Thursday, November 26, 2009

விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.


ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.


அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது

"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்...



P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.

12 comments:

Jayakumar said...

வடுவூர் சரணாலயம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு அதிகம் தெரிந்திருப்பதில்லை. எனக்கும் கூடத்தான். சென்ற ஆண்டு தினமணி தீபாவளி மலரில்(திருச்சி பதிப்பு) இதைப்பற்றி ஒரு கட்டுரையைப் படித்துதான் முதலில் தெரிந்துகொண்டேன். அக்கட்டுரை இங்கே மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது

இது போல திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டையிலிருந்து நாகை செல்லும் வழியில் உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கட்டுரைக்கும், அருமையான புகைப்படங்களுக்கும் நன்றி.

Ravichandran Somu said...

வடூவூர் ஏரி பற்றி நல்ல பதிவு.

எங்கள் வயல்களை வளமாக்கும் வடூவூர் ஏரி. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் வீராணம் ஏரிக்கு அடுத்து இரண்டாவது பெரிய ஏரியாக விளங்கியது வடூவூர் ஏரி!. இப்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது.

25 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக இருந்த்தபோது எனது தந்தை மற்றும் கிராமத்து மக்களுடன் வடூவூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கள் கிராமத்திலிருந்து நடந்து வந்து வடுவூர் ஏரியில் தண்ணீர் திற்ந்து கொண்டு சென்ற நாட்களின் நினைவலைகள்.

Your post made me nostalgic...

அன்புடன்,
-ரவிச்ச்ந்திரன்

கேகே said...

அருமையான படங்கள். தமிழ் மக்கள் நிறைய பேருக்கு இது அறிந்து கொள்ளும் பதிவாக அமையும்.எழுத்து நடையும் தெளிவாக அமைந்ததில் கூடுதல் சிறப்பு ஏற்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

கரம்பக்குடிக்கு எதுக்கு போனீங்க தெக்கிகாட்டார். கரம்பக்குடி வத்திப்போன ஏரியோட போட்டோவா அது.

வடுவூர் ஏரி மிகப்பிரபலமானது, பறவைகள் சரணாலயம் என்ற செய்தி நிறைய பேருக்கு தெரியாது என்பது உண்மையே.

Thekkikattan|தெகா said...

வணக்கம் ஜேகே...

தினமணி செய்திக்கு நன்றி! நான் அறிந்திருக்கவில்லை.

//இது போல திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டையிலிருந்து நாகை செல்லும் வழியில் உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.//

ஆமாம், அங்கு 90களின் ஆரம்பத்தில் என்னுடைய நண்பர் ஒருவருடன் ஒரு நாள் கேம்ப் செய்திருக்கிறேன். மிக அருகாமையில் அமர்ந்து நிறைய நீர்ப் பறவைகளை காணக் கூடிய முதல் வாய்ப்பு அங்குதான் கிடைத்தது.

அந்த ஊரில்தானே, தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிக்காமல் மக்கள் பறவைகளுக்கென அமைதியாக கொண்டாடுகிறார்கள்?

//கட்டுரைக்கும், அருமையான புகைப்படங்களுக்கும் நன்றி.//

you are welcome, JK! In fact, more to come ... keep visiting :)

Thekkikattan|தெகா said...

ஊர்க்காரர் ஒருத்தரை கொண்டு வந்ததில் சந்தோஷம், ரவிச்சந்திரன்.

ஊர் நினைவுகளை கொண்டு வந்திருச்சா இந்தக் கட்டுரை... அதானே வேணும். அவ்வளவு அழகுங்க உங்க ஊர். நீங்க சொல்லுற மாதிரி இப்பவே இப்படி இருக்கின்னா நீங்க சொல்லுற காலத்துக்குள்ளர பின்னோக்கிப் போனா? எப்படி இருந்திருக்கும்...

வடுவூர் குமார், இன்னொரு வலைப்பதிவரும் இருக்காரே அப்போ அவரும் அங்கிருந்துதானா??

நன்றி, நினைவுகளை பகிர்ந்துகிட்டதுக்கு...

Thekkikattan|தெகா said...

கேகே,

நன்றி! அப்போ இதுக்கு முன்னாடி எல்லாம் ஜாங்கிரியா சுத்தியிருந்தேன்... அவ்வ்வ்வ்வ் :)

குடுகுடுப்பை...

//கரம்பக்குடிக்கு எதுக்கு போனீங்க தெக்கிகாட்டார். கரம்பக்குடி வத்திப்போன ஏரியோட போட்டோவா அது.//

கரம்பக்குடிதானுங்க என்னோட அப்பனாத்தா பொறந்த ஊர். என்னோட மக்கள் வசிக்கிற இடம்தான் அந்தத் தெக்கிக்காடு :)...

அந்த வத்திப்போன நீர்நிலை எங்களோட குளம் - தென்னேரம்குளம் என்று அழைப்பார்கள். அது ஒரு ஏரிக்கு சமமா நீண்டு கிடக்கும் ஒரு 2 கிலேமீட்டர்கள், இப்போ வெறும் காட்டாமணக்குதான் மண்டிக் கிடக்குது, கொடுமையா இருக்கு.

அதப் பத்தி தனியா ஒரு பதிவு எழுதுவோம்னு கொஞ்சம் படங்களும் சூட்டிங் போட்டு வைச்சிருக்கேன். நிதானமா போடுறேன்.

//வடுவூர் ஏரி மிகப்பிரபலமானது, பறவைகள் சரணாலயம் என்ற செய்தி நிறைய பேருக்கு தெரியாது என்பது உண்மையே.//

அப்படியா? ரொம்ப பக்கத்திலதான் என்னுடைய ஊரும். எனக்குத் தெரியலையே. அதான் இப்போ தெரிஞ்சிக்கிட்டவுன், 'யான் பெற்ற இன்பம்'... :) நன்றி குடுகுடுப்பை.

கையேடு said...

அட.. நம்ம ஊருக்கு இவ்ளொ பக்கத்துல போயிட்டு வந்துருக்கீங்க..

வாரயிறுதியில சைக்கிள்ல போயிட்டு வருவதுண்டு வடுவூர் ஏரிக்கு. அப்பப்போ கிரிக்கெட் மேட்சுக்கும் போவோம்.. பழசையெல்லாம் நினைக்க வச்சிட்டீங்க.. :)

மங்கை said...

இன்னும் இது போல சரணாலயங்கள் எத்தனை இருக்கிறதோ...

ம்ம்ம்

God loved the birds and invented trees. Man loved the birds and invented cages.

இதான் நியாபகம் வருது..ஹ்ம்ம்ம்

உமர் | Umar said...

வடுவூர் அமைந்திருப்பது திருவாரூர் மாவட்டம். மன்னார்குடி நகரமும் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியே.

90 களின் தொடக்கத்தில் தண்ணிக்கோழி என்று அழைக்கப்படும் பறவை மட்டுமே இங்கு இருந்து வந்தது. அப்பொழுது இருந்த ஏரியின் பரப்பளவு இப்பொழுது இருப்பதை விடவும் பெரிது. "நாரை கடக்க முடியா வடுவூர் ஏரி" என்றும் ஒரு பேச்சு உண்டு.

கரைகளில் வளரத் தொடங்கிய கோரைப்புற்கள், பரவத்தொடங்கி நீர்பிடிப்பு பகுதி குறையத் தொடங்கியது. ஆனால் அதன் பிறகுதான் பல்வேறு வகை பறவைகளும் வரத்தொடங்கின. அப்பொழுது, நுழைவாயில் கிடையாது.

மன்னை-தஞ்சை சாலையின் ஓரத்தில் நின்று ஏரியின் அழகை ரசித்துச் செல்வார்கள். ஏரியின் கிழக்குக் கரையிலும் நின்று மக்கள் ஏரியை ரசிப்பார்கள்.

கோடை காலத்தில் வறண்டு கிடக்கும் ஏரி, சிறுவர்களுக்கு விளையாட்டுத் திடலாய் மாறி இருக்கும்.

பத்தாண்டுகளுக்கு முன் பார்த்தது. மீண்டும் செல்ல வேண்டும்.

Unknown said...

சொர்க்கமே எண்டாலும் அது நம்ம ஊரு போல வருமா
எங்கட ஊரின் அருகில் இருக்கும் வடுவூர் ஏரியின் பெருமையை
அறிந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

globalgarden said...

தஞ்சாவூர் இருந்து நாஞ்சிக்கோட்டை தாண்டி னாலே நிலத்தில் நிறைய மாற்றுங்கள் தெரியும். மருங்குளம் பகுதியில் குடிநீர் சரியில்லை போல நிறைய பேர் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

Related Posts with Thumbnails