Thursday, August 27, 2009

குறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that?

அன்புக்கதைன்னு பொருத்தமா ஒரு தலைப்பு வைச்ச பதிவு ஒண்ணு படிச்சேன். அது ஒரு குறும்படத்தைப் பற்றியது. என்னைத் தவிர்த்து அங்கே பின்னூட்டமிட்டிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில அந்த குறும்படத்தைப் பற்றி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. எனக்கு இப்பத்தான் முதன் முறையா பார்க்க கிடைச்சிச்சு. சரி என்னதான் இருக்கும் அதில, அதிலும் 5 நிமிடத்திற்குள்ள அப்படி என்னாத்தை பெரிசா சொல்லிட முடியுங்கிற ஒரு நினைப்போட பொத்தானை அமுக்கிப் பார்க்க ஆரம்பிச்சேன்.

அந்தப் படத்தின் தாக்கத்தால் பார்த்து முடிச்சவுடன் பேசாமே கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கிற மாதிரியாகிடுச்சு. அந்தப் படத்தில வந்த பெஞ்ச், பார்க் மாதிரியான அமைப்பில தனியா நான் அமர்ந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. அப்படியே பார்த்தாலும் நானெல்லாம் அந்தப் படத்தில வர்ற அந்த மகன் மாதிரி இல்லாம பேச ஆரம்பிச்சா "தம்பீ உனக்கு வாய வலிக்கலையாடா"ன்னு கேட்கிற அளவிற்கு அறுத்து சாச்சர்றது பெத்தவிங்கள. அப்படி இருக்கும் பொழுது இந்த குறும்படத்தை பார்த்தவுடன் மற்ற பெற்றோர்களுக்காகவும், பெரிய வயசானவிங்களையும் நினைச்சு "ஏன் இப்படி"ன்னு மனசு தொங்கிப் போனது.

அந்த நிலையில ஒரே ஃபீலிங்ஸோட ஒரு பின்னூட்டத்தை தட்டி விட்டுட்டு வந்திட்டேன். காலையில போயி பார்த்தப்போ அங்கே நம்ம தருமி ஒரு பின்னூட்டத்தின் மூலமா அந்தப் படத்தில் நெருடலான லாஜிக்கல் சமாச்சாரம் இருப்பதாக இதனைச் சுட்டிக் காட்டியிருந்தார்...

...தருமி said...

சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.

ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....

8/27/2009 9:21 AM...

தருமிக்கு என்னான்னா எப்படி அந்த நினைவாற்றலற்ற(மாதிரியான - காட்சிப் பிழை அது) அப்பா ஒரு சிட்டுக்குருவியை அது என்னா, அது என்னான்னு கேட்டும் வைச்சிப்புட்டு பின்னே ரொம்ப ஞாபகத்தோட அந்த டயரியை எடுத்து கொடுத்திருக்க முடியுங்கிறார்.

அந்த குறும்படத்தில காட்சி இப்படியாக நகரும் - அதி மும்முரமா செய்தித்தாளில் முங்கிக் கிடக்கும் மகன்கிட்ட கேட்டு, கேட்டு எரிச்சலூட்டும் போது, தன் மகன் கடுப்பாகி எத்தனை முறை சொல்றதுன்னு கத்தியவுடன், அப்பா முகம் வாட்டம் கண்டு எழுந்து வீட்டிற்குள் சென்று அவர் எழுதிய டயரிக் குறிப்பை எடுத்து அதே மகனுக்கு அவன் மூன்று வயதாக இருக்கும் பொழுது எப்படி 21 முறை இதே போன்ற ஒரு நாளில், இதே போன்ற பார்க்கில் அமர்ந்து தன்னிடம் கேட்டான் எனவும், அப்படி கேட்டதிற்கு எப்படி முகம் சுளிக்காமல் ஒவ்வொரு முறையும் பதிலுரைத்து விட்டு அதற்கு போனசாக வேறு கட்டியும் பிடித்தேன் என்பதனைப் போன்று எழுதியிருப்பதை மகனைவிட்டு சத்தமாக படிக்கச் சொல்கிறார் .

இதனை வைத்து தருமி எப்படி இவ்வளவு ஞாபக சக்தியோட இருக்கும் பெரியவருக்கு சிட்டுக் குருவி அடையாளம் மறக்கும் என்பதனைப் போன்ற காட்சியமைப்பில் கொஞ்சம் லாஜிக் இடிப்பதாக முன் வைத்திருக்கிறார்.

அதப் படிச்சிட்டு எனக்கு பக்குன்னு ஆயி என்னடா நம்ம தருமியே தப்பா எடுத்துட்டு இருக்காரேன்னு, அரக்கபரக்க பறந்து நானும் அவரோட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி இப்படி ஒரு பின்னூட்டப் பதிலைக் கொடுத்திருந்தேன்...

....Thekkikattanதெகா said...

//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//

தருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.

அந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))

8/27/2009 6:32 PM...

அதுக்குப் பிறகு நேரடியாவும் பேசும் பொழுது திடீர்னு அவர்கிட்ட பேசின விசயத்தையெல்லாம் ஏன் பொதுப் பார்வைக்கு கொண்டுவரக்கூடாதுன்னு தோணுச்சு, ரெண்டு பேருக்குமே! சரி கொண்டு வந்துருவோம், நமக்கும் ஒரு எண்ணிக்கை கூடினுச்சு, மக்கா நீங்களும் அய்யோடான்னு வந்துட்டுப் போக ஒரு வாய்ப்பா இருக்குமின்னு இங்கன தட்டி வைக்கிறேன்.

இன்றைக்கு பார்த்தோமானால் பலவித காரணங்களாலும், தேவைகளாலும் உண்மையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு எது எதனையோ தேடிக்கொண்டிருக்கிறோம். வெளிமுகமாக. அதன் உப விளைவாக தவிர்க்க முடியா மன இறுக்கம். அது பெற்ற பிள்ளைகள், பெற்றவர்கள், துணைவி என்று யாரையும் பார்ப்பதில்லை. அதே நேரம் வயதான காலத்தில அது போன்ற வாழ்க்கை முறையில் ஓடித் தேய்ந்து போன பெரியவர்கள், ஒரு காலத்தில் தானும் இளைஞனாக உலக விசயங்கள் அனைத்தும் தினப்படி வண்டி வண்டியாக அறிந்து இது போன்ற ஒரு இறுக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும்.

ஆனால், காலப் போக்கில் அவைகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கிறோம் என்று இன்று அமர்ந்து யோசிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தச் செயல் ஒரு நகைப்புக்குரியதாக அமையலாம். அதாவது தன் பிள்ளைகளுடன் கூட சரியான படி நேரத்தை செலவழிக்க முடியாமல், உலக விசயங்களை உள்வாங்கி தன்னால், தன் சக்திக்கு அப்பால் நடைபெறும் விசயங்களை நேரத்தை கொல்லும் பொருட்டு அறிந்து வைத்ததில் என்ன நடந்திருக்கலாம் என்று அனுபவப் பூர்வமாக இன்று தெரிந்து வைத்திருக்கலாம். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களோடு எனக்கும் அந்த விசயம் பற்றிய ஞானம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லத் தேவையாக இருந்தது, என்கிறளவில மட்டுமே உதவியதாக இன்று அவர்கள் அறிந்து வைத்திருக்கலாமல்லவா?

அப்படி இருக்கும் பொழுது, இன்றைய இளைஞனான தன் மகன் ஒரு படி மேலே போய் தான் செய்ததையே மேலும் இறுக்கம் கொண்டு நன்றாக இன்று வாழும் ஒரு வாழ்க்கையில் எந்தவித ப்ரக்ஞையுமில்லாமல் வாழ்கிறானே என்று அறியும் பொழுது, தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா?

இன்றைய காலக் கட்டத்தில் ஒரே காரில் நாலு பேர் பயணிக்க நேர்ந்தால் அதில் மூன்று பேர் தன் தன் அலைபேசியில் அங்கு இல்லாத நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது, மனித உணர்வுகள். மேலும் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ பொறுப்பற்ற பிள்ளைகள், தான் பிள்ளைகளை பெற்று விட்டு தனது பெற்றோர்களை விட்டு வளர்க்கும் நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறோம். இவர்களுக்கு அந்தப் பெரியவர்களின் மனக் கஷ்டத்தை எந்த நாளில் யார் விளக்குவது, தன் பொறுப்பேற்று தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதின் பொருட்டு.

இந் நிலையில் தன் மகன் என்ன தொலைக்கிறான் என்பதனை விளக்க அந்த குறும்படத்தில் வந்த அப்பா, தன் மகனிடத்தில் ஏன் அப்படி ஒரு நகர்வை நிகழ்த்தியிருக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையின் உன்னதம் விளக்க. ஏனெனில் அந்த மகன் பொருட்டு - அவன் திருமணமானவனா, குழந்தைகளிடத்தில், வேலை பார்க்குமிடத்தில் எப்படி பரபரப்பாக, சிடு மூஞ்சியாக நடந்து கொள்கிறவனா என்கிற போக்கில் எதுவுமே விளக்கப்பட வில்லை.

அந் நிலையில், அந்த ஒரு காட்சியைக் கொண்டு பார்க்கும் தருணத்தில் தன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார், தன் கவனத்தைப் பெறவா என்கிற ( attention seeking strategy - குழந்தைகளும் அப்படித்தானே) ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் பொழுது, அவரை விட வயதில் சிறிய குழந்தைகளிடம் எப்படியாக நடந்து கொள்வான் அந்த மகன் என்று கருதி இந்தப் பாடத்தை வழங்க வேண்டுமென எண்ணி ஏன் அந்த அப்பா அப்படி ஒரு நாளில் அது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டு அரங்கேற்றியிருக்கக் கூடாது என்பதனைப் போலத்தான் என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அங்கே அந்தத் தகப்பன் எதனையும் எதிர்பார்த்து அப்படியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நீ என்ன செய்கிறாய் என்பதனை உணர்ந்து கொள் என்பதனை உணர்த்த ஒரு சரியான வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். பெரியவர்கள் எப்படியாக தன் பிள்ளைகள் வளர, வளர ஒதுங்கிக் கொள்கிறார்கள் - பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டது, சுயமாக நிற்க ஆரம்பித்துவிட்டது, நல்ல வேலையில், சம்பளத்தில் தன்னை விட சில செய்ய முடியாத விசயங்களை எல்லாம் செய்து வருகிறது என்று எண்ணி அந்நியமாக தன்னை தூரமே நிறுத்திக் கொள்கிறார்கள்.

அவ்வாறாக ஒதுங்கிக் கொள்வதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து போகிறது. இந் நிலையில் சில முக்கியமான விசயங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியல் சார்ந்து எல்லாமே அது அறிந்து கொண்டதாக நினைத்து எப்படி வெட்டி விலகி விட முடியும்? மனித உறவுகளின் பொருட்டு, வாழ்வை முன்னமே தனது தனிப்பட்ட சிந்தனையின் வழியாக அணுகி எதன் சாரம் அதிக, நீட்டித்த இன்பத்தை வழங்குகிறது என்று உணர்ந்த தனது பெற்றோர்களின் ஒரு சில டச்'கள் இல்லாமலே எப்படி தான் தோன்றித் தனமாக இது போன்ற வளர்ந்த பிள்ளைகள் வாழ்ந்து காட்டி விட முடியும்?

எனவே, வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்துக் கொண்டவர்களும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தவறாகப் படுகிறது எனது பார்வையில். இது போன்ற பாடங்களை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் எந்த விதமான எதிர்பார்ப்போ, குறுக்கீடோ இல்லையென்றே கருதத் தோன்றுகிறது.

19 comments:

தருமி said...

மத்தவங்க வந்து சொல்றத கேக்கிறது முக்கியமா படுது. பொறுத்திருக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சொல்றது ஒரு 5 நிமிடக்காட்சியில் ஒருவரோட குணாதிசிய பின்புலங்கள் எல்லாம் தெளிவா விளங்கிக்க முடியாது.. அத்னால் ஏற்பட்ட காட்சி பிழையா இருக்கலாம்..
எப்படியோ நமக்கு யோசிக்க விவாதிக்க ஒரு விசயம் கிடைச்சது..

\\தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா?//
இது ஒரு நல்ல விளக்கமா இருக்கே..

SurveySan said...

எனக்கும் தருமிக்கு வந்த மாதிரி சந்தேகமே வந்துது.

'டச்சிங்'காவும் தெரியல்ல.

ஆனா, நீங்க சொல்ற லாஜிக் சரியாவே படுது.

அஞ்சு நிமிஷத்துல்ல இன்னாதான் சொல்லப் போறான்னு, ஆச்சரியமா பாத்தேன். ஆனா, மேட்டரு இருக்கத்தான் செய்யுது. உங்க விலாவாரியான அலசலும் நன்று.

தேடித் தேடி கடைசீல, எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. ஆனா, இன்றைய வாழ்க்கை சூழலை மாத்திக்க வழியும் புலப்படலை.

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

கோமதி அரசு said...

//வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்பு மில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்க் கொண்டவர்களும்,
பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும்
தவறாகப் படுகிறது எனது பார்வையில் இது போன்ற பாட்ங்களை வழங்குவதிலும் பெறறுக் கொள்வதிலும்
எந்தவிதமான எதிர்ப்பார்ப்போ,குறுக்கிடோ இல்லையென்றே க்ருதத் தோன்றுகிறது.//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

தருமியின் காட்சிப் பிழைக்கு நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் தெகா.

Thekkikattan|தெகா said...

//மத்தவங்க வந்து சொல்றத கேக்கிறது முக்கியமா படுது. பொறுத்திருக்கிறேன்.//

ரொம்ப நேரம் பொறுத்திருக்காதீங்க தருமி, ஆறி ஜில்லு தட்டிப் போயிடப் போவுது ;-)

Thekkikattan|தெகா said...

என்ன சொல்றது ஒரு 5 நிமிடக்காட்சியில் ஒருவரோட குணாதிசிய பின்புலங்கள் எல்லாம் தெளிவா விளங்கிக்க முடியாது.. அத்னால் ஏற்பட்ட காட்சி பிழையா இருக்கலாம்//

உண்மைதான் அந்த அஞ்சு நிமிடத்திற்குள்ளர 65 வருஷக் கதையே அந்தப் பெரியவரோடது வெளியில வந்திருச்சே :)), பெரிய வெற்றியில்லயா அது.

Thekkikattan|தெகா said...

வாங்க சர்வேயரே,

//எனக்கும் தருமிக்கு வந்த மாதிரி சந்தேகமே வந்துது.

'டச்சிங்'காவும் தெரியல்ல. //

அஞ்சு நிமிடத்திற்குள்ளர நம்மை இவ்வளவு தூரம் எடுத்திட்டுப் போயி இப்படியெல்லாம் அலசி காயப்போட வைச்சிருக்குது அந்தக் குறும்படமின்னா அதில உண்மையில்லாம இருக்க முடியாது....

//ஆனா, நீங்க சொல்ற லாஜிக் சரியாவே படுது. //

அதான் வேணும் ;)

//தேடித் தேடி கடைசீல, எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. //

அதாவது அரைச்ச மாவயே அரைக்கிறோமேன்னு இல்லயா? ஆனா, அலுப்பதே இல்ல, அது இல்லாம யோசிச்சுப் பாருங்க ஒரு மாதிரியான வெறுமை தட்டும்... எனவே, தேவையான வலி போல ஒவ்வொரு தனிப்பட்ட ஆட்களுக்கும் அத அனுபவிக்கிறது, இல்லன்னா முழுமைகிட்டாது போல...

எனக்கு புரிந்த வரைக்கும் அந்தக் குறும்படத்தில் சொல்ல வந்த விசயம், ஒரு அப்பாவிற்கு தன்னோட பையனுக்கு தேவையான ஒரு வாழ்வியல் அணுகு முறையைக் (நவ்னெஸ், பொறுமை, சகிப்புத்தன்மை...) கத்துகொடுக்க வாய்ப்பா அந்த சூழலை பயன்படுத்திக்கிட்டார் அப்படிங்கிற வகையில அந்த க்ளிப்பிங் அசத்தல்...

Anonymous said...

அருமையான கருத்து விவாதம். இக்கால இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதக்குரும்படம்.

தருமி said...

நாம யாருமே 'திரும்பிப் பார்க்கிறதே' இல்லை. இந்தக் கதை அதைச் சொல்லுது. ஒரு moral lesson.

ஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது.

நம்ம குழந்தைகளை கொஞ்சும்போது இதுமாதிரிதானே நம்மையும் நம் தாயும் தக்ப்பனும் கொஞ்சியிருப்பாங்கன்னு நாம் பொதுவா நினச்சுப் பார்க்கிறோமா? அதேமாதிரியான ஒரு காட்சிதான் இது.

சர்வேசன் சொன்னது மாதிரி //எல்லாருக்கும் இதே நிலைதான்னு நெனைக்கும்போது, வியப்பாதான் இருக்கு. ஆனா, இன்றைய வாழ்க்கை சூழலை மாத்திக்க வழியும் புலப்படலை.// - இங்கே புலப்பட ஏதும் இல்லை.

இது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ...

தருமி said...

//65 வருஷக் கதையே அந்தப் பெரியவரோடது வெளியில வந்திருச்சே ://

தெக்ஸ், அப்போ அந்தப் பெரியவருக்கு என் வயசு அப்டின்றீங்க ??!!

Thekkikattan|தெகா said...

வாங்க ஞானி,

அருமையான நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டமாகத்தான் தங்களின் 'கோலம் இயக்கம்' எனக்குப் படுகிறது. கவனத்தில் கொண்டு வந்தமைக்கு நன்றி!

நானும் எனக்குத் தெரிந்த ஒருமித்த எண்ணங்களை கொண்டவர்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எங்களால் முடிந்ததை செய்கிறோம்.

Thekkikattan|தெகா said...

//தருமியின் காட்சிப் பிழைக்கு நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் தெகா.//

வாங்க அம்மா,

ரொம்ப தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கோணும் :). தருமி வேற மாதிரி இத வளர்ந்து வரும் பிள்ளைகளை எடுத்துக்கச் சொல்லி கேட்டுக்கிறார் போல (அவரும் ஒரு அப்பா இல்லியா)... நான் அவருக்கான பதிலில் அது என்னவா இருக்குமின்னு க்கெஸ் பண்ணிச் சொல்றேன் பாருங்க :-)

Thekkikattan|தெகா said...

//நாம யாருமே 'திரும்பிப் பார்க்கிறதே' இல்லை. இந்தக் கதை அதைச் சொல்லுது.//

மிகச் சரி...

//ஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது. //

இதுவும் சரி... ஆனா, தருமி இருந்தாலும் உங்களுக்கு எவ்வளவு பெரிய பெற்றோர்கள் "நல்ல மனசுங்கிற"தை நிரூபிக்கிறீங்க பாருங்க. எந்த பிள்ளைங்களுக்கும் எந்த விதத்திலும் குற்றவுணர்வு வந்திரக் கூடாது, அதாவது பெத்தவிங்கள 'கண்டுக்காம"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும், பெத்தவிங்களான நாம இன்னமும் அப்படியே அன்பு மாறாம நம்ம குழந்தையை நேசிக்கணுமின்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... செம டாட், தருமி நீங்க :-)

//நம்ம குழந்தைகளை கொஞ்சும்போது இதுமாதிரிதானே நம்மையும் நம் தாயும் தக்ப்பனும் கொஞ்சியிருப்பாங்கன்னு நாம் பொதுவா நினச்சுப் பார்க்கிறோமா?//

ஆமால்ல. அப்படி மிகக் கடுமையா அப்பா, அம்மாவை வெறுக்கிற, ஆனா, தன் பிள்ளையை அப்படியே தூக்கி வைச்சி கொஞ்சுற எந்த இன்றைய தகப்பனும்/மகளும் அப்படி நினைச்சிப் பார்க்கிற மாதிரி தெரியலயே, தருமி. நானும் என் அப்பா, அம்மாவை இன்னக்கி ட்ரீட் பண்ணுற மாதிரி நமக்கும் நாளக்கி.... :)

அப்போ நீங்க சொன்ன ... //இது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ..// அது ஒரு தவிர்க்க முடியாத சுழற்சி... அப்படித்தானே?

தருமி said...

தெக்ஸ்,
நீங்க சொன்னது எல்லாமே சரிதான் - ஒன்றைத் தவிர.

//அதாவது பெத்தவிங்கள 'கண்டுக்காம"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும்,..//

இதுதான் ஒதைக்குது. கண்டுக்காம போற பிள்ளைய்களைப் பத்தி நான் சொல்லலை.

நான் சொல்றது 'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே... இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு கண்ணை மூடிட்டு கேக்கிற பெத்தவங்களைக் குறை சொல்றதுதான். ஏன்னா முன்பே சொன்னது மாதிரி அது பிசினெஸ்.

நமக்கு நம்ம பிள்ளை இருந்தது மாதிரி என் பிள்ளைகளுக்கு அவர்கள் பிள்ளை என்பது பெற்றவர்கள் பலருக்கும் புரிவதாக எனக்குத் தோன்றவில்லை.
ஆனால் இதை உங்க ஊரு ஆளுக கிட்ட நான் பார்த்ததாக நினைவிருக்கிறது. ஒருவேளை பொருளாதார சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்க ஊரு ஆளுகளோடு பழகும்போது ஒன்று தோன்றியது. (எங்க போனாலும் டபக்குன்னு ஒரு பேரப்பிள்ளை படம் எடுத்துருவாங்க அவங்க பையில இருந்து. அம்புட்டு பாசமான்னு நினச்சி நானும் ஒரு போட்டோவோடு கொஞ்ச நாள் அலைந்தேன்.)எனக்கு என்ன வித்தியாசம் தெரிஞ்ச்சின்னா, நாம் நம்ம பிள்ளைகளைப் பக்கத்திலே வச்சிக்கிட்டு ஈஷிக்கிட்டு இருக்கணும்னு அப்டின்றது மாதிரி அவங்க நினைக்கிறதில்லை. அவன் உலகம் ... அவன் அதைப் பார்க்க போய்ட்டான் - என்ற உணர்வு அவர்களிடம் பார்த்தேன். நாம் இன்னும் ஒத்தப்பிள்ளை .. பக்கத்திலே இருக்கணும்னு அலையுறோம். (அப்பகூட நாம் இன்னும் நம்ம பெத்தவங்ககூடவா இருக்கிறோம்னு நினைக்கிறதில்லை.)

////இது இயற்கை. வாழ்க்கையே இப்படித்தான் ..// அது ஒரு தவிர்க்க முடியாத சுழற்சி... அப்படித்தானே?//

அப்படியே தான் ...

காட்டாறு said...

தருமி சொன்னது:
//ஆனால் எந்த அளவு இது நம்மைப் பாதிக்கும் என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தது.
//

இதுக்கு தெக்கிகாட்டான் பதில்:
//'கண்டுக்காம"யே விட்டுட்டு அவனவன் பொழப்ப பார்க்கிற பிள்ளையா இருந்தாலும், பெத்தவிங்களான நாம இன்னமும் அப்படியே அன்பு மாறாம நம்ம குழந்தையை நேசிக்கணுமின்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... செம டாட், தருமி நீங்க :-)
//

இந்த உங்க விளக்கம்... என்னய்யா இதுன்னு சொல்ல வைக்குது.

தருமி சொன்னது போல, இது தனி மனிதனைப் பொறுத்தது மட்டுமல்லாது, அவர்கள் வாழ் சூழ்நிலையையும், பண சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதும் நிதர்சனம். தன் கணவன்/மனைவி இருக்கும் வரைக்கும் குழந்தைகளிடம் எதிர்பார்க்காமல் வாழும் பெற்றோர், தனிக்கட்டையாக மாறும் போது அவர்களில் நிகழும் மாற்றம், ஆறுதலை தேடவைக்கையில், குழந்தைகளிடம் எதிர்பார்ப்பு கொண்டு வருவது இயல்பே. இது இயற்கையே. இதுக்கு போய் நீங்க தருமியை தியாகி ஆக்கி.. அவருடைய இயல்புத் தன்மையை இழக்க செய்யாதீர்கள். ப்ளீஸ்.

Thekkikattan|தெகா said...

தருமி,

//நான் சொல்றது 'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே... இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு கண்ணை மூடிட்டு கேக்கிற பெத்தவங்களைக் குறை சொல்றதுதான். ஏன்னா முன்பே சொன்னது மாதிரி அது பிசினெஸ். //

ஹ்ம்ம் நீங்க சொன்ன மாதிரி நம்ம இந்தியச் சூழல்ல அப்படிச் சொல்ல வைக்கக் காரணமா நான் நினைக்கிறது என்னன்னா - வெள்ளைக்காரங்க அணுகு முறை நமக்கு இன்னமு கைவரப் பெறாமைதான். எங்கூர்ல அரசாங்கமே கூட ஏதோ ஒரு வகையில வயசானவிங்களுக்கு பொருளாதார தன்னிரைவு கொடுக்கிற மாதிரி சமூக காப்பீட்டு திட்டம் மாதிரியான விசயங்களை வைச்சு, வயசான காலத்திலும் பார்த்துகிது. ஆனா நம்மூர்ல என்ன நடக்குது...

அரசாங்க உத்தியோகத்திலயோ, தனியார் கம்பெனிகளிலோ வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, சோ அவங்க பிழைச்சாங்க ... அது இல்லாம பரம்பரை பணக்காரங்களுக்கும் பிரச்சினையில்ல பணத்தை/சொத்தை கடைசி கட்டம் வரைக்கும் பிடிச்சு வைச்சிருக்கும் நிலையில் அவர்களின் குழந்தைகளிடமிருந்து கொஞ்சம் கவனம்கிட்டலாம். ஆனால், நாம பார்க்க வேண்டியது அது மாதிரியான வசதிகள் இல்லாது தன் பிள்ளைகளை மட்டுமே வளர்த்து ஆளாக்கி விட்டு எது போன்ற பொருளாதார சேமிப்புமில்லாமல் முதுமையடைந்துவிடும் பெரியவர்களைப் பற்றியதுதான், அதுதான் நான் நினைக்கிறேன் நீங்க சொன்ன ...'நான் உன்ன என் கண்ணு மாதிரி பாத்துக்கிட்டேனே இப்ப நீ என்ன ஏன் அப்படி பாத்துக்கிறதில்லை'ன்னு ... சொல்லவைக்குது போல - இது நம்மூர்ல இருக்கிற பெரும்பாலான பெற்றோர்களின் நிலை, of course there are some exceptional cases...
----
மற்றபடி மேற்கத்திய மக்கள் ரொம்பவே தெளிவா இருக்காங்க குழந்தைங்க வளர்ப்பை பொருத்த மட்டிலும் என்றே எடுத்துக் கொள்கிறேன் ...
----
நம்ம அந்த குறும்பட விசயத்திலருந்து விலகி எங்கோ நம்மூர் சமூக பின்னணிக்கு வந்திட்டோம் ...

காட்டாறு சொன்னதுதான் பொருளாதார, வாழ் சூழ்நிலை இப்படி நானும் சொல்லவாரதும், அதில பாருங்க, காட்டாறு சொன்ன இன்னொரு விசயம் இது போன்ற பணம், வாழ் சூழ்நிலையைத் தாண்டியும் ...தன் கணவன்/மனைவி இருக்கும் வரைக்கும் குழந்தைகளிடம் எதிர்பார்க்காமல் வாழும் பெற்றோர் (வளர்ந்த நாடுகளிலும் கூட), தனிக்கட்டையாக மாறும் போது அவர்களில் நிகழும் மாற்றம், ஆறுதலை தேடவைக்கையில், குழந்தைகளிடம் எதிர்பார்ப்பு கொண்டு வருவது இயல்பே. இது இயற்கையே.... அதுவும் ஒரு காரணியா பின்னாடி வயசானவிங்கள கடைசி கட்டத்தில பொலம்ப வைச்சிடுது போலவே...

மங்கை said...

ஏற்கன்வே இது போல ஒரு கலந்திரையாடல் கண்மணியின் பதிவில் தருமியுடன் நடந்தது...அவருக்கு நியாபகம் இருக்குமானு தெரியலை,,:)

இதை கதையாக படித்த போது அதை என் நட்சத்திர வாரத்தில் எழுத நினைத்தேன்...

வீட்டுக்கு வந்த மகன் தன்னிடம் நேரம் செலவழித்து பேசவில்லையே என்ற ஆதங்கம்..மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டு அப்படியாவது அவனிடம் பேசவேண்டும் என்ற ஆசை.. அவனிடம் பேச ஒரு சந்தர்பத்தை உருவாக்குகிறார்.. அப்படியாவது அவரின் இருப்பை அவன் தெரிந்து கொள்ளட்டும் என்று... இது தான் நான் படித்த கதையின் கருத்து..

இது பெரியவர்களிடம் மட்டுமல்ல, நாம் கூட (பொதுமை படுத்துகூடாதுன்னா...நான் என்று வைத்துக்கொள்ளலாம்) பேச வேண்டும் என்பதற்காக ஒரே பேச்சை அல்லது those that are obvious ஐ தெரியாத ஒன்றைபோல பேசுவதுண்டு.. sort of attention seeking, attention-seeking for reassurance and support..

காட்டாறு/தருமி,சொன்னது போல தனிப்பட்ட நபர்/சூழ்நிலையைப் பொறுத்து சிவியரிட்டி மாறும்..

vasu balaji said...

தெ.கா.நானும் பார்த்தேன் இந்தப்படம். இதே போல் ஒரு சைனீஸ் படமும் இருக்கிறது. இது அல்சீமர்/பர்க்கின்ஸன்ஸ் நோய் வந்த முதியவர்களிடம் பார்க்கக்கூடிய ஒன்று. (கிட்டத்தட்ட 10 வருடங்கள் இரண்டும் தாக்கிய அம்மாவை கூட இருந்து கவனித்த அனுபவம்). பார்க்கும் நமக்கு அந்த சலிப்புக்கு அவர் டைரியை காட்டியதுபோல் தோன்றலாம்.

அது அப்படி இருந்திருக்க முடியாது. திரும்பத் திரும்பக் கேட்டு கேட்டு அந்தக் குருவி குறித்த தன் நினைவுகளில் அந்தக் கணத்தில் ஏற்பட்ட ஞாபசக்தி அந்த டைரியின் வெளிப்பாடு என்று புரிகிறது எனக்கு.

Related Posts with Thumbnails