணக்க தயாராக இருக்கிறார்கள் ?
//

இந்திய சமுதாயத்தில் வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்வது வழக்கத்தில் இல்லை. வழக்கத்தை மீற நிறைய பெண்களுக்கு துணிவு இருப்பதில்லை, சிலரை தவிர்த்து.

ஒரு கேள்வி, இங்கே ஏன் வயதில் இளைய கணவர் கான்செப்ட் வரவேண்டும்? வயதில் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் கணவரை/மனைவியை அடிப்பது ரொம்ப தவறே!

கயல்விழி said...

தெகா,

இரண்டும் கலந்த கலவை என்றே படித்தேன்(நினைத்தேன் என்று சொல்லி ப்ளேஜரைஸ் பண்ண விரும்பவில்லை). அதாவது ஹார்மோன்கள் + சமுதாயம் இரண்டும் சேர்த்து பெண்களை ரொம்ப அக்ரெசிவாக்காமல் தடுக்கிறது. ஆனால் தற்காப்புக்காக பல சமயங்களில் பெண்களுக்கு அசாத்திய தைரியம் வந்து ரொம்ப அக்ரெசிவாக நடந்திருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் பல உண்டு.

//இங்கே மேற்கத்திய நாடுகளில் கூட எல்லா பெண்களும், கணவன்-மனைவிக்கிடையே அந்த மாதிரி பேச்சு வார்த்தை - அடி, தடி (அந்த மாதிரி குணநலன்களைக் கொண்ட ஜோடிகளுக்கிடையே கூட)நடைபெறும் பொழுது எப்பொழுதாவது கணவன் ப்ளாக் ஐ கொடுக்கும் பொழுது திரும்ப கொடுக்கிற மாதிரி தெரியலையே, அதுவும் ஏன்? //

நீங்க மேல் நாட்டைப்பற்றி கேட்டீங்களே, இது நல்ல கேள்வி. உண்மைத்தான், மேல் நாட்டு ஆண்கள் அடிக்கும் போது பெண்கள் அதிகம் அடிக்கமாட்டார்கள், ஆனால் உடனே 911 கூப்பிடுவார்கள். 5- 10 நிமிடத்தில் போலீஸ் வந்து மீதியை கவனித்துக்கொள்ளும். சட்டம் என்ற வலுவான ஆயுதம் மேல்நாட்டு பெண்களிடம் இருக்கிறது, அதை பயன்படுத்தவும் தெரியும். கணவர் அடிக்கிறார் என்றால் போலீஸின் உதவியோடு ஏதாவது பாதுக்காப்பான இடத்துக்கு சென்று தங்கவும், ரிஸ்ட்ரிக்ஷன் ஆர்டர் வாங்கவும் இங்கே வசதி இருக்கிறது.

ஆனால் நம்ம கருவாச்சிகள்? எத்தனை அடித்தாலும் பேசாமல் இருக்கவேண்டும் இல்லையா?

கயல்விழி said...

//பெண் குரங்குகள் அப்படி குடுமி பிடி சண்டை நிகழ்த்திக் கொள்வது கிடையாதே, ஏன்? அப்படியும் ஒரு குரூப்பில் 15 குரங்குகள் இருக்கிறதென்றால் அதனில் 12 கிட்டத்தட்ட பல பருவத்தில் இருக்கும் பெண் குரங்குகளே இருந்தும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதோ ஆண் குரங்கை அடித்து துவம்சம் பண்ணுவதோ போலவோ எனக்குக் காண கிடைக்கவில்லை, என்ன காரணமாக இருக்கலாம்?//

எந்த ஆண் குரங்கு குடித்துவிட்டு பெண் குரங்கை போய் அடிக்கிறது? ஈகோவுக்காக அடிக்கிறது? சொல்லுங்கள். அப்படி ஆண் குரங்கு செய்யட்டும், பெண் குரங்கு அக்ரெசிவாக மாறுவதை பார்க்கலாம்.

சமீபத்தில் டிஸ்கவரியில் பார்த்த நிகழ்ச்சியில் கூட ஒரு ஆண் சிங்கத்தை இரண்டு/மூன்று பெண் சிங்கங்கள் துரத்தி அடித்ததை பார்த்தேன். ஆபத்து என்று வரும்போது பெண்களும் அக்ரெசிவ் ஆகலாம்/ஆவார்கள்.

கயல்விழி said...

//நிதர்சனங்களை உரித்துக் காட்டும், ஆண் வர்க்கத்தைத் தட்டிக் கேட்கும் வலிய கேள்வியாக இதை நினைக்கிறேன். வலி தெரிகிறது ...//

பெண்கள் அனைவருமே இந்த வலியை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

Thekkikattan|தெகா said...

சூப்பர்ப் காமெண்ட்ஸ் கயல்விழி. நிறைய உண்மைகளை வெளியே இழுத்து வந்து போட்டுடைத்திருக்கிறீர்கள். மிச்ச மீதிய நாளக்கி வந்து சொல்றேன்.

ஏன் லேட்டாகவே வாரீங்க, இப்ப எமக்கு வூட்டுக்குப் போகும் நேரம் நெறுங்கிடுச்சு?

கயல்விழி said...

//ஏன் லேட்டாகவே வாரீங்க, இப்ப எமக்கு வூட்டுக்குப் போகும் நேரம் நெறுங்கிடுச்சு?
//

நீங்க ஏன் சீக்கிரமாவே வீட்டுக்கு போறீங்க? எனக்கு 3.30 மணி தான் ஆகிறது.

Thekkikattan|தெகா said...

//நீங்க ஏன் சீக்கிரமாவே வீட்டுக்கு போறீங்க? எனக்கு 3.30 மணி தான் ஆகிறது.//

நான் இருக்கிறது கிழக்கு கடற்கரையோர நேரம்... மூணு மணி நேரம் உங்களுக்கு முன்னாடி :-). நாளைக்கிப் பேசலாம்.

கோவி.கண்ணன் said...

//வயதில் இளைய கணவரை திருமணம் செய்துக்கொண்டால் மட்டும் அடிக்கலாமா? அதுவும் ரொம்ப தவறு. கணவரோ, மனைவியோ எந்த வயதாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் அடிப்பதை சரி என்று சொல்லவே மாட்டேன்(தற்காப்பு நீக்கமாக).
//

கயல்விழி மேடம்,

அடிப்பது, அடிவாங்குவது சரியா தவறா பற்றி ... இரண்டுமே தவறு என்று தான் சொல்வேன்.

ஏன் திருப்பி அடிப்பதில்லை என்பதற்கான காரணத்தைத் தான் சொன்னேன்ன்.
:)

Thekkikattan|தெகா said...

தருமிக்கும், கயல்விழிக்கும் சேர்த்தே இந்தப் பின்னூட்டம்...

//இல்லையா பின்னே .. ? நீங்கள் சொல்வது போல் இரட்டைத்தன்மையில்லை..நாம் ஒவ்வொருவருமே பன்முகத்தன்மையில்தானே நம் வாழ்க்கையை வாழ்கிறோம்..இல்லையா. நம் ஒவ்வொருவருக்கும்தான் எத்தெத்தனை முகங்கள்.//

இரட்டைத்தன்மையாக நாம் நம் தினசரி வாழ்வில் கணவனாக, பெற்றோராக அதாவது உறவு முறைகளில் பெறுப்பேற்று அவ் முகமூடி தரித்தல்(புற ரோல்களாக) என்பது தவிர்க்க முடியாததே, ஆகினும், குறைந்த பட்சம் அதிலும் முழுமையாக தன்னோட இயல்பு மாறாமல் இருப்பது என்பது முழுமையை நாம் உணர்வதற்கு ரொம்ப அவசிமில்லையா? அதிலும், கணவன் மனைவியிடத்தோ அல்லது பிள்ளைகளிடத்தோ என்ன பாசாங்கு தேவைப்படுகிறது?

முகமூடியற்ற வாழ்வே கிடையாது என்பதனை ஒப்புக்கொள்கிறேன்.

//நீங்கள் சொன்ன genes + அதோடு சமூகம் தொடர்ந்து பெண்களுக்குக் குடும்பங்களில் கொடுத்துள்ள இடம் அல்லது கொடுக்காமலிருந்த பல சமூக உரிமைகள் - இவைகளினாலேயே எழும் பெண்களின் நிலையைப் பற்றித்தான் கயல் இந்தக் கேள்விகளை -நியாயமான கேள்விகளை - எழுப்புகிறாரென நினைக்கிறேன்.//

கொடுக்காமல் மறுக்கிற சமூக உரிமைகள் அது காலந் தொட்டே நிகழ்ந்து வருகிறது, அது கண்கூடு. ஏன், அண்மையில் கூட அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் எல்லாத் தகுதிகளுமிருந்து ஹில்லரியை அந் நாட்டு ஆண்ட்ரோஷன்களும், சில ஈஸ்ரோஷன்களுமே மறுத்து அவருக்கு இறுதி வாய்ப்பை கொடுக்கவில்லையே. அதிலும் குறிப்பாக நம்மூர் குடும்பப் பெண்களின் நிலை சொல்லவே வேண்டாம். கயலும், நீங்களும் குறிப்பிட்ட படியே பொருளாதாரமும், கல்வியறிவு(உலக எதார்த்தம்) பெற்றவர்களும் தமக்கு வேண்டியதை கொய்து கொள்ளக் கூடிய ஒரு சூழல் திரண்டே வருகிறது, அதுவும் நம்மூரில் இன்று கண்கூடு.

//நீங்கள் கூட //ஏனுங்க அப்படி பொறுமையா இருக்கிறதில ஏதாவது தப்பு இருக்குதுங்களா.// என்று கேட்கும்போது அந்தப் பொறுமையை ஒரு கட்டாயச் சுமையாகப் பெண்கள் மேல் ஏற்றுகிறீர்கள் என்பது தெரியவில்லையா?//

நான் கேட்ட அந்த "ஏனுங்க..." விஷயம், பொறுமையா இருக்கிறதினாலே பல விசயங்கள் நாட்பட நாட்பட உண்மையான, நியாயமான விசயங்கள் வெளிப்படும் அந்த பொறுமை காத்ததுனூடே எழுந்த நன்மைகளை கருத்தில் கொண்டே கேட்கப் பட்டது. உ.தா; கணவன் மனைவிக்கிடையே எழும் "நேரம் சார்ந்த" புரிதலின்மை இதனில் ஜோடிகளில் யாராவது ஒருவர் சிறிது பொறுமையை கையாண்டால் கூட விளைவு நீண்ட கால குடும்ப மகிழ்வு, இல்லையா? அதனால் இந்த பொறுமை என்பது இருபாலருக்கும் பொறுந்தும். வலிய எல்லாம் வைத்து எந்த குறிப்பிட்ட பாலின் மீதும் வைத்து ஒருதலை பட்சமாக திணிக்க வேண்டியதில்லை, ஆனால் வழியுறுத்தலாம் பொறுமையின் இன்றியமையாமையை.

Unfortunately, நம்மோட சமூகத்தில சில சமயம் ஒருதலைப் பட்சமாகிப் போகிறது. உ.தா: வரதட்சினையும் கொடுத்து வசவும் வாங்கிக் கட்டிக்கொண்டு வாழ்ந்து சாவது...

//நிதர்சனங்களை உரித்துக் காட்டும், ஆண் வர்க்கத்தைத் தட்டிக் கேட்கும் வலிய கேள்வியாக இதை நினைக்கிறேன். வலி தெரிகிறது ...//

அது புரிந்ததாலே மேற்கொண்டு எந்த விளக்கமும் தேவையில்லை என்பதனை கருத்தில் கொண்டு இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன். வலி நன்றாகவே உணரப் பட்டிருப்பதால்.

Anonymous said...

அழகான விமர்சனம். இவ்வளவு தாமதமாய் வாசித்தோமே என்று இந்த புத்தகத்தை கையில் எடுத்ததும் உணர்ந்துக் கொண்டேன். ஆனாலும் இவ்வளவு சோகமும் இருக்குமா என்று நினைக்கத் தோன்றியது.

Related Posts with Thumbnails