Monday, April 06, 2009

கண்டுபிடி... கண்டுபிடி டா...

"ஏன், உண்மைய பேசினா இப்படி பிரச்சினை வருது..."

"எனக்குப் பிடிச்ச மாதிரி நான் இருந்தாவோ, அல்லது நடந்துகிட்டாவோ ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க..."

"ச்சே, குழந்தையாவே இருந்திருக்கக் கூடாதா..."

இப்படியெல்லாம் எப்போதாவது ஒரு சூழல்ல வளர்ந்து, தினப்படி வாழ்க்கையை ஓட்டுற எவருக்கும் தோணியிருக்கலாம். குழந்தைகளாக இருக்கிறதில பல வசதிகள் இருக்கு. தனக்குன்னு எந்த ஒரு இமேஜும் இல்லாம எதிர் தரப்பில நடக்கிறதின் மறு பிரதிபலிப்பா மனசில என்ன தோணுதோ அத அப்படியே எதிரொலிச்சு வாழ்வாங்க. ஆனா, வாழ்க்கையென்கிற அனுபவ சேகரிப்பு பயணத்தில் பிரயாணிக்கும் பொழுது, நம்மின் அடிப்படை குணாதியசங்களை கொஞ்சம் கொஞ்சமா ஏற்கெனவே நிகழ்வுற்ற அனுபவங்களினூடாக வைச்சு தைச்சு சில பல நல்ல விசயங்களை இழந்துட நேரிடுகிறது.

இப்படியாக என்னய அசை போட வைச்சது அகநாழிகை வலைத்தளத்தில் படிக்க நேர்ந்த இந்தப் பதிவும், அந்தப் பதிவிற்கு வந்த தண்டோராவின் பின்னூட்டமும்தான். அதில அவர்கள் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளை நாம் கிட்டத்தட்ட ஏதோ விதத்தில் நல்ல வளர்ப்புச் சூழலை கொடுத்து அவர்களின் மண்டையை வறண்டு போகாமல் வைத்திருக்கச் செய்யும் பொழுது பல இடங்களில் அது போன்ற பண்புகளை காண நேரிடலாம்.

இதனில் ஒரு குழந்தை, தன் தந்தை தவறுதலாக மேலோட்டமாக தான் (குழந்தை) எழுதியதாக ஒரு சில வார்த்தைகளை மிகைப்படுத்தி எழுதியதின் பொருட்டு, அத் தந்தையிடமே நான் அப்படி கூறவே(எழுதவே) இல்லையே என்று நிரூபிப்பதும், அதனை தந்தையும் (பெரிய விசயமாக)உணர்ந்து பொது இடத்தில் வாசகர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து தான் வருந்துவதாக முன் வைத்திருந்தார். அதில் உள்ள "திறந்த வெளி கற்றலுக்கான" அடிப்படை விசயம் எனக்குப் பிடித்திருந்தது.

அது போலவே, தண்டோராவின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருந்த மழை காலத்து நிகழ்வுகள் ஒரு அடல்ட் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்குமான வண்ணங்களை பிரித்து காட்டியிருந்தது. தண்டோரா அதனை இப்படியாக போட்டிருந்தார் ... "குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகும்,விசித்திரமும் வெள்ளந்தியாய் இருக்கிறது...."

அதனை படித்தவுடனேயே என்னுள் எழுந்த சில பால்ய காலத்து ஆசைகள் எப்படி என்னுடைய பெற்றவர்களின் மனத்தினுள் கலக்கத்தினை அதிகரித்திற்கக் கூடும் என்று ஒரு சிறு கொசுவத்தி.

நம் சொந்த வாழ்க்கையினை கொண்டு நினைத்துப் பார்க்கும் பொழுது வாழ்வின் அனைத்து தேவைகளும் ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷத்தினை தருவிக்கக் கூடியதாக, பெருத்த பொருளாதார செலவுகளுக்கிடையே அமைத்துக் கொள்ளும்யாவும் வீடு, கார், தொலைக்காட்சிப் பெட்டி இத்தியாதிகள்., இலவசமாக இயற்கை அளிக்க வல்ல சந்தோஷ நிமிடங்களை திருடிச் செல்கிறது என்பதனை நினைவூட்டியது.

ஊரில் பருவமழை தொடங்கி அது அடை மழையாக பரிணமிக்கும் பொழுது அன்றைய சிறுவர்களான எங்களுக்கு இருந்த மன மகிழ்வோ இன்று ஐமாக்ஸ் தியேட்டரில் அமர்ந்து பையனுடன் படம் பார்க்கும் நிகழ்வினால் கிடைக்கும் கேளிக்கையை விட அதிகமானதாக எண்ணச் செய்கிறது. அந்த அடை மழையின் பொருட்டு பள்ளி விடுமுறை, எல்லாரும் வீட்டில் ஒன்றாக இருக்கக் கூடிய நிகழ்வு, சிறப்பான உணவு பதார்த்தங்கள்(சோளம், மரவள்ளிக் கிழங்கு அவியல், வெள்ளரிப் பழம்...), ஜன்னலின் வழியாக காணக் கிடைக்கும் காட்சி, மழையை ஒட்டிய சம்பாஷனைகள், குளங்கள் நிரம்பி வீட்டிற்கும், சாலைக்கும், குளக்கரைக்குமான அடையாளங்கள் மறைந்து மீன் வீட்டு வாசலில் துள்ளித் திரியும் பொழுது அதிலிறங்கி மீன் பிடித்தல். தொப்பலாக நனைந்த செய்தித்தாள்களில் படகு கட்டமுடியாதென, வீட்டுப் பாட நோட்டுகளின் பக்கங்கள் காணாமல் போவதும் அன்றுதான். படகுப் போட்டி அரை கிலேமீட்டர் தாண்டியும் நடைபெறுவதில் உள்ள சுகம்...

அளவிற்கரிய இலவச இணைப்புகளாக ஒரு மழையின் நிகழ்வு இப்படியாக குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் தருணத்தில், அதற்கு நேர் எதிர் மாறாக வளர்ந்தவர்களின் உலகத்தில்தான் எத்தனை கவலைகள்? குழந்தைகளின் மன உலகத்தில் சஞ்சரிக்க முடியாமல் மரத்துவிடச் செய்கிறது! ஓட்டு வீடாகவோ, அல்லது மண் பூச்சாக இருந்துவிடும் சமயத்தில் ஒழுகும் சூழலை முகம் கொடுக்க வேண்டும், பிறகு எங்கே மண் சுவர் நமத்து உட்கார்ந்து விடுமோ என அச்சம் கொள்ள வைக்கும் மறுபுறம். இக் கவலைகள் அவசியமான ஒரு அவதி என்றாலும் இதனில் நாம் இழந்தவைதான் எத்தனை எத்தனை?

இது போன்றே அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மிக எளிமையாக கிட்டே நெருங்கிவிடும் இயல்பு குழந்தையோடது, ஆனால் வயதினூடாக வரும் அனுபவம் பல முகங்களை தரிக்க வைக்கிறது நமது உலகத்தில். இதனால் எத்தனை விதமான எதிர்மறை குண இயல்புகள் இருக்க முடியுமோ அத்தனை விதமான இயல்புகளிலும் கிஞ்சித்தேனும் இருந்தால்தான் தப்பிப் பிழைப்பதற்கேனும் உதவுமென்று நம்மையறிமாலயே அவைகள் நம்மிடத்தே தஞ்சமடைந்துவிடுகின்றன.

ஆக மொத்தத்தில யார் இறுக்கம் அண்டவிடாமல், வெளிப்புற அடையாளங்களே தானாக நினைச்சு அப்படிச் சிரிச்சா, இங்கே இப்படி நின்னா, உட்கார்ந்தா, பேசினா தன்னோட இமேஜ் பாதிச்சிருமின்னு இல்லாம, மனசுக்குள்ளர ஒரு ஓரமா குத்த வைச்சு உட்கார்ந்திருக்கிற அந்த டவுசர் போட்ட கோபாலோ, இல்ல பாவாடை கட்டின சுகந்தியோ அந்த சிறுசுகளின் குசும்புக்கு இடம் கொடுக்க அனுமதிக்கிறவங்கதான் தழுக், மொழுக்குன்னு கண்களில் குறும்பும், முகத்தில் தவழும் பொன் சிரிப்போடும் இருக்கிற மக்களோன்னு நினைக்க வைக்குது!

மத்த சிடுமூஞ்சி சின்னப்பன், சின்னாக்காவெல்லாம் தன்னுள் இருக்கிற சின்னபுள்ளதனத்தை தொலச்சிட்டு இல்லாததை தேடி அலையற ஒரு கூட்டமோன்னு நினைக்கத் தோணுது. நான் அப்பப்போ யாராவது பெரிய தொப்பையும், இமேஜுமா இருக்கிறவங்கள பார்த்தா நினைச்சுப்பேன் இந்தாளு ஒரு நா டவுசரை போட்டுக்கிட்டு சக தோழனோட "எங்க உன் டவுசர் பாக்கெட்ட காமீ டா..." ன்னு சொல்லி சேஷ்டை பண்ணிக்கிட்டு திரிஞ்ச ஆளாத்தானே இருப்பாருன்னு நினைச்சா... சே, பாவத்தே!

இந்தப் பதிவை வாசிச்சிட்டு நீங்க உங்க புற அடையாளத்தை அந்தப் பக்கமா தள்ளி வைச்சிட்டு சிறு பிள்ளையாக குறைந்த பட்சம் ஒரு ரெண்டு நாளாவது உங்க உண்மையான இயல்பினோடு இருந்து பாருங்களேன், எத நீங்க இழந்துட்டே வாரீங்கன்னு காண முடியும். முடிஞ்சா, அத இங்கனயும் கிறுக்கி வைங்க தெரிஞ்சுக்குவோம்.

17 comments:

Raji said...

A Timely post thekka. It also refelects my thought process these days. We all have a child within us...:-) illaya. I think as a grown up adult we need to be more aware of the situation but not serious. The "image" concept comes when when we start expecting recognition from the world. But we all also forget we can never satisfy the entire world. In my experience when we just be ourselves, the child will come out. Experiences need not take away this, exps can bring more awareness "what to do and what not to do". thats the advatage of being an adult...unfortunately we have lost the adv of both being a child and an adult.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் இன்னும் சின்னப்புள்ளைதாம்ப்பா..
நேத்துக்கூட கண்ணாம்பூச்சி விளையாண்டேனே.. என் பையனோட.. :))

Thekkikattan|தெகா said...

Hi Raji,

//A Timely post thekka. It also refelects my thought process these days.//

அப்படியா, நன்றி :-)!

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே, ராஜி சொன்னது - அதில் உண்மையுள்ளது :D.

அப்படியே முடிஞ்சா இந்தப் பதிவும் பாருங்க , கிட்டத்தட்ட அதே லைன் கொஞ்சம் ஆழமா போயிருக்கும்... Innocence-Is-Fountain-in-Finding Newness

தருமி said...

சின்னப் பிள்ளையோடு சின்னப் பிள்ளையாகணும்னா ரொம்ப ஈசி'ங்க! தாத்தாவாகிடணும் .. ரெண்டு மூணு பேரப் பிள்ளைகளோடு மல்லுக் கட்டணும். அம்புடுத'ன் ... சிம்பிள் !!

கவிதா | Kavitha said...

// தனக்குன்னு எந்த ஒரு இமேஜும் இல்லாம எதிர் தரப்பில நடக்கிறதின் மறு பிரதிபலிப்பா மனசில என்ன தோணுதோ அத அப்படியே எதிரொலிச்சு வாழ்வாங்க. //

:))) ம்ம்ம் நான் இன்னும் இப்படித்தான் இருக்கேன்.. ஆனா பார்க்கிறவங்க தான் .. ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. .அதையும் நான் கண்டுக்கிறது இல்ல.. :))) இப்படி இருப்பதால் என்ன ஒரு வசதின்னா.. குழந்தைகள் போலவே அடிவாங்கிய அடுத்த நிமிடம் சிரிக்க முடியும் !! ஈ'ன்னு :) அதனாலேயே அப்படியே இருந்துவிட நான் நினைக்கிறேன் :)))

Thekkikattan|தெகா said...

நான் இன்னும் சின்னப்புள்ளைதாம்ப்பா..
நேத்துக்கூட கண்ணாம்பூச்சி விளையாண்டேனே.. என் பையனோட.. :))//

it seems like the parenhood well at play... enjoy :-).

காட்டாறு said...

Most people are kids when they play with kids and be with kids (Just like Muthu and Dharumi). But the essence of this post I guess is... be a kid in everything and use your experiences to be aware of your "self". Right Thekki?

Thekkikattan|தெகா said...

//சின்னப் பிள்ளையோடு சின்னப் பிள்ளையாகணும்னா ரொம்ப ஈசி'ங்க! தாத்தாவாகிடணும் .. ரெண்டு மூணு பேரப் பிள்ளைகளோடு மல்லுக் கட்டணும். அம்புடுத'ன் ... சிம்பிள் !!//

எவ்வளவு எளிமையான வழி, தருமி! ஆனா, தாத்தாவா இருந்து குழந்தைகளோட குழந்தைகளா ஆகுறதுக்கும், பெத்தவைங்களா இருந்து குழந்தைகளாக ஆகுறதுக்கும் கொஞ்சம் வித்தியாசமிருக்குமோ... :)) எப்படின்னு கேளுங்க, தாத்தா-பாட்டிகளுக்கு எந்த கவலையுமில்லை எத போட்டு உடைக்கப் போவுதோ, எம்பூட்டு செலவு வைக்கப் போவுதோன்னு, ஏன்னா நீங்க அங்கே முழுமையா இருக்கிறதால எல்லாத்தையும் மறந்துட்டு இருக்கலாம், அப்படியா :-))) ??

அப்படியே காட்டாறு சொல்லியிருக்கிறதையும் கவனியுங்க...

தருமி said...

// be a kid in everything and use your experiences to be aware of your "self". //

thank you, காட்டாறு.

பின்னூட்டம் போட்டதுமே தெக்கி சொன்ன விஷயங்களைவிட்டு விலகி பின்னூட்டம் போட்டுட்டோமேன்னு நினச்சேன்..

sorry, guys

Thekkikattan|தெகா said...

Thekkikattan|தெகா said...
//:))) ம்ம்ம் நான் இன்னும் இப்படித்தான் இருக்கேன்.. ஆனா பார்க்கிறவங்க தான் .. ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. .அதையும் நான் கண்டுக்கிறது இல்ல.. :))) //

இது வரைக்கும் தெரிஞ்சுப் போச்சா :-)) எல்லாருக்கும். ஏன் கண்டுக்கிறீங்க நம்ம நாள் நமக்குன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

//இப்படி இருப்பதால் என்ன ஒரு வசதின்னா.. குழந்தைகள் போலவே அடிவாங்கிய அடுத்த நிமிடம் சிரிக்க முடியும் !! ஈ'ன்னு :) அதனாலேயே அப்படியே இருந்துவிட நான் நினைக்கிறேன் :))//

அப்படியே இருந்திருங்க...! எப்பொழுதும். ஒரு வியாதியும் அண்டாதாம். :-). எதுக்கும் பித்ஸ்கிட்ட சொல்லி நாம ஒரு இரண்டு, மூணு இடங்கள் போட்டு வைச்சிடச் சொல்லிடுவோம் :-P.

மங்கை said...

//சின்னப் பிள்ளையோடு சின்னப் பிள்ளையாகணும்னா ரொம்ப ஈசி'ங்க! தாத்தாவாகிடணும் .. ரெண்டு மூணு பேரப் பிள்ளைகளோடு மல்லுக் கட்டணும். அம்புடுத'ன் ... சிம்பிள்//

இது சூப்பர்...:-)..உண்மை உண்மை தருமி சார்..

theka the most important and a beautiful truth is that they are non-judgmental...

they are just they..they live every moment.. they are dare devils.. they dont have any pre-conceived notions... they dont have any hidden agenda...this is what makes them beautiful

Thekkikattan|தெகா said...

டாக்டர்... வாங்க, வாங்க!

//childhood plants the seeds for adult happiness. //

எம்பூட்டு பெரிய உண்மை அது. எப்படி மகிழ்சியா இருக்கிறதுங்கிறது கூட ஒரு வித பழக்கம்தானோ?! என்னய பொருத்த மட்டில் எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் தொடரும் பொழுது, அந்த பழக்கத்தை ஒரு கர்வத்துடன் செய்தால் கூட ஒகே தான், அது குணாதிசியமாக மாறும் வரையில்...

குழந்தை பருவத்தில் நிகழ்வுறும் அனைத்து நிகழ்வுகளும் அவைகளின் மனத்தினுள் "பசு மரத்து ஆணி போல் படிவது" அவ் நொடிகளில் அதுகள் லயித்து வாழ்வதினால்தானோ?? பின்னாடி அதனையே (நல்லது/கெட்டது) தூக்கித் திரிவதும் இதன் விளைவால்தான் போல. so, ..." children are our future..."

//i really loved the way you have related the adults with the children.//

உங்களுக்குத்தான் அது போன்ற பெரிய குழந்தைகளை தினமும் சந்திக்கும் வாய்ப்புகிட்டியிருக்குமே... அதுவும் மருத்துவமனை போன்ற இடத்தில் கிட்டத்தட்ட உண்மைக்கு அருகில் மனிதர்களை கண்ணுரும் சந்தர்ப்பம்... நன்றி!

டாக், அப்படியே உங்க நண்பர்(ஆறு) சொன்னதையும் படிச்சிடுங்க :-).

Thekkikattan|தெகா said...

/Most people are kids when they play with kids and be with kids (Just like Muthu and Dharumi). But the essence of this post I guess is... be a kid in everything and use your experiences to be aware of your "self". Right Thekki?//

காட்டாறு, மிகச் சரியாக பதிவின் கருவை எடுத்து வைத்தீர்கள். இதிலும் ஒன்ன கவனிச்சா, சில பேரு குழந்தைக கூட இருக்கும் பொழுது கூட அந்த இறுக்கத்தை தளர்த்திக்க முடியறதில்ல... முதல் படி அங்கிருந்து ஆரம்பித்தால்தானே இழந்த தன்மையை மீட்க :-) .

Thekkikattan|தெகா said...

மங்கை,

நீங்க இல்லாம இந்தப் பதிவு முடியுங்களா...

என்ன மங்கை பெரிரிரிரிய்ய்ய பதிவர் ஆகிட்டீங்களாம் டமிளகத்து பெரும் பத்திரிக்கையெல்லாம் உங்கள கண்டுபிடிச்சிருச்சாம்ல :-)))).

சுரேகா.. said...

முழுக்க முழுக்க இது நம்ம தவறுதான்!

எத்தனை அற்புத நாட்களைக்கழித்திருக்கிறோம் குழந்தையென்ற கவசத்தில் !
கொஞ்சம் எடை ஏறி...உயரமாகி, குரல் தடித்தவுடன்...எங்கிருந்துதான் இந்தப்பெரியமனுசத்தனம் வந்தது?

இப்பக்கூட நாம் குழந்தைகள் பெரியமனுசனா நடந்துக்கிட்டா பெருமைப்படுறோம்.

ஆனா நாம குழந்தையா நடந்துக்கக்கூட துணைக்கு ஒரு குழந்தை தேவைப்படுது...!

ஞாபக அடுக்குகளில் இருந்து ஒரு பதிவும் எடுத்துத்தரேன் படிச்சுப்பாருங்க சிந்தனைக்கு ஒத்துவருதான்னு பாப்போம்.
http://surekaa.blogspot.com/2008/09/blog-post.html

சுரேகா.. said...

இன்ஸ்டண்ட் காபி ...
இன்ஸ்டண்ட் தோசை..

30 நாளில் ஹிந்தி
20 நாளில் வளரும் நெல்
100 நாளில் காய்க்கும் தென்னை மாதிரி..

பிள்ளைங்களும் 10 வயசில் எல்லாமே கத்துக்கணும்ங்கிற ஆர்வத்தில் வளக்கிறோமே ஒழிய..
அதுங்களை பிள்ளைங்களா இருக்க விடலை..
மொதல்ல...இந்த சனியன் பிடிச்ச சம்மர் கேம்ப்க்கெல்லாம் ஆப்படிக்கணும்.
என் பையன் விளையாட ஒரு வண்டி மணல் வாங்கிப்போட்டிருக்கேன் அண்ணா...
இன்னிக்கு சாயங்காலம் நானும் சேந்து விளையாடினேன்.

Thekkikattan|தெகா said...

//இப்பக்கூட நாம் குழந்தைகள் பெரியமனுசனா நடந்துக்கிட்டா பெருமைப்படுறோம்.//

லேட்டா வந்தாலும் லோடோடுதான் வந்திருக்க ;-).

அதுகள அதுகளாவே இருக்க விடறதில்லையே, நம்மோடைய ஆசைகளின் எடையை அதுகள்தானே ஏற்றிச் சுமக்கிறது. பிறகு படுத்தாம என்ன செய்வோம்.

//ஞாபக அடுக்குகளில் இருந்து ஒரு பதிவும் எடுத்துத்தரேன் படிச்சுப்பாருங்க சிந்தனைக்கு ஒத்துவருதான்னு பாப்போம்.
http://surekaa.blogspot.com/2008/09/blog-post.html //

ஏற்கெனவே படிச்சிருக்கேன் அந்தக் கவிதையை. செய்தி அதேதான், ஆனா எளிமையா கவிதை வரிகளைப் போட்டு அசத்தியிருக்க.

//என் பையன் விளையாட ஒரு வண்டி மணல் வாங்கிப்போட்டிருக்கேன் அண்ணா...
இன்னிக்கு சாயங்காலம் நானும் சேந்து விளையாடினேன்.
//

மூச்சு முட்ட அனுபவி! விட்டாக் கெடைக்காது ஆமா சொல்லிப்புட்டேன் :-P

Related Posts with Thumbnails