Monday, February 08, 2010

மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...

சமீபத்தில் என் பக்கத்து ஊரான மதுரையில் நமது வலைப்பதிவு நண்பர்கள் ஒரு முக்கிய கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மென்மேலும் பல நிலைகளை எட்டி வளரட்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்தக் கட்டுரையை அவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். ஷாலினி அழைக்கப்பட்டு 'குழந்தைகளின் மனநலம் பேணும்' பொருட்டு ஒரு விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் அமைந்த பேச்சும், கேள்வி - பதில் நேரமுமாக ஆக்கப் பூர்வமாக அந்த நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டதாக பல பதிவுகளை படிக்கும் பொழுது உணர முடிகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும், மேலும் பல இடங்களில் எடுத்துச் செல்லப்படுவதின் அவசியமும் அதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே பல மாவட்டங்களில் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி அவரவர்களின் மாவட்டங்களில் நடத்தினால் இன்னும் சிறப்பாக பரவலாக விசயம் சென்றடையக்கூடும்.

இந்தக் கட்டுரையின் மூலம் நான் முன் வைக்க விரும்புவது ஒரு பார்வையாளனின் நோக்கிலிருந்தும், ஒரு தகப்பனுக்கே உரிய சில அடிப்படை சந்தேகங்களாகவும் அதன் பொருட்டு எழுந்த சில ஐயப்பாடுகள் என கலந்து கட்டியாக முன் வைக்கிறேன். அது போலவே படிப்பவர்களும் புரிந்து கொண்டு, முடிந்தால் அதற்கான ஆலோசனைகளை இங்கு கலந்துரையாடலாம்.

இந்த மதுரை கருத்தரங்கில் டாக்டர்.ஷாலினி வழங்கிய பேச்சின் படி, நமது சமூகத்தின் இறுக்கத்தினை கருத்தில் கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பின் எல்லா அத்தியாவசிய விடயங்களையும் அம்மாவிடமே கொடுத்ததினைப் போன்று நான் படித்த கட்டுரைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது எந்தளவிற்கு என்றால் பெண் குழந்தைகளின் அப்பாவும் ஒரு சராசரி ஆண்தான் அவரிடம் அவர் பெற்ற பெண் குழந்தைகள் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் போல எனக்கு விளங்கிக் கொள்ள முடிந்ததாகப்பட்டது. இது நான் கேட்டு வளர்ந்த ஒரு சொல்லாடல் "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" வைச்சுப் பார்க்கணுங்கிற அதே மனவோட்டத்தில் பொருந்திப் போனது.

இந்த அணுகுமுறையேதான் ஒரு தகப்பனும் ஒரு சராசரி ஆணாக நடந்து கொள்வான் என்கிற ஒரு தவறான கண்ணோட்டத்தை தன் பெற்ற பெண் குழந்தைகளிடத்தே கூட விதைத்து, ஒரு சந்தேகப் பார்வையுடனே ஆண்களை அணுகக் கூடுமென்ற கருத்தோட்டத்தில் என்னுடைய சிந்தனைகளாக வந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அப்படியே அந்தப் பெண் குழந்தையும் அதே மனவோட்டத்தில் வளர்ந்து வந்தால் அது ஓர் ஆரோக்கியமற்ற வளர்ச்சியாக அமைந்து விடக் கூடும்தானே! அப்படியாக ஆண்களை விதி விலக்காக விலக்கியே வைத்து ஒரு சமூகம் இயங்குமாயின், ஆண்கள் அங்கே 'முரடர்களாகவே' சித்தரிக்கப்படும் அபாயமிருப்பதால், தினசரி வாழ்க்கையிலும் இரு பாலரும் அவ்வாறே ஏற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறோம். ஆண் என்பவன் சபலத்தினூடாகவே வாழக் கூடியவன், பெண்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டுமென்றும், ஆண்கள் அப்படியே தவறாக புரிந்து கொண்டதை, சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் காலம் தோறும், அவர்கள் அப்படித்தான் என்ற நியதி இருப்பதால் மென்மேலும் 'நல்ல' பக்குவத்தை வளர்த்துக் கொள்வதனைத் தவிர்த்து மனம் போன போக்கில் வாழ்வதற்கான ஒரு சமூக வாய்க்காலை வகுத்து கொடுத்ததாக ஆகிவிடாதா?

எனக்கு மேற்குலகில் வாழ்ந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிட்டியதால் பல விசயங்களில் எனக்கு சமமாக பங்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்திருந்தின. மகப்பேறுவிற்கு முன், கர்ப்பா கால நலம் பேணல், எப்படி மகப்பேற்றில் ஆணும் பங்கெடுப்பது போன்ற வகுப்பில் கலந்து கொண்டது, அதனைத் தொடர்ந்து மகப்பேறுவின் போது மருத்துவருடன் உள்ளேயே இருந்து டெலிவரி பார்க்கும் வாய்ப்பும், பெண் குழந்தையாக இருந்தும் இன்றும் டயபர் மாற்றுவது, அவளை குளிப்பாட்டும் வாய்ப்பு என பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது...


அது போன்று இங்கு வருவதற்கு முன்பாகவே நம்மூரிலும் நன்கு கற்றறிந்த பல அறிஞர்களின் வீடுகளுக்குள் புழங்கும் /செல்லும் வாய்ப்பையும் பெற்றிருந்ததால் அவர்களும் எப்படி குழந்தை வளர்ப்பில் வாஞ்சையோடு மேற் சொன்ன விசயங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று காணும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன். முழு மூச்சாக அவர்கள் ஏன் அப்படி வாழ்ந்தார்கள் என்றால், அதன் ஊடாக ஒரு முழுமை கிடைத்திருக்கக் கூடுமென்று இன்று என்னால் உணர முடிகிறது.

அவ்வாறாக குழந்தை வளர்ப்பில் பங்காற்றி அதன் வளர்ச்சியுனூடாக வளர்ந்து வரும் பொழுது எப்படி ஒரு நாள் திடீரென்று அன்னியப் பட்டு விடுகிறேன்; அதே பெண் உடலுக்கு உபாதையென்று நிகழும் கணத்தில்? ஆண் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும் நல்லதொரு நண்பகச் சூழலில், ஆரோக்கியமானதொரு வளர்த்தெடுப்பின் பொருட்டு எதையும் பேசும் ஒரு நிலையை முழுமையாக இரு பெற்றோர்களும் அமர்ந்து பங்கெடுத்துக் கொள்ளும் சூழலில் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை நல்ல நண்பர்களாக எடுத்துச் செலுத்தும் ஒரு நிலைக்கு உயர்த்தாதா?

யாரையும் அங்கே விலக்கி வைத்து மர்ம வகுப்புகள் எடுத்து இது பெண்கள் விசயம், ஆண்களுக்கு அவசியமில்லையென்று ஒரு மாதாந்திர உபத்திரவத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு கூட கூனிக் குறுகும் போது பார்வைகள் கடலளவு விலகிப் போய்விடக் கூடிய அபாயமிருக்கிறதே. அதே போன்ற ஒரு "விலக்கி" வைக்கப்படும் நிலையே பின்னாளில் பல தர்ம சங்கடமான நெளிவுகளுக்கு வழிவகை செய்து கொடுத்துவிடாதா? உதாரணமாக இன்னமும் கடைகளுக்குச் சென்று பெண்கள் ஏன் 'சானிடரி நாப்கின்' என்று கேட்டு வாங்குவதற்கு கூட கூச்சப் படும் நிலை? இந்தக் கல்வி எங்கிருந்து தொடங்கப் பட வேண்டியதாக இருக்கிறது?

பெற்ற பிள்ளையையே எப்படி வக்கிரத்துடன் பார்க்கும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்படுகிறான்? அப்படியாகின் அவனுடைய மன உலகம் எதனை ஒத்தது? அப்படியாக காணும் பட்சத்தில் அந்த மன ஓட்டத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒரு சமூகமாக நிறைய மக்கள் அது போன்று வெளிப்படுவாராயின் எந்த நிலையிலிருந்து அது போன்ற மன வோட்டத்திற்கான காரண காரியத்தை அணுகுவது? சபலம் என்பது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும் என்ற அளவுகோல் சமம் என்றால், அதீதமாக பாரபட்சமின்றி ஒரு சமூகத்தில் வெளிப்படுமாயின், அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையில் முழுமையே கிட்டாமல் இன்னும் ஏதோ மிச்சமிருப்பதாகவும், எதனையும் முழுமையாக அனுபவிக்காததும் ஒரு காரணியாக அமைந்திருக்கக் கூடலாமல்லவா? அது குழந்தை வளர்ப்பில், கணவன்/மனைவி பரஸ்பர இல்லற வாழ்க்கையில், அல்லது கல்வியூட்டும் முறையிலென எதுவுமே சரிவர, முழுமையாக உட்கிரகிக்கப் படவில்லையென்பதால் இது போன்ற சம்பவங்கள் பரவலாக நடந்தேறவும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கக் கூடலாமல்லவா?

எனவே, இது போன்ற அடிப்படை மனத் தடங்கள்களிலிருந்து ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டுமாயின் குடும்பப் பொறுப்புகளில் யாரையும் விலக்கி வைக்காமல், டயபர் லெவலுக்கு மாற்ற விடுவதே சிறந்த வழியாக இருக்க முடியும். அந்த நிலையிலிருந்து குழந்தைகளும் வளர்ந்து வரும் பொழுது எந்த ஒரு மனத் தடையுமில்லாமல் அப்பா/அம்மா இரு பாலருக்கும் நல்ல நண்பர்களாகிப் போனால், அங்கே உரையாடலுக்கு எந்த ஒரு தடையும் இருக்க முடியாதுதானே! ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஒரு முதல் சிறந்த பெண் நண்பியாகவும், பெண் குழந்தைகளுக்கு அப்பா ஒரு முதல் சிறந்த ஆண் நண்பனாகவும் அமைந்து போகும் பட்சத்தில் வெளிப்புற உலகத்தை அந்தக் குழந்தைகள் மிக நேர்த்தியாக எதிர் கொள்ளுமென்றே நம்புகிறேன்.




பி.கு: இது எங்குமே சேற மறுக்கிறது என்பதால் தனியாக இணைக்கிறேன்..... >>டாக்டர் பேசிய இடம் வேறு மாதிரியான கூட்டம் என்பதால் அங்கு சொல்லப்படும் கருத்து மிகச் சரியாக சென்றடையும். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தகப்பனை ஒரு புதன் கிரகவாசியாக பார்ப்பதற்கு ஒரு சாதா மக்கள் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே இங்கும் அந்தக் கருத்தோட்டத்தை முன் வைக்க முடியும். அப்படியாக, "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" என்று எடுத்துக் கொள்ளும் தருணத்தில் பெண்களும் அதனையே எதிர்காலத்தில் நடை முறை படுத்தப் போய், அது தவறான புரிதலாக கணவனுக்கும் மனைவிக்குமிடையே அமைந்து போகாதா?

உ.தா: கணவன் தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார், அந்தச் சொல்லாடல் புரிதலின் பொருட்டு அந்த வீட்டின் தாய், முறைக்கு ஒரு முறை வந்து எல்லாம் சரியாகவே போகிறது என்று கண்காணிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடாதா? தவறாக புரிந்து கொண்ட சூழ்நிலையில்...

65 comments:

Thekkikattan|தெகா said...

தருமி புகைப்படம் ஒன்று உங்கள் தளத்திலிருந்து ஷுட்டிங் போட்டுக் கொண்டேன். :-)

***மக்கள் இந்தப் பதிவை ச்சூடாக எடுத்துக் கொள்ளாமல் நல்ல ஒரு கலந்துரையாடலாக ஆக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி!

வால்பையன் said...

//நமது சமூகத்தின் இறுக்கத்தினை கருத்தில் கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பின் எல்லா அத்தியாவசிய விடயங்களையும் அம்மாவிடமே கொடுத்ததினைப் போன்று நான் படித்த கட்டுரைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.//


நிகழ்வின் நோக்கம் குழந்தை பாலியல் தொல்லைகள் தடுப்பு! அதை தந்தையை விட அதிக நேரம் குழந்தைகளுடன் இருக்கும் தாயே சரியாக கவனிக்க முடியும், அதன் பொருட்டே அவ்வாறு ஷாலினி கூறினார்! குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய், தந்தை இருவரின் கவனிப்பும் அவசியம்!

வால்பையன் said...

விலங்களில் சில இனங்களை தவிர மற்ற வகைகளில் இன்செஸ்ட் உண்டு!
மனிதனின் சமூக அமைப்பு தான் அதை மாற்றியதே தவிர நாம் ஆரம்பத்திலிருந்தே இம்மாதிரி கிடையாது! மனிதனுக்குள் இருக்கும் மிருகம் விழித்து கொள்ளும் போது சில அசம்பாவிதங்கள் நடக்கலாம்!, சிக்மண்ட் பிராய்டு சொல்லியிருப்பதை பார்த்தால் மனித குலம் உளவியலை முழுதாக நிராகரிக்கும்!

மனிதனும் முதல் செக்ஸ் உணர்ச்சி அவர்களது பெற்றோர்களிடம் தான் ஆரம்பிக்கிறது என்கிறார்! அது நாம் அறியாத வயது! வளர்ந்த பின் சமூக கட்டுப்பாடுகள், பெற்றோரின் கவனிப்பு நம்மை ஆரோக்கியமான வழியில் செல்ல உதவுகிறது!

டாக்டர் ஷாலினி சொல்ல வந்தது, ஓரளவு வளர்ந்த குழந்தைகள் எல்லா ஆண்களிடமும் பாதுகாப்புதன்மையோடு பழகுவது நல்லது! தன் காதலன் அல்லது கணவன் தவிர!

இது பெரிய விசயமாக எனக்கு படவில்லை!

வால்பையன் said...

//ஆண் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும் நல்லதொரு நண்பகச் சூழலில், ஆரோக்கியமானதொரு வளர்த்தெடுப்பின் பொருட்டு எதையும் பேசும் ஒரு நிலையை முழுமையாக இரு பெற்றோர்களும் அமர்ந்து பங்கெடுத்துக் கொள்ளும் சூழலில் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை நல்ல நண்பர்களாக எடுத்துச் செலுத்தும் ஒரு நிலைக்கு உயர்த்தாதா?//


சந்தேகமில்லாமல், ஆனால் பாருங்கள் ஆண்கள் என்றாலே அது நம் அப்பா போல என்றும், பென் என்றாலே அது நம் அம்மா போல என்று தான் குழந்தைகள் மனதில் பதியும்! அப்பாவிடம் எல்லா விசயமும் பகிர்ந்து கொள்ளும் பக்கவம் வரும் போது நீங்கள் சொல்வது சாத்தியம், இல்லையென்றால் அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் அனைத்தையும் மற்ற ஆண்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு! எல்லா ஆண்களும் அப்பா போலவே நடந்து கொள்ள மாட்டார்களே!

இது அந்த பெண்ணுக்கு தானே ஆபத்து!

Balakumar Vijayaraman said...

ஒரு தகப்பனின் பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட இடுகை. மாற்றுக் கருத்தையும், அதற்கான காரணங்களையும் தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விவாத தொடர்ச்சியை அறிய ஆவல்.

வால்பையன் said...

//யாரையும் அங்கே விலக்கி வைத்து மர்ம வகுப்புகள் எடுத்து இது பெண்கள் விசயம், ஆண்களுக்கு அவசியமில்லையென்று ஒரு மாதாந்திர உபத்திரவத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு கூட கூனிக் குறுகும் போது பார்வைகள் கடலளவு விலகிப் போய்விடக் கூடிய அபாயமிருக்கிறதே.//

அதை தெரிந்து கொள்ள நாம் காட்டும் ஆர்வமே அவர்களுக்கு நம் மீது பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தும்! பொதுவாகவே பெண்கள் ஆண்களிடம் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள், மேலும் அவர்களது தனிபட்ட சொந்த விசயங்களாக சிலவற்றை அவர்கள் கருதும் போது, நாம் நாகரிகமாக ஒதுங்கி நிற்தலே நல்ல ஆண்மகனுக்கு அழகு!

பொதுவில் இல்லாவிட்டாலும் பெண்கள் அவர்களது பிரச்சனைகளை தங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள், அதுவே போதுமே!

வால்பையன் said...

மேற்சொன்னவை அனைத்தும் எனது புரிதலே! டாக்டர் சரியான விளக்கம் கொடுக்கலாம்!

கண்ணகி said...

உங்கள் வருத்தம் புரிகிறது சார். நீங்கள் வெளிநாட்டில் இருந்த்தால் உங்களுக்கு இந்தக்கேள்விகள் எழுகின்றன. நம் பெண்கள் இதை தயக்கத்துடனேயே எதிர்கொள்கிறனர். இது கொஞசம் கொஞசமாக மாறிவிடும்.அதனாலதான் அந்த தனி விளக்கங்கள் என்று நினைக்கிறேன். பதிவுகளில்கூட இதுபற்றி வரும்போது இது பெண்கள்பிரச்சினை என்று ஆண்கள் ஒதுங்கிவிடுகிறனர்.

என் கணவர் அவரின் சகோதரியின் மாதாந்திரப்பிரச்சினைகள் பற்றிக் கேட்கும்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். கிராமப்புறப்பெண்கள் இதை பேசக் கூச்சப்படுவதில்லை. நக்ர்ப்புறப்பெண்கள்தான் தய்க்கம் காட்டுகிண்றனர்.

குழந்தைவளர்ப்பில் நீங்கள் சொன்ன அனுபவ்ங்கள் உண்மையில் பாராட்டத்த்க்கவை. அவற்றில் பங்குகொள்ள நம்வீட்டு ஆண்களை நாம்தான் தயார்படுத்தவேண்டும்.

ஒருபெண்குழந்தைக்கு ஒரு தகப்ப்னின் பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும்போது அவள் எதிர்காலத்தில் தைரியமாக வெளியுலகை எதிர்கொள்வாள்..

உங்கள் ஆதங்கத்தை அருமையான பதிவாகப் போட்டுவிட்டீர்கள்.

மணிகண்டன் said...

With the number of incidents that we come across (or Dr shalini came across), it is imperative that she suggests only practical solutions that can be monitored. And i think that is what she did.

நிகழ்காலத்தில்... said...

அப்பா பெண்குழந்தைகளிடம் தவறாக நடக்கும் வாய்ப்பு மிகக்மிகக் குறைவே..

அப்பா தன் பெண்குழந்தைகளிடம் இயல்பாக பழகுவதே நல்லது.

ஆண்கள் பற்றிய பயத்தை பெண்குழந்தைக்கு குறைக்கும் மனோரீதியாக...

வாழ்த்துகள்

malar said...

"மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து..."

விடியொ ஆன்லைனில் பார்க்க முடியிமா?

Dr.Rudhran said...

what are your questions?

வால்பையன் said...

//அப்பா பெண்குழந்தைகளிடம் தவறாக நடக்கும் வாய்ப்பு மிகக்மிகக் குறைவே..//

அந்த “மிக மிக குறைவிற்கு” என்ன காரணம் என்று ஆராய்ந்தால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் தந்தையிடம் மகள் இடைவெளி விட்டு பழகுவது காரணமாக இருக்கலாம்!

//அப்பா தன் பெண்குழந்தைகளிடம் இயல்பாக பழகுவதே நல்லது.
ஆண்கள் பற்றிய பயத்தை பெண்குழந்தைக்கு குறைக்கும் மனோரீதியாக...//

இயல்பு, இயல்பு மீறிய நிலை என்பதற்க்கு எதாவது அளவு கோல் வைத்துள்ளீர்களா!?, வழிய வழிய போய் குழந்தைகளை தொந்தரவு செய்வதை விட அவர்களாகவே கற்று கொள்ள அனுமதிப்பது சிறப்பாக படுகிறது எனக்கு!

கோ-எஜுகேஷனில் படிக்க வைத்தாலே போதும், பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் மேல் இருக்கும் பயம் போய் விடும்!

Thekkikattan|தெகா said...

வால்,

//நிகழ்வின் நோக்கம் குழந்தை பாலியல் தொல்லைகள் தடுப்பு! அதை தந்தையை விட அதிக நேரம் குழந்தைகளுடன் இருக்கும் தாயே சரியாக கவனிக்க முடியும், அதன் பொருட்டே அவ்வாறு ஷாலினி கூறினார்! குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய், தந்தை இருவரின் கவனிப்பும் அவசியம்!//

மிக முக்கியமான பதில் உங்களது. இதனைக் கொண்டு என்னுடைய புரிதலை வைக்கிறேன் பாருங்க. கருத்தரங்கு நடத்தப்பட்டது சாதா மக்கள் புழங்கும் இடத்தில் அல்ல, ஒரு கல்லூரியின் வளாகத்தில் நன்கு படித்துத் தேர்ந்தவர்களிடத்திலும், அம்மா/அப்பாவாக ஏற்கெனவே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அலுவலக மக்களுக்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாண/மாணவிகளையும் குறி வைத்து எனும் பொழுது, சமூக பொது புத்தி தாண்டியும், அறிவியல் நோக்கில் விசயங்கள் தெளிவு படுத்தப்படுவதும் முக்கியமானதே.

கருத்தரங்கு பேசப்பட்ட சமூகத்தில் இரு பாலரும் வேலைக்கு செல்லும் நிலையில் இருந்திருக்கக் கூடும், என்ற நிலையில்.

//ஓரளவு வளர்ந்த குழந்தைகள் எல்லா ஆண்களிடமும் பாதுகாப்புதன்மையோடு பழகுவது நல்லது! //

ஆண்கள் என்ன புலியா/சிங்கமா, வனங்களிலிருந்தா வந்திருக்கிறார்கள். மர்ம முடிச்சு அவிழ்ந்து பெண்களுக்கென்று தனிப்பட்ட மனமும், விருப்பும், வெறுப்பும் இருக்கிறது என்ற புரிதலை ஆண்களிடத்தில் பதிய வைத்துவிட்டாலே, இது போன்ற "பயந்து, பாதுகாப்புதன்மையோடு" தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு பெண்ணும், 'முரடனாக' ஆணும் நகர்த்தப் பட வேண்டிய அவசியமிருக்காது. அதற்கு கல்வியும், விழிப்புணர்வும் கொடுக்கும் பட்சட்தில் அது இது போன்ற கருத்தரங்கங்களில்தான் ஆரம்பிக்க வேண்டும்.

Thekkikattan|தெகா said...

//வி.பாலகுமார் said...

ஒரு தகப்பனின் பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட இடுகை. மாற்றுக் கருத்தையும், அதற்கான காரணங்களையும் தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விவாத தொடர்ச்சியை அறிய ஆவல்.//

வாங்க பாலகுமார், எனக்கும் அறிய ஆவல்தான் பார்ப்போம்.

************

வால்,

//அப்பாவிடம் எல்லா விசயமும் பகிர்ந்து கொள்ளும் பக்கவம் வரும் போது நீங்கள் சொல்வது சாத்தியம், இல்லையென்றால் அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் அனைத்தையும் மற்ற ஆண்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு!//

அப்படியா, எப்படி?

//அதை தெரிந்து கொள்ள நாம் காட்டும் ஆர்வமே அவர்களுக்கு நம் மீது பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தும்! பொதுவாகவே பெண்கள் ஆண்களிடம் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள், மேலும் அவர்களது தனிபட்ட சொந்த விசயங்களாக சிலவற்றை அவர்கள் கருதும் போது, நாம் நாகரிகமாக ஒதுங்கி நிற்தலே நல்ல ஆண்மகனுக்கு அழகு!

பொதுவில் இல்லாவிட்டாலும் பெண்கள் அவர்களது பிரச்சனைகளை தங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள், அதுவே போதுமே!//

என்ன சொல்லுறீங்க, தெரிந்து கொள்ளவா போயி பேசிறீங்க :), வீட்டில் உள்ளவர்கள் புரிந்து நடந்துக்கொள்ளத்தானேங்க. முன்னமே அறிந்து நீங்க புரிந்து ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி வைச்சிருக்கீங்க. அதைப் போய் ஏன் பெண்கள் பொது இடத்தில் மற்ற ஆண்களுடன் பேச வேண்டும்? ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உடலியற் செயற் பாடுகள் புரிந்து கொண்டால், சமூக நெளிவுகளுக்கு அவசியமிருக்காதுதானே... அதுவே ஒரு ஆரோக்கியமான சமூகமாக மொத்தமாக வெளிப்படுத்திக் கொள்ள அது ஒரு வாய்ப்பை வழங்காதா..?

வால்பையன் said...

//ஆண்கள் என்ன புலியா/சிங்கமா, வனங்களிலிருந்தா வந்திருக்கிறார்கள். மர்ம முடிச்சு அவிழ்ந்து பெண்களுக்கென்று தனிப்பட்ட மனமும், விருப்பும், வெறுப்பும் இருக்கிறது என்ற புரிதலை ஆண்களிடத்தில் பதிய வைத்துவிட்டாலே, இது போன்ற "பயந்து, பாதுகாப்புதன்மையோடு" தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு பெண்ணும், 'முரடனாக' ஆணும் நகர்த்தப் பட வேண்டிய அவசியமிருக்காது. அதற்கு கல்வியும், விழிப்புணர்வும் கொடுக்கும் பட்சட்தில் அது இது போன்ற கருத்தரங்கங்களில்தான் ஆரம்பிக்க வேண்டும். //


நிச்சயமாக இந்த கருத்தில் உடன்படுகிறேன்! அஹே நேரம் எத்தனை ஆண்கள் இதை ஏற்று கொள்ளும் மனபக்குவத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி!

நானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்ற முறையில் என் பெண்ணிடம் எப்படி பழக வேண்டும் என்பதில் இன்னும் கற்ற்கும் நினைலியில் தான் இருக்கிறேன்! நமக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று!

இனிவரும் தலைமுறையினர் குழந்தைகளிடம் நட்புறவை பேண வேண்டியது அவசியமான ஒன்று!

வால்பையன் said...

//ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உடலியற் செயற் பாடுகள் புரிந்து கொண்டால், சமூக நெளிவுகளுக்கு அவசியமிருக்காதுதானே...//

நிச்சயமாக சரிதான்!
செயல்பாடுகலில் எந்த அளவுக்கு ஆண்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது அது! தவறான தகவல்கள் வேறு பாதைக்கு குழந்தைகளை அழைத்து செல்லலாம்!

குட்டிப்பையா|Kutipaiya said...

மிகக் கனிவான, பொறுப்பான ஒரு தகப்பனின் குரலாக உணர்கிறேன் - பொறாமையாக இருக்கிறது தெக்கி எனக்கு, தங்கள் மகளின் மீது :):)

Thekkikattan|தெகா said...

வாங்க கண்ணகி,

//இது கொஞசம் கொஞசமாக மாறிவிடும்.//

நல்லது. நம்புவோம்.

//என் கணவர் அவரின் சகோதரியின் மாதாந்திரப்பிரச்சினைகள் பற்றிக் கேட்கும்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.//

ரொம்ப ஆரோக்கியமா இருந்திருக்குமே! அப்படி இல்லாமல், உதாரணத்திற்கு மார்பகத்தில் ஒரு சின்ன கட்டி என்று கூட பெத்த மகனிடத்தில் அல்லது சகோதரனிடத்தில் கூறுவதற்கு கூட கூச்சம். இப்படி இருந்தா எப்படி? சோ, உடலியல் செயற்பாடுகள் ஆரோக்கியமான முறையில் வீட்டிலிருப்பவர்களுடன் பேசிக்கொள்வது மிகவும் நல்லது, என்றே கருதுகிறேன்.

//ஒருபெண்குழந்தைக்கு ஒரு தகப்ப்னின் பாதுகாப்பும் அன்பும் கிடைக்கும்போது அவள் எதிர்காலத்தில் தைரியமாக வெளியுலகை எதிர்கொள்வாள்..//

கண்டிப்பாக அதுவே மிக்க உண்மை. அடிப்படை அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கலான விஷயத்தை தொட்டு சில முக்கியமான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள்.. மிகவும் நியாயமான சந்தேகங்கள்.. இதை டாக்டரின் பார்வைக்கு கொண்ட செல்ல இயலுமா என்று பார்க்கலாம்..

Thekkikattan|தெகா said...

//மணிகண்டன் said...

With the number of incidents that we come across (or Dr shalini came across), it is imperative that she suggests only practical solutions that can be monitored. And i think that is what she did.//

அது வரைக்கும் எனக்கும் புரிகிறது. ஆனால், கருத்தரங்கத்தில் அன்று கிடைத்த கூட்டம் கொஞ்சம் வித்தியாசமானது அதனில் நானும் அங்கிருந்திருந்தால் அமர்ந்திருக்கக் கூடும், அப்பொழுது எழுந்த கேள்விகள் இதுவாகத்தான் இருந்திருக்கக் கூடும் என்றளவிலேயே இந்தக் கட்டுரை, மணி! புரிகிறது டாக்டரின் அனுபவம் எப்படி நமது சமூகத்தை அனுகச் சொல்கிறது என்பதும்...

மங்கை said...

//இது எந்தளவிற்கு என்றால் பெண் குழந்தைகளின் அப்பாவும் ஒரு சராசரி ஆண்தான் அவரிடம் அவர் பெற்ற பெண் குழந்தைகள் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் போல எனக்கு விளங்கிக் கொள்ள முடிந்ததாகப்பட்டது//

டாக்டர் ஷாலினி அப்பாவும் சராசரி ஆண் தான் என்ற கண்ணோட்டத்தில் சொன்னாதாக எனக்கு தெரியவில்லை.. அம்மாக்களின் பங்கு அதிகம் னு வேனா சொல்லி இருக்கலாம்... அது நம்ம சமூக வழக்கம்...ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் அம்மாவிடம் நிறைய பேசுவதை பார்க்கிறோம்... அப்பாவிடம் ஒரு வித தயக்கம்...அதுவும் எல்லாருக்கும் இருக்குறதில்லை... சிலருக்கு தான்..

ஒரு எடுத்துகாட்டு.. ஒரு மாசத்துக்கு முன்னாடி மதுரையில் இருந்து பஸ் ல வந்துட்டு இருக்கும்போது...ஒரு அழகான குடும்பம் பஸ் ல ஏறுனாங்க... நான் அழகு ன்னு சொல்லும்போதே எப்படி ரசிச்சுருப்பேன்னு பாருங்க.. இரண்டு பெண் குழந்தைகள்..அவர்களுடன் அவர்களின் தந்தை..அவர்கள் பேசியதை வைத்து அதில் மூத்த பெண்ணிற்கு திருமணம் என்பதை புரிந்து கொண்டேன்... உட்காருவதற்கு இடம் இல்லாததால்..படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டு...அந்தப் பெண்கள் அப்பாவிடம் விளையாடிக்கொண்டு வந்ததை இப்பொழுது நினைத்தாலும் எனக்குள் ஏதோ ஒரு அழகான உணர்வு ஏற்படுகிறது... அந்த தந்தை அதிகம் படிக்காத ஒரு விவசாயி என்பதையும் புரிந்து கொண்டேன்.... அப்பாவிடம் வெளிப்படையாக பேசிய விஷயங்கள்.. அப்பாவின் சட்டையில் விட்டு போன பட்டனை போட்டு விட இரண்டு பேரும் போட்ட சண்டை..18..20 வயதுடைய கிராமத்தில் வளர்ந்த பெண்களுக்கு, தங்கள் தந்தையை அவர்களின் தோழியாக நினைக்க முடிகிறது...

அப்பாவும் ஒரு சராசரி ஆண் தான் என்கிற பயம் நம் சமுதாயத்தில் பரவலாக இருக்கும் ஒரு பயம் என்று நினைக்க முடியவில்லை...

ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சில சம்பவங்கள் நடந்திருக்கலாம்... அதை வைத்து அப்பாக்களின் மீது பாலியல் சார்ந்த பயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

அப்பாவிடம் எல்லா விஷயங்களையும் சொல் முடியாமல் இருப்பது அவர் மேல் இருக்கும் பயம் காரணமாக இருக்கலாம்..அதுவும் கூட இப்பொழுது மாறி வருகிறது என்று நினைக்குறேன்..

மற்றபடி இந்த பயம் பொதுவான ஒன்றாக எனக்கு தெரியவில்லை தெகா..கண்டிப்பாக இல்லை னு சொல்லுவேன்...

ஆனால் வளர்ப்பில் அப்பாக்களின் பங்கு இன்னும் அதிகமாக அவர்கள் தான் முயற்சிக்க வேண்டும்... அதைவிட சந்தோஷம் கொடுக்க கூடிய விஷயம் வேறொன்றும் இல்லை...

Thekkikattan|தெகா said...

//நிகழ்காலத்தில்... said...

அப்பா பெண்குழந்தைகளிடம் தவறாக நடக்கும் வாய்ப்பு மிகக்மிகக் குறைவே.//

இது ஒரு கம்பள வார்த்தை. இருப்பினும் மெஜாரிடி பெற்றோர்கள் அப்படியே அமைந்திருப்பதே இயற்கை, நேரடி சிந்தனையில். எங்காவது அங்குமிங்குமாக கோணாலாகிப் போன கேசுகளும் வெளி வரத்தானே செய்கின்றன...

மற்ற கருத்துக்களும் நன்றி... நிகழ்காலம்.

//malar said...

"மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து..."

விடியொ ஆன்லைனில் பார்க்க முடியிமா?//

ஏத்தியிருக்கக் கூடும்? கிடைத்தால் இங்கே லிங்க் கொடுத்துவிடுகிறேன். நன்றி!

Anonymous said...

பெண் குழந்தைகள் அப்பாவிடம் இருந்து விலகி இருப்பதே நலம். தொட்டு பேசுறதை ஒரு பருவத்துடன் நிறுத்திவிடனும். தாத்தாக்களே தடவும் எண்ணத்தில் நெருங்கும் போது...... இதை புரிந்ததால் தான் டாக்டர் ஷாலினி அம்மாவிடம் பகிர்ந்து கொள் என்று வெளிப்படையாக சொல்லி இருப்பார்.

பதிவுலகத்தில முரணா பேசுகிற ஆண்களை ஒரு கேள்வி கேட்கிறேன். முரணான எண்ணம் கொண்ட நீங்கள் எப்படி நல்ல தந்தையா இருக்க முடியும்? உங்களிடமிருந்தும் உங்கள் பெண் குழந்தைகள் விலகி இருப்பது தான் நல்லது.

இப்படிக்கு,
என் பெண்ணின் அம்மா

காட்டாறு said...

தோழி கண்டிப்பா வாசின்னு சொல்லும் போதே தெரியும் எனக்கு. அவல் தான்னு. என்னவோ ஏதோன்னு வந்து வாசிச்சிட்டே இருந்தேன். பின்ன சுத்தி சுத்தி வாசித்து வர சொல்லிட்டார் தெக்கி. காட்டு மாட்டுத்தனமா இருக்கேப்பான்னு நெனச்சா… ஆகா.. அங்கே அபிதேவ் என்பவர் அம்மணி டாக்டரின் பேச்சை பதிந்திருக்கிறார் அப்படின்னு புரிந்த்து. இது புரிய இம்மாம் நேரம். Any rewrite is subject to interpretation அப்படின்றது என்னோட வாதம். அப்படி பார்த்தால், டாக்டர் நெசமாவே அம்மா கிட்ட மட்டும் தான் நெருங்கி பேசனும் அப்படின்னு சொல்லி இருப்பாரா அல்லது மங்கை சொன்னது போல //அப்பாவிடம் எல்லா விஷயங்களையும் சொல் முடியாமல் இருப்பது அவர் மேல் இருக்கும் பயம் காரணமாக இருக்கலாம்// அதனால அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போ அதுவல்ல என் பிரச்சனை. அம்மா கிட்ட மட்டும் சொல்லுங்கன்னு தவறா புரிஞ்சிட்டு நண்பர் இந்த பதிவை போட்டு விட்டாரான்னு வாசித்து முடித்தால்… அட அட அட பதில்கள் அசர வைத்து விட்டது. அதிலும் ஒரு அம்மா இப்படி பேசியது… நெசமாவே இப்படி ஒரு அம்மா தன் கணவன் மேல் அவநம்பிக்கையுடன் தான் வாழ்க்கை நட்ததுறாங்களா? இல்லை என் கண் தான் என்னை ஏமாற்றுகிறதா?

மங்கை said...

//இதை புரிந்ததால் தான் டாக்டர் ஷாலினி அம்மாவிடம் பகிர்ந்து கொள் என்று வெளிப்படையாக சொல்லி இருப்பார். ///

வாங்க அனானி

முதல்ல அவங்க என்ன சொன்னாங்க அதை எப்படி புரிஞ்சுட்டீங்கன்னே தெரியலை...மீண்டும் சொல்கிறேன்.. இது சமுதாயத்தின் பொதுவான ஒரு எண்ணம் அல்ல... ஒரு சில பெண்களின் எண்ணமாக தான் இருக்க முடியும்... அதுவும் அப்பாவிடம் நெருங்கி பழகும் அதிர்ஷ்டம் இல்லாதவங்க அப்படி நினைக்கலாம்...

என்னையே நான் உதாரணமா எடுத்துக்கேறேன்... நான் தில்லியில இருந்த போது...வீட்டுக்கு வரும்போது சில சமயம் இரவு 8 அல்லது 9 ஆயுடும்.. அல்லது சில வெளியூர் பயணங்கள் வரும்.. அப்பல்லாம் என் பெண்ணுக்கு துணையா இருந்தது என் கணவர் தான்.... அந்த மாதிரி சந்தர்பத்துல நான் என் பெண்ணை யார்ட்ட விட்டுட்டு போறது.. கணவரை நம்பக் கூடாதா.. இது என்ன வக்கிர புத்தி...எங்கயோ நடந்த சில சம்பவங்கள வச்சுட்டு எனக்கு எல்லா விதத்துலேயும் உதவர கணவரிடம் பெண்ண அளவோட பழக விடனும்னு நினைக்குறது என்ன ஒரு பண்பாடற்ற எண்ணம்...ஸ்கூல் ல விடறது.. சினிமாக்கு போறப்போ துணைக்கு வர்ரது...ட்ரைவர் வேலை பார்க்குறதுக்கெல்லாம் கணவர் வேனும்..ஆனா பொண்ணு மட்டும் கொஞ்சம் தள்ளியே நின்னு பழகனுமா...ஆஹா...எப்படி இப்படி எல்லாம் நினைக்க தோனுது..

அது என்ன பதிவுலகத்துல முரணா பேசுர ஆண்கள்... அவங்கெல்லாம் நல்ல அப்பாவா இருக்காம தான் இருக்காங்களோ...எங்க அவங்க நல்ல அப்பாவா இருக்க முடியாதுங்கறதுக்கு சில எடுத்துக் காட்டு கொடுங்க பார்க்கலாம்

மங்கை said...

//நெசமாவே இப்படி ஒரு அம்மா தன் கணவன் மேல் அவநம்பிக்கையுடன் தான் வாழ்க்கை நட்ததுறாங்களா?///

காட்டாறு நல்லா கேட்டீங்க...

காட்டாறு said...

பெண்ணின் அம்மாவிற்கு, வளர்ந்த குழந்தைக்கு தெரியும் யாரிடம் (பெற்றவர் மட்டும் இங்கே) என்ன பேசலாம் என. இதை அம்மாவிடம் பேசு; இதை அப்பாவிடம் பேசு என்று பாகம் பிரித்து சொல்லிக் கொடுக்காதீங்க. அவ்வாறு வளரும் குழந்தையின் மனநிலை எப்பவும் ஆண்களை சந்தேக கண்ணுடன் நோக்கும் மனநிலையில் தான் இருக்கும். இது போல இன்னுமொரு ஜெனரேசன் வளர நீங்க தோள் கொடுக்காதீங்க. ப்ளீஸ்.

காட்டாறு said...

//வால்பையன் சொன்னது - நானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்ற முறையில் என் பெண்ணிடம் எப்படி பழக வேண்டும் என்பதில் இன்னும் கற்ற்கும் நினைலியில் தான் இருக்கிறேன்! நமக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று!//

தந்தையை ரோல்மாடலா கொண்டு வளர்ந்த பெண் என்ற முறையில் சொல்லுறேன் வால்! முதல்ல இயல்பா இருங்க. ஆண் பெண் பேதம் பார்க்காதீங்க. கற்று வாழ வேண்டிய உறவு அல்ல இந்த தகப்பன் மகள் உறவு. நீங்கள் சொல்லியும் கொடுக்கலாம்; கற்றும் தெளிவடையலாம். இதற்கு விழிப்புணர்வு வரும் வரை நீங்கள் காத்திருக்கலாம்; ஆனால் காலம் காத்திருக்காது.

காட்டாறு said...

//வால் சொன்னது - கோ-எஜுகேஷனில் படிக்க வைத்தாலே போதும், பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் மேல் இருக்கும் பயம் போய் விடும்!//

அட இங்க பாருங்கப்பா.... தந்தை மகளுக்கு சொல்லி தருவது பற்றி தயக்கம் காண்பிக்கும் நண்பர், கோ-எட் படிக்க வைத்தால் சம வயது பையன்களிடமிருந்து கற்று கொள்வார், அல்லது அவர்கள் (ஆண்கள்!) மேலுள்ள பயம் போகும் என கூறுவது சிறுபிள்ளைத்தனமாகவும், அறியாமை வயதிலிருந்து இன்னும் நண்பர் வெளி வரவில்லையெனவும் எனக்கு தோணுது. தன் வீட்டில் சிறுவயதில் கற்றுக்கொள்ளும் பண்பு சீர்பட தான் பள்ளி செல்கிறோம். பள்ளியில் புரிந்து கொள்ளட்டும் புலி சிங்கங்களை விட பயமான ஆண்கள் பற்றி என எட்ட நின்று பார்க்கும் பெற்றோரை என்னென்பது? :-(

Thekkikattan|தெகா said...

//Dr.Rudhran said...

what are your questions?//

Doc, I have taken it in a complemented tone :) that, as if you are saying - you let your questions out and answered to it all, where have you given me a chance to add more as bathil... :D

Anyway, here is one of many questiones need to be addressed - the basic one:

...ஒரு தகப்பனும் ஒரு சராசரி ஆணாக நடந்து கொள்வான் என்கிற ஒரு தவறான கண்ணோட்டத்தை தன் பெற்ற பெண் குழந்தைகளிடத்தே கூட விதைத்து, ஒரு சந்தேகப் பார்வையுடனே ஆண்களை அணுகி அப்படியே அந்தப் பெண் குழந்தையும் அதே மனவோட்டத்தில் வளர்ந்து வந்தால் அது ஓர் ஆரோக்கியமற்ற வளர்ச்சியாக அமைந்து விடக் கூடும்தானே??? ...

Thekkikattan|தெகா said...

வால், நீங்கதான் மாட்டீனிங்க நம்ம சமூகத்திற்கு உண்டான அத்தனை அபத்தக் கேள்விகளையும் நீங்களே கேட்டு, நம்ம இங்க உரையாடி எல்லாருக்கும் கொண்டு போயி சேர்ப்போம்... ;-)

//அந்த “மிக மிக குறைவிற்கு” என்ன காரணம் என்று ஆராய்ந்தால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் தந்தையிடம் மகள் இடைவெளி விட்டு பழகுவது காரணமாக இருக்கலாம்!//

என்ன ஒரு அபத்தமான ஆராய்ச்சி. இது எந்தளவிற்கு உண்மை, வால். அப்போ 'பஞ்சும், நெருப்பும்' போலங்கிறீங்க. ஏங்க, இரு தசைகள் உரசிக் கொண்டாலே பத்திக்கும் அப்படிங்கிறீங்களா, அங்கே உணர்வு, மனசு, விருப்பு/வெறுப்பு எல்லாவற்றிர்கும் மேல் பகுத்தறிவு செத்தே போயிடுமா?

//இயல்பு, இயல்பு மீறிய நிலை என்பதற்க்கு எதாவது அளவு கோல் வைத்துள்ளீர்களா!?, வழிய வழிய போய் குழந்தைகளை தொந்தரவு செய்வதை விட அவர்களாகவே கற்று கொள்ள அனுமதிப்பது சிறப்பாக படுகிறது எனக்கு! //

Parental instinct is perennial and spontaneous act, it should be natural and you present yourself just your existence... the rest would be taken care of. அப்படியாக அது நிகழும் பொழுது குழந்தைகளுக்குத் தெரியும் எது வரைக்கும் எந்தப் பெற்றோரிடத்தில் வால் ஆட்ட முடியும்/குலோசாக இருக்க முடியும் என்பதெல்லாம். அது ஒரு தனிப்பதிவிற்கான விசயம். பேசுவோம்.

//கோ-எஜுகேஷனில் படிக்க வைத்தாலே போதும், பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் மேல் இருக்கும் பயம் போய் விடும்!//

அந்தக் கல்விக்கான அடித்தளம் வீட்டில் தொடங்க வேண்டும், முன்னமே தெரிந்த நண்ப <==> அப்பா, சகோதரர்களோடு.

கமலா said...

கணவன், மனைவி இருவரும் உட்கார்ந்து சில விசயங்களை பேசாமல் தவிர்ப்பது முக்கிய காரணம். ஒருவருக்கொருவர் குழந்தைகள் சம்பந்தமான விசயங்களை கூட கலந்துரையாடுவது கிடையாது.

குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்புகளில் பெரும்பாலான ஆண்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கும் சென்று வீடு வரும்போது வீட்டுப்பிரச்சினைகள் சிலவற்றை கவனிக்காமல், வேலைக்குச் சென்று வருவதே பெரும் பாரமாக அலுப்பாக நினைத்து விட்டு விடுகின்றனர்.

குடும்பத்தில் பெண்களும் பிள்ளைகளை கவனிப்பதுதான் தன் முழு வேலை தனக்குத்தான் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு அதிகமாக உள்ளது என தவறான சுய கற்பிதம் பண்ணிக் கொள்வதும் பிள்ளைகளின் வளர் பிரச்சினைக்குக் காரணம்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

எங்கோ நடக்கும் அபத்தங்களை நம்மோடு ஒட்ட வைத்து விவாதிப்பது அபத்தத்திலும் அபத்தம்.அப்பா,தாத்தா,அண்ணன் இவர்கள் தங்கள் வீட்டுப்பெண்களை சீரழிப்பதை,எங்கோ முறைதவறிய இடங்களில் நடப்பதை மருத்துவர் பொதுவான ஒரு கண்ணோட்டத்தில் ஒரு எச்சரிக்கையாகத்தருவது வழக்கம்.அதை முழுமையாக எடுத்துக்கொள்வது அவசியமில்லை.நமது குடும்பப்பெண்களுக்கு எது தேவையோ,அதை மட்டும் நண்பர்கள் எடுத்துக்கொள்வது சிறப்பு. மொத்த ஆண்குலத்தையும் தூக்கிப்போட்டு உடைப்பார்கள் பெண்கள்.ஆனால் அவர்கள் வீட்டு ஆண்களை விதிவிலக்கு என்பார்கள்.என் மகளுக்கு அப்பா செல்லம் அதிகம்.கல்லூரியில் படிக்கும் அவள் அவருடன் கைகளைப்பின்னி நடக்கும் போது எனக்குப்பெருமையாக இருக்கும்.காரணம் அவர்களுக்குள் இருக்கும் நட்பு மட்டுமல்ல.நான் என் தந்தையிடம் இப்படி கைகோர்த்து நடந்ததில்லை என்பதால்.ஒரு தந்தைக்கும்,மகளுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை ஆண்,பெண் என்று பாகுபடுத்தாமல் தாய்மையில் பாதி தந்தை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.மருத்துவர்கள் ஒரு கலந்துரையாடல் என்று வரும்போது அந்தக்கருத்து குறித்த சாத்தியக்கூறுகளை விவாதிப்பார்கள்.அதை நம்மோடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.ஆண்களுக்கு நல்ல வளர்ப்பு முறையையும்,பெண்களோடு சகஜப்போக்கையும் வளர்த்துவிட்டால்,பெண்கள் மீதான அவர்களின் பிரமிப்பு குறைந்து ஆரோக்கியமான நட்பு விரியும்.அதற்கு இருபாலரும் படிக்கும் பள்ளிகள் உதவுகின்றன.நண்பர் வால் பையன் சொன்னதுபோல.நிச்சயமாக ஒரு தந்தை தனது பெண்ணுக்கு தாயாய்,தந்தையாய்,சகோதரனாய்,நண்பனாய் இருக்க முடியும்.இருக்க வேண்டும்.இருக்கிறார்கள்.சீக்குப்பிடித்த எண்ணங்களை விலக்கி வைப்பது நல்லது.எச்சரிக்கையை மனதில் ஒரு மூலையில் வைத்துக்கொள்ளவேண்டுமே தவிர எந்த நேரத்திலும் மனதில் பரவும் படி வைத்துக்கொண்டால் எல்லோரையும் சந்தேகத்துடன் அணுகும் மனப்பிறழ்வு நிலைக்கு நம் பெண்கள் தள்ளப்படுவர்.

Thekkikattan|தெகா said...

//kutipaiya said...

மிகக் கனிவான, பொறுப்பான ஒரு தகப்பனின் குரலாக உணர்கிறேன் - பொறாமையாக இருக்கிறது தெக்கி எனக்கு, தங்கள் மகளின் மீது :):)//

வாங்க குட்டிப்பையா, இப்படிச் சொல்லி தப்பிச்சிட்டீங்களே, கருத்து ஒண்ணுமே சொல்லாம. இருந்தாலும், அப்பனா இருக்கிறதுக்கு இவ்வளவு பெரிய போட்டிப் பரிசா :-).


**********

//கார்த்திகைப் பாண்டியன் said...

குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கலான விஷயத்தை தொட்டு சில முக்கியமான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள்.. மிகவும் நியாயமான சந்தேகங்கள்.. இதை டாக்டரின் பார்வைக்கு கொண்ட செல்ல இயலுமா என்று பார்க்கலாம்.//

வாங்க கா. பா, அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இன்னும் கூடுதலாக மக்கள் தங்களின் பார்வையை இதன் பொருட்டு வைதிருந்தால் சிறப்பாக அமையக்கூடும். டாக்டர். ஷாலினிக்கு பிரத்தியோகமாக இந்தப் பதிவின் தொடுப்பினை வழங்கி மின்னஞ்சல் செய்திருக்கிறேன். பார்க்கலாம். நன்றி!

Thamiz Priyan said...

உங்களூடைய கேள்விகள் யோசிக்கத் தக்கவை. ஆனால் குட் டச் பேட் டச்சை உண்ரதட் தெரிந்த ஒரு தாய்க்கு தனது கணவனைப் பற்றியும் கண்டிப்பாக தெரியுமாதலால் இதை அவளே கவனமாக எடுத்துக் கொள்ளுவாள். எல்லா ஆண்களும் அப்படி இல்லையே.. ஆனாலும் இன்றைய நவீன யுகத்தில் ஒரு வயதை அடைந்த பிறகு தொடுதல்கள் இல்லாத அப்பா-மகள் உறவே சிறந்தது என்பது எனது கருத்து.

Thekkikattan|தெகா said...

வாங்க மங்கை,

இது உங்களோட தளம் அடிச்சு விளையாடுங்க.

//அப்பாவிடம் ஒரு வித தயக்கம்...அதுவும் எல்லாருக்கும் இருக்குறதில்லை... சிலருக்கு தான்...//

இந்த ஒரு வித தயக்கமும், பயமும்தாங்க அவ நம்பிக்கை, சுயநலம், சந்தேகப் புத்தி எப்படி குடும்பமா புரிஞ்சிகிட்டு கடைசி வரைக்கும் 'அன்பு, சந்தோஷம்' அப்படிங்கிற அடிப்படை க்ரவுண்ட்ல நின்னு கொழித்து வாழ்ந்து முடிக்க முடியாம ஏதோ வறட்சியில எதனையோ தேடித் தேயிற மாதிரி குடும்பங்களுக்குள்ளர நடக்கிற அத்தனை மோடு முட்டித்தனமும் - குழந்தைகளுக்கு வந்து ஒட்டிக்க வைக்கிது போல :-)

இருந்தாலும், நீங்க சொன்ன அந்த பேருந்துக் குடும்பம் அப்படியே உட்கார்ந்து ரசிச்சிட்டே நாள் கணக்கா வாழ்ந்துரலாம் போல, லக்கி ஃபெல்லோ தட் அப்பா...

காட்டாறு said...

//தமிழ்பிரியன் சொன்னது -- ஆனாலும் இன்றைய நவீன யுகத்தில் ஒரு வயதை அடைந்த பிறகு தொடுதல்கள் இல்லாத அப்பா-மகள் உறவே சிறந்தது என்பது எனது கருத்து.
//

இதையே தான் நாங்களும் சொல்லுறோம். இந்த நவீன யுகத்தில் தான் தொடுதல்கள் அதிகம். குட்&பேட் தொடுதல் பற்றிய முதல் பாடம் வீட்டில் ஆரம்பமாகட்டும். சினிமாவில் கதாநாயகன் கையை தொட்டதும் காதல் வருவது எவ்வளவு தூரம் உண்மையோ, அது போல தான் தொடல் இல்லா தந்தை மகள் உறவு நல்லது என்பது.

அது சரி... இது என்ன எல்லோரும் தந்தை மகள் உறவு பற்றியே பேசுறீங்க. அம்மா மகன் என்பது மட்டும் தெய்வீகமோ?

சாந்தி லெட்சுமணன் சொன்னதை திரும்ப ஒரு முறை வாசிச்சிக்கோங்க.

காட்டாறு said...

//தமிழ்பிரியன் சொன்னது - ஒரு வயதை அடைந்த பிறகு தொடுதல்கள் இல்லாத அப்பா-மகள் உறவே சிறந்தது என்பது எனது கருத்து. //

உங்களின் இந்த கருத்துக்கு காரணம் சொன்னால், விரிவாக பேசலாமே.

எங்கள் வீட்டில் அடித்து பிடித்து விளையாடும் உறவு தான். சகோதர சகோதிரிகளிடையும் சரி, பெற்றோர் குழந்தைகளோடும் சரி. சம்மர் லீவு வரும் போதெல்லாம் அப்பாவோடும், சகோதரர்களோடும் கபடி விளையாடுவதும், வாலி பால் விளையாடுவதும் எங்கள் வீட்டில் தினம் தினம் காணும் காட்சி. பெரிய குடும்பம் ஆதலால், ரொம்ப ஜாலியாக இருக்கும். நாங்கள் யாவரும் இன்று நல்நிலமையில் தலையெடுத்து நிற்பதும், பெண்கள் ஆண்களுக்கு நிகராய் அவரவர் வேலையில் பெரும் பதவியில் இருப்பதும் ஆண் பெண் பேதமின்றி வளர்ந்ததும் ஒரு காரணம் என்று தான் கூறுவேன்.

Thekkikattan|தெகா said...

என் பெண்ணின் அம்மா,

ரொம்ப முக்கியமான பின்னூட்டங்க உங்களோடது. இது மாதிரி மனசுக்குள்ளர இருக்கிறத வெளியே விட்டாத்தானேங்க நம்மோட வளர்ச்சி எந்தளவிற்கு பக்குவத்தோடு அமைந்துப்பட்டிருக்கிறதின்னு தெரிஞ்சிக்கவே ஒரு வாய்ப்பா இருக்கும். தைரியமா வந்து குறைந்த பட்சம் ஒரு அனானியாகவாவது உங்களின் பார்வை இங்கே வைத்ததிற்கு நன்றிங்க. கும்மியில மூழ்கியே மயங்கி வாழ்ந்திடறது ரொம்ப எளிதுதான். இருந்தாலும், நம்ம இருப்பு ஒண்ணுமே இல்லேன்னு ஒரு நாள் வரும் போது, இந்த விட்டுடுப் போன எண்ணங்கள்தான் கொஞ்ச நாளக்காவது கூடுதலா இருந்துட்டு வருது. அதுனாலே பேசுங்க. அப்பப்போ. :-) நன்றி!

பதில் கிடைச்சிருக்குமே ;-)

மங்கை said...

நானும் யாராவது ஆண் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகிறது பத்தி பேசுவாங்கனு நேத்துல இருந்து காத்துட்டு இருக்கேன்... காட்டாறு கொஞ்சம் அதை தொட்டுட்டு போயிட்டாங்க.

பாலியல் கொடுமையை மையமாக வைத்து தான் இந்த கலந்துரையாடல்...ஆண் குழந்தைகளுக்கு இது நடப்பதில்லையா.. அது பற்றியும் பேசுங்க..

இந்த உலகில் அப்பா தான் பெண்ணுக்கு அறிமுகமாகும் முதல் ஆண்.. பெண்மையில்/ ஆண்மையில் இருக்கும் சிறப்பை,வேறுபாட்டை உணர்த்துவது இந்த உறவு தான்.. அதை எத்தனை அழகாக பொறுப்பாக எடுத்து சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.. இதை ஏன் உணர மறுக்கிறோம்.. ஆணுடன் வாதிடவும் சமரசம் செய்துகொள்ளவும் ஒரு பெண்ணிற்கு தந்தை என்ற உறவு தான் கற்றுக் கொடுக்கிறது... அதன் பொருட்டு தன் எல்லைகளை அவள் தெரிந்து கொள்வாள்..

தன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தன் தேவைகளை எண்ணங்களை புரிந்து கொள்ளும் ஒரு அப்பாவினால் அவளின் தன்நம்பிக்கை கூடும்.. a girl will learn to be assertive without being aggressive..

இது மாதிரி அப்பா மகள் உறவுல இருக்குற நன்மைகளை சொல்லிட்டே போகலாம்... அப்படி இல்லாத அப்பாக்கள் இனிமேலாவது மகளின் நன்மையைக் கருதி அன்பா அரவணைச்சு போகப் பாருங்க... அப்பாக்களிடமிருந்து மகளை தள்ளி வச்சு பார்க்குற அம்மாக்கள் ரூம் போட்டு யோசிங்க...

வால்பையன் said...

//நானும் யாராவது ஆண் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகிறது பத்தி பேசுவாங்கனு நேத்துல இருந்து காத்துட்டு இருக்கேன்..//

அது பற்றியும் டாக்டர் ஷாலினி பேசினார்!

ஆண் குழந்தைகள் பிடிக்காததை மூர்க்கமாக எதிர்க்கும், பெண் குழந்தையால் அது முடிவதில்லை, அதற்கும் மாற்று செய்ய வேண்டும் என்றும் கூறினார்!

உண்மையில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண் குழந்தைகள் தானாம், ஆனால் வெளியே தெரியவதில்லை என்றார்!

Thekkikattan|தெகா said...

//கமலா said...
கணவன், மனைவி இருவரும் உட்கார்ந்து சில விசயங்களை பேசாமல் தவிர்ப்பது முக்கிய காரணம். ஒருவருக்கொருவர் குழந்தைகள் சம்பந்தமான விசயங்களை கூட கலந்துரையாடுவது கிடையாது.//

இதுவும் முக்கியமானதொரு விசயமே. நன்றி, கமலா!


*****************************
வாங்க க.நா.சாந்தி லெட்சுமணன்,

எந்த வரிகளை ஹைலைட் பண்ணுவது எந்த வரிகளை விடுவதுன்னு தெரியாத அளவிற்கு தங்களின் பின்னூட்டம் நெத்தியடியாக அமைந்திருந்தது. மனதிற்குள் வக்கிரத்துடனும், அவ நம்பிக்கையுடனும் வாழ்க்கை நடத்தும்/தொடங்கும் அனைவருக்கு ரொம்ப அவசியம் தேவைப் படும் கருத்து.

கோமதி அரசு said...

பெண் குழந்தைகள் எல்லோரும் அப்பாவை தான் ரொம்ப விரும்புவார்கள். தாயிடம் சொல்ல முடியாத விஷயங்களை கூட தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

என் பெண்ணுக்கு தன் தந்தையைதான் மிகவும் பிடிக்கும்.அவள் அப்பா குற்றம் சொல்லாமல் அவளை பாராட்டிக்கொண்டே இருப்பார்கள்.

எனக்கும் மிகவும் பிடித்தவர் அப்பா.
தாயுமானவராய் எத்தனை சமயங்களில்
என் அப்பா இருந்திருக்கிறார்,எனக்கு திருமணம் ஆனபிறகு கூட நான் என் அப்பாவின் மடியில் தலைவைத்துக் கொண்டு பேசுவேன்.

என மகன் தன் மனைவியின் பிரசவ சமயத்தில் அருகில் இருந்ததால் பெண்களின் கஷ்டம் எல்லாம் உணர்ந்து இருக்கிறான்.

என் கணவர் பெண்களுடன் வளராவிட்டாலும் பெண்களின் கஷ்டம் நஷடம் தெரிந்தவர்கள்.

அந்நிய ஆடவர்களிடம், மற்றும் உறவு மனிதர்கள் என்றாலும் அவர்களிடமும்
தள்ளி நின்று பழுகுவது நல்லது.
மனித போர்வையில் மிருகங்கள் உலா வருவதை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை குழந்தைகளுக்கு இரு(ஆண்,பெண்) பால குழந்தைகளுக்கும் உணர்த்தி நல்ல முறையில் சமுதாயத்தை எதிர் கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும் அது நம் கடமை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மருத்துவர்கள் ஒரு கலந்துரையாடல் என்று வரும்போது அந்தக்கருத்து குறித்த சாத்தியக்கூறுகளை விவாதிப்பார்கள்.அதை நம்மோடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.//

சாந்தி லட்சுமணன் சொன்னதில் இந்த வரியே ஒரு பதில் மாதிரி இருக்கே.. :)

டவுசர் பாண்டி... said...

என்னை மாதிரி சின்ன பையன்களுக்கு இங்கே வேலை இல்லைதான்...வந்ததுக்கு மொய் வைக்கனும்ல அதுக்காய் கொஞ்சம் டவுசர்தனமான கருத்து ஒன்னு சொல்லீட்டு போறேன்.

வர்த்தகமயமாய் மாறிவிட்ட நமது வாழ்வியல் சூழலில், உறவுகள் மீதான அவநம்பிக்கைகளும் முன்னெச்சரிக்கை முனைப்புகளும் வலிந்து, மலிந்து வருவதில் ஆச்சர்யமில்லை.

குட் டச்சோ, பேட் டச்சோ...அது ஆண், பெண் என்கிற பரந்துபட்ட பார்வையின் பொருளாய் விவாதிக்க வேண்டுமெ தவிர, இம்மாதிரி நேரடியான உறவுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது அபத்தமானது.

ஆளாளுக்கு அப்பா,மகளை வச்சி கருத்துச்சொல்றேன்...விவாதிக்கிறேன் பேர்வழின்னு இம்சை பண்ணாம போய் புள்ள குட்டிகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்குடுங்க....புண்ணியமா போகும்.

மொக்கை பதிவுகளை விட இம்மாதிரியான பதிவுகளும் பின்னூட்டங்களும் ஆபத்தானவை. . . .

Chitra said...

///////ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஒரு முதல் சிறந்த பெண் நண்பியாகவும், பெண் குழந்தைகளுக்கு அப்பா ஒரு முதல் சிறந்த ஆண் நண்பனாகவும் அமைந்து போகும் பட்சத்தில் வெளிப்புற உலகத்தை அந்தக் குழந்தைகள் மிக நேர்த்தியாக எதிர் கொள்ளுமென்றே நம்புகிறேன்.///////

........அப்படித்தான், American parenting sessions சொல்கின்றன. இந்திய சூழ்நிலைக்கு எவ்வளவு தூரம் ஒன்றி வரும் என்று உறுதியாக சொல்ல தெரியவில்லை.
என் நண்பர் ஒருவர், வக்கீல் - அவர் சொல்லியது: " In India, one person is guilty, until they are proven innocent. In USA, one person is innocent, until they are proven guilty."
அதனால், முடிவு குடும்பங்களை பொறுத்தது.

மங்கை said...

//குட் டச்சோ, பேட் டச்சோ...அது ஆண், பெண் என்கிற பரந்துபட்ட பார்வையின் பொருளாய் விவாதிக்க வேண்டுமெ தவிர, இம்மாதிரி நேரடியான உறவுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது அபத்தமானது.//

athaan naanum solrean... uravugalai vaithu peasa koodaathu... appidi oru karuthu vandhathaal kudumba uravugalin avasiyathai..andha uravugal nam kulandaigalukku eppidi aaakka poorvamaaka amaiyum nnu solla vendiiyathaa poachu... aana inga eduthu vaitha vaaathathin adippadai inga yaarukkum puriyalai..thevai illaatha vimarasanathukku aalaakaama naaan indhai ithoda nippaatikkurean...

KARTHIK said...

அபியும் நானும்ல ஒரு பாடல் வரி வரும்

தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே...

Thekkikattan|தெகா said...

{{{{{{{மங்கை said...
//குட் டச்சோ, பேட் டச்சோ...அது ஆண், பெண் என்கிற பரந்துபட்ட பார்வையின் பொருளாய் விவாதிக்க வேண்டுமெ தவிர, இம்மாதிரி நேரடியான உறவுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது அபத்தமானது.//

athaan naanum solrean... uravugalai vaithu peasa koodaathu... appidi oru karuthu vandhathaal kudumba uravugalin avasiyathai..andha uravugal nam kulandaigalukku eppidi aaakka poorvamaaka amaiyum nnu solla vendiiyathaa poachu... aana inga eduthu vaitha vaaathathin adippadai inga yaarukkum puriyalai..thevai illaatha vimarasanathukku aalaakaama naaan indhai ithoda nippaatikkurean...-------

மங்கை தமிங்கிலத்தில் சொன்ன கருத்தை இங்கே தமிழிலேயே - எல்லாருக்கும் படிப்பதற்கு எளிமையாக்கும் நோக்கத்தில்...

...அதான் நானும் சொல்றேன்... உறவுகளை வைத்து பேச கூடாது... அப்பிடி ஒரு கருத்து வந்ததால் குடும்ப உறவுகளின் அவசியத்தை... அந்த உறவுகள் நாம் குழந்தைகளுக்கு எப்படி ஆக்க பூர்வமாக அமையும்னு சொல்ல வேண்டியதாப் போச்சு... ஆனா இங்க எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படை இங்க யாருக்கும் புரியலை... தேவை இல்லாத விமர்சனத்திற்கு ஆளாகாம நான் இதை இத்தோட நிப்பாட்டிக்கிறேன்...

Thekkikattan|தெகா said...

கோமதி அம்மா நீங்க இங்கே கருத்துரையிட்டது ரொம்ப முக்கியமானதொரு விசயம். முதலில் அதற்கு ஒரு நன்றி.

//எனக்கும் மிகவும் பிடித்தவர் அப்பா.
தாயுமானவராய் எத்தனை சமயங்களில்
என் அப்பா இருந்திருக்கிறார்,எனக்கு திருமணம் ஆனபிறகு கூட நான் என் அப்பாவின் மடியில் தலைவைத்துக் கொண்டு பேசுவேன்.//

அழகான, ஆழமான நட்பு. இதன் அழகியலை, இதன் மகத்துவத்தை எல்லோரும் சுவைத்து வளர்வதின் அவசியம் பொருட்டே இது போன்ற பதிவுகள் அவசியமாகின்றன என்ற சூழலில் நான் "பேசாப் பொருளை" பேசத் துணிந்தேன். நம்முடைய சமூகத்தில் மரியாதை நிமித்தமென அப்பாவிற்கும் பிள்ளைகளுக்குமான உறவு மிகவுமே விரிசலடைந்த நிலையிலேயே அமைந்திருப்பதாய் நான் எனது பள்ளிப் பருவத்திலிருந்து இன்றை நாட்கள் வரையிலுமாக அவதானித்து வருகிறேன்.

//அந்நிய ஆடவர்களிடம், மற்றும் உறவு மனிதர்கள் என்றாலும் அவர்களிடமும்
தள்ளி நின்று பழுகுவது நல்லது.
மனித போர்வையில் மிருகங்கள் உலா வருவதை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை குழந்தைகளுக்கு இரு(ஆண்,பெண்) பால குழந்தைகளுக்கும் உணர்த்தி நல்ல முறையில் சமுதாயத்தை எதிர் கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும் அது நம் கடமை.//

நீங்கள் கூறிய கருத்தில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இருப்பினும் தனது குழந்தைகள் முறைப்படி அடிப்படை இது போன்ற 'முறை மற்றும் முறையற்ற" தொடுதல்களைப் பற்றி தனது வீட்டிலேயே தெளிவாக புரிதலை பெற்றோர்களிடத்திலிருந்து பெற்று விட்டால் குழந்தைகள் வெளியில் புழங்கும் பொழுது நாம் பயந்து கொண்டிருக்க அவசியமிருக்காது. அதன் பொருட்டு கல்வியூட்டுவதின் அவசியம் இரு பெற்றோர்களும் நன்கு புரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

உ.தா: காட்டினுள் தீயை தடுப்பதற்கென காட்டுத்தீ ஏற்படுவதற்கு முன்னமே ஒரு பகுதியை கன்ரோல்ட் முறையில் எரித்து தயார் படுத்தி வைத்திருப்பார்கள் தீப்பரவலை தடுப்பதற்கென,.. அதனையொத்தே, தன் பெற்ற குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவரைப் பற்றிய விமர்சனத்தை அதே பால்கொண்ட பெற்றவரைக் கொண்டு கொடுக்கும் பொழுது அங்கே குழந்தைகளுக்கு மனச் சேதம் தடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அனேகம். அதுவே ஆரோக்கியமானதாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

மதுரை சரவணன் said...

nalla pakirvu. ungal arimugam makilchyai tharukirathu. naan antha nikalchikku senru irunthen.nalla pakirvu. niraya pesalaam. ini thotarvom

Unknown said...

சில விதிவிலக்கான சம்பவங்களை... அதுவும் உறவுகளை வைத்துக் பேசுவதை தவிர்க்கலாம்.

குட் டச், பேட் டச்னு வந்துட்டா அதுல ஆண்-ஆண், பெண்-பெண்னு அடக்கம்தான.. அதைப்பற்றிய விளக்கத்தை டாக்டர் ஷாலினி/ருத்ரன் அவுங்ககிட்டயே கேக்கலாம்...

/ வால்பையன் said...
உண்மையில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண் குழந்தைகள் தானாம், ஆனால் வெளியே தெரியவதில்லை என்றார்!/

அப்படியா.. ;(
அவர்களுடைய பாதிப்பு physicalஆ வெளிய தெரியாதது காரணமா இருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாந்தி லட்சுமணன் சொன்னதில் இந்த வரியே ஒரு பதில் மாதிரி இருக்கே.. :)//

அதானே... :) நன்றி!

********************************
டவுசர். பா,

//இம்மாதிரி நேரடியான உறவுகளை வைத்துக் கொண்டு விவாதிப்பது அபத்தமானது.//

தெரியுதுதான். பேசணும்னு பேசலா. அந்த கருத்தரங்கு தொடர்பான விசயங்களை படிக்கும் பொழுது மனதின் ஒரு ஓரத்தில் உறுத்திய விசயத்தை கேள்விகளா கொண்டு வந்து ஐயத்தை போக்கிக் கொள்ளவே.

சரி, இங்கு பேசியவர்கள் இது போன்ற விசயங்களை பேசுவதற்கான தகுதி அற்றவர்களா? பொறுப்பில்லாமல் பதிவின் நோக்கம் தவறி வேறு திசையில் எடுத்துச் செல்ல.

//மொக்கை பதிவுகளை விட இம்மாதிரியான பதிவுகளும் பின்னூட்டங்களும் ஆபத்தானவை. . . //

அப்படியெல்லாம் சொல்லி விலக்கி வைக்கப்புடாது. தேவையானதை we should bringforth to consciousness plane, so that we can shed the needed light on it and get enlightened...அறிவே தெய்வம் ;-) !!

Thekkikattan|தெகா said...

வாங்க சித்ரா,

//........அப்படித்தான், American parenting sessions சொல்கின்றன. இந்திய சூழ்நிலைக்கு எவ்வளவு தூரம் ஒன்றி வரும் என்று உறுதியாக சொல்ல தெரியவில்லை.//

எடுத்துக்கொள்ளும் பக்குவத்திலும், பேசப்படும் இடத்தினைக் கொண்டும் மிகச் சரியாக கொண்டு போய் சேர்க்க முடியுமின்னு நம்புவோம். கருத்திற்கு நன்றி.

//கார்த்திக் said...
அபியும் நானும்ல ஒரு பாடல் வரி வரும்

தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே...//

அருமையான வரிகள். பதிவிற்கு கூடுதல் பலம். நன்றி கார்த்திக்!

Thekkikattan|தெகா said...

//Madurai Saravanan said...

nalla pakirvu. ungal arimugam makilchyai tharukirathu. naan antha nikalchikku senru irunthen.nalla pakirvu. niraya pesalaam. ini thotarvom//

உங்களை இங்கு சந்தித்ததிலும் எனக்கு மகிழ்சி. நிகழ்சியில் நேரடியாக கலந்து கொண்டவர் என்ற முறையிலும், உங்களுடைய பதிவில் வாசித்த இடுகையில் இதனை நோக்கிய தளத்தில் இயங்குபவர் என்று அறிந்ததின் முறையில் தங்களுடைய கருத்தும் இங்கு மிக முக்கியமானது, மகிழ்சி. நன்றி சரவணன்.

**************

பாபு, தங்களின் கருத்திற்கும் நன்றியய்யா.

Anna said...

விவாத‌த்திற்கு மிக‌த் தாம‌த‌மாக‌ வ‌ந்திருக்கிறன் போலுள்ள‌து. என்றாலும் என‌து சில‌ க‌ருத்துக்க‌ள்/எண்ண‌ங்க‌ளையும் க‌ள‌த்தில் வைக்கிறேன்.

"எனக்கு மேற்குலகில் வாழ்ந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிட்டியதால் பல விசயங்களில் எனக்கு சமமாக பங்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்திருந்தின. மகப்பேறுவிற்கு முன், கர்ப்பா கால நலம் பேணல், எப்படி மகப்பேற்றில் ஆணும் பங்கெடுப்பது போன்ற வகுப்பில் கலந்து கொண்டது, அதனைத் தொடர்ந்து மகப்பேறுவின் போது மருத்துவருடன் உள்ளேயே இருந்து டெலிவரி பார்க்கும் வாய்ப்பும், பெண் குழந்தையாக இருந்தும் இன்றும் டயபர் மாற்றுவது, அவளை குளிப்பாட்டும் வாய்ப்பு என பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது... "

இங்கு பிள்ளை பிறந்ததும் தமது அம்மாவையோ மாமியையோ எப்படியாவது ஊரிலிருந்து எடுத்து விட்டுவிட்டு தமக்கும் பிள்ளை வளர்ப்பிற்கும்/பிள்ளைக்குமே எந்த வித சம்பந்தமுமே இல்லையெனத்திரியும் அநேகமான தமிழ் ஆண்களைப் பார்த்து மிகக் கோபப்படுவதுண்டு. இவ்விடயத்தில் த‌மிழ் ஆண்க‌ளிற்கு முன்னுதார‌ண‌மாக‌ இருக்கும் உங்க‌ளைப் போன்று ஆண்கள் இருப்பது சந்தோசமாக உள்ளது.

"இந்த மதுரை கருத்தரங்கில் டாக்டர்.ஷாலினி வழங்கிய பேச்சின் படி, நமது சமூகத்தின் இறுக்கத்தினை கருத்தில் கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பின் எல்லா அத்தியாவசிய விடயங்களையும் அம்மாவிடமே கொடுத்ததினைப் போன்று நான் படித்த கட்டுரைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது எந்தளவிற்கு என்றால் பெண் குழந்தைகளின் அப்பாவும் ஒரு சராசரி ஆண்தான் அவரிடம் அவர் பெற்ற பெண் குழந்தைகள் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் போல எனக்கு விளங்கிக் கொள்ள முடிந்ததாகப்பட்டது. இது நான் கேட்டு வளர்ந்த ஒரு சொல்லாடல் "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" வைச்சுப் பார்க்கணுங்கிற அதே மனவோட்டத்தில் பொருந்திப் போனது."

நீங்க‌ள் கொடுத்திருந்த‌ இணைப்பில் உள்ள‌ க‌ட்டுரையைப் ப‌டித்தேன். அதில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் அம்மா என்ற‌ சொல்லைப் பெற்றோராக‌ மாற்றலாமெனத் தோன்றியது. அம்மருத்துவர் எமது சமூகத்துடன் ஒன்றிக் கதைத்தாரோ தெரியவில்லை.

நான் கர்ப்பமாகி இருந்த பொழுதில் எனது வேலைத்தளத்தில் என்னுடன் வேலை செய்யும் ஒரு மேலைத்தேய ஆண் எனக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். அவர் மனைவி கர்ப்பமாகியது தெரிந்தது முதல் அவரது மகள் பிறக்கும் வரையில் நடந்தவற்றை மிக விளக்கமாக விவரிப்பார். He even remembers the first heart rate of his daughter, the scans and his daughter was 2.5 years old at that time.

மகள் பிறந்த பின் தானும் மனைவியும் எவ்வாறு பெற்றோராக வளர்ந்தனர், the trial ad errors, so many things. And I used to think 'Wow, never would imagine a Tamil guy being this emotional, this connected, this involved with his family'.

அப்பா‍‍ மகள் உறவு முறையை மிக இறுக்கமாகப் பேணுதல் அப்பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. பெண்பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கு இது மிகவும் அவசியமானதென சில ஆய்வுகள் கூறுகின்றன. I think a dad should have a very close relationaship with his daughter as her guide and friend.

"அப்படியாக ஆண்களை விதி விலக்காக விலக்கியே வைத்து ஒரு சமூகம் இயங்குமாயின், ஆண்கள் அங்கே 'முரடர்களாகவே' சித்தரிக்கப்படும் அபாயமிருப்பதால், தினசரி வாழ்க்கையிலும் இரு பாலரும் அவ்வாறே ஏற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறோம். ஆண் என்பவன் சபலத்தினூடாகவே வாழக் கூடியவன், பெண்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டுமென்றும், ஆண்கள் அப்படியே தவறாக புரிந்து கொண்டதை, சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் காலம் தோறும், அவர்கள் அப்படித்தான் என்ற நியதி இருப்பதால் மென்மேலும் 'நல்ல' பக்குவத்தை வளர்த்துக் கொள்வதனைத் தவிர்த்து மனம் போன போக்கில் வாழ்வதற்கான ஒரு சமூக வாய்க்காலை வகுத்து கொடுத்ததாக ஆகிவிடாதா?"

Exactly. அநேக‌மான‌ இக்க‌ருத்துக்க‌ள் எம் ச‌மூக‌ம் சார்ந்தவை என்றே நினைக்கின்றேன்.


"இது போன்ற அடிப்படை மனத் தடங்கள்களிலிருந்து ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டுமாயின் குடும்பப் பொறுப்புகளில் யாரையும் விலக்கி வைக்காமல், டயபர் லெவலுக்கு மாற்ற விடுவதே சிறந்த வழியாக இருக்க முடியும். அந்த நிலையிலிருந்து குழந்தைகளும் வளர்ந்து வரும் பொழுது எந்த ஒரு மனத் தடையுமில்லாமல் அப்பா/அம்மா இரு பாலருக்கும் நல்ல நண்பர்களாகிப் போனால், அங்கே உரையாடலுக்கு எந்த ஒரு தடையும் இருக்க முடியாதுதானே! ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஒரு முதல் சிறந்த பெண் நண்பியாகவும், பெண் குழந்தைகளுக்கு அப்பா ஒரு முதல் சிறந்த ஆண் நண்பனாகவும் அமைந்து போகும் பட்சத்தில் வெளிப்புற உலகத்தை அந்தக் குழந்தைகள் மிக நேர்த்தியாக எதிர் கொள்ளுமென்றே நம்புகிறேன்."

Brilliantly said. Couldn't agree with you more.

Thekkikattan|தெகா said...

வாங்க அனலிஸ்ட்,

//விவாத‌த்திற்கு மிக‌த் தாம‌த‌மாக‌ வ‌ந்திருக்கிறன் போலுள்ள‌து.//

ஆமாம், தாமதமாத்தான் வந்திட்டீங்க :-). அப்படியே தாமதமா வந்தாலும் சொல்ல வந்த விசயத்தை நறுக்கின்னு எடுத்து முன் வைச்சிருக்கீங்களே.

//அதில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் அம்மா என்ற‌ சொல்லைப் பெற்றோராக‌ மாற்றலாமெனத் தோன்றியது. //

அதே! அப்படியான ஒரு தோற்றம் எனக்கும் கிடைத்ததால்தான் இப்படியான ஒரு கட்டுரை எனக்கே அறிமுகமானது.

//அப்பா‍‍ மகள் உறவு முறையை மிக இறுக்கமாகப் பேணுதல் அப்பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. பெண்பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கு இது மிகவும் அவசியமானதென சில ஆய்வுகள் கூறுகின்றன. I think a dad should have a very close relationaship with his daughter as her guide and friend. //

முக்கியமான கருத்து இது. எப்படியோ இந்தப் பதிவு சொல்ல வந்த கருத்தின் அவசியமும், முக்கியத்துவம் நழுவிப் போய் வேறு ரீதியில் போகக் கூடுமென புரிந்து கொண்டார்கள். அது எப்படி என்றுதான் எனக்கு விளங்கவில்லை.

நன்றி அனலிஸ்ட். இனிமே தவறாம இது போன்ற விசேடங்களில் வந்து சட்டுபுட்டுன்னு கலந்துக்கோங்க :).

குடுகுடுப்பை said...

நாங்கள் மூன்று சகோதரர்கள், என் தந்தை எங்களை ஒரு தாய் போன்றே எல்லாவற்றையும் பூர்த்தி செய்து வளர்த்தவர். இன்று எனக்கு ஆறு வயதில் மகள், நான் எனக்கு என் அப்பா செய்தவற்றையே என் மகளுக்கு செய்கிறேன். நாங்கள் ஆண் என் மகள் பெண், அதுதான் வித்தியாசம்.

எச்சரிக்கை செய்யும் பொருட்டு அப்பாவாகவே இருப்பினும் என்று டாக்டர் எச்சரித்துள்ளார் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை, மாற்றம் ஏற்பட மனம் பக்குவப்பட வேண்டும். ஒட்டுமொத்தம் மாற்றம் ஏற்பட பல வருடங்கள் ஆகலாம்.

ராஜ நடராஜன் said...

இந்த மாதிரி அடிப்படைக் கல்வியெல்லாம் முன்பு எதுவுமில்லையே?ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்று அங்கொன்றும் இங்கொன்றும் சமூகத்தில் ஆண் இருந்திருக்க கூடும்.இப்பவும் இருக்கலாம்.

நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கியும் இன்னும் நம்து சமுதாயம் தனது அடையாளங்களை இழந்து விடவில்லையென்றே நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் said...

//அப்படியாக, "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" என்று எடுத்துக் கொள்ளும் தருணத்தில் //

சமீபத்தில் பம்பாயிலிருந்து(பால் தாக்கரே கண்ணுல பட்டுடப் போகுது) வந்த சொந்தக்கார பெண்,இங்கேயே வளர்ந்த பையன் இருவரும் டீன் ஏஜ் வயது.சுதந்திரமாக பழக விடுவதால் அப்படியொன்றும் பஞ்சு நெருப்பு கதையெல்லாம் வர்ற மாதிரி தெரியவில்லை.இருவரும் பழகும் விதத்தில் நட்பு மட்டுமே தெரிகிறது.ஆண்,பெண் பருவத்தின் வசந்த காலம் இந்த டீன் ஏஜ் வயது.

(வில்லங்கமெல்லாம் திவாரி வயசு நெருங்க நெருங்கவோ என்னமோ:)

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Thekkikattan|தெகா said...

part -1

....Analyst மறுமொழி எப்படியோ பாதிதான் இங்கு வெளியாகி இருக்கிறது, எனவே மொத்தமாக எனது மின்னஞ்சல் பெட்டியிலிருந்து எடுத்து இங்கு வெட்டி ஒட்டிய நிலையில்...

The Analyst has left a new comment on your post "மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்த...":

விவாத‌த்திற்கு மிக‌த் தாம‌த‌மாக‌ வ‌ந்திருக்கிறன் போலுள்ள‌து. என்றாலும் என‌து சில‌ க‌ருத்துக்க‌ள்/எண்ண‌ங்க‌ளையும் க‌ள‌த்தில் வைக்கிறேன்.

////"எனக்கு மேற்குலகில் வாழ்ந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிட்டியதால் பல விசயங்களில் எனக்கு சமமாக பங்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்திருந்தின. மகப்பேறுவிற்கு முன், கர்ப்பா கால நலம் பேணல், எப்படி மகப்பேற்றில் ஆணும் பங்கெடுப்பது போன்ற வகுப்பில் கலந்து கொண்டது, அதனைத் தொடர்ந்து மகப்பேறுவின் போது மருத்துவருடன் உள்ளேயே இருந்து டெலிவரி பார்க்கும் வாய்ப்பும், பெண் குழந்தையாக இருந்தும் இன்றும் டயபர் மாற்றுவது, அவளை குளிப்பாட்டும் வாய்ப்பு என பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது... "///

இங்கு பிள்ளை பிறந்ததும் தமது அம்மாவையோ மாமியையோ எப்படியாவது ஊரிலிருந்து எடுத்து விட்டுவிட்டு தமக்கும் பிள்ளை வளர்ப்பிற்கும்/பிள்ளைக்குமே எந்த வித சம்பந்தமுமே இல்லையெனத்திரியும் அநேகமான தமிழ் ஆண்களைப் பார்த்து மிகக் கோபப்படுவதுண்டு. இவ்விடயத்தில் த‌மிழ் ஆண்க‌ளிற்கு முன்னுதார‌ண‌மாக‌ இருக்கும் உங்க‌ளைப் போன்று ஆண்கள் இருப்பது சந்தோசமாக உள்ளது.

Thekkikattan|தெகா said...

Analyst, part -2

///"இந்த மதுரை கருத்தரங்கில் டாக்டர்.ஷாலினி வழங்கிய பேச்சின் படி, நமது சமூகத்தின் இறுக்கத்தினை கருத்தில் கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பின் எல்லா அத்தியாவசிய விடயங்களையும் அம்மாவிடமே கொடுத்ததினைப் போன்று நான் படித்த கட்டுரைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது எந்தளவிற்கு என்றால் பெண் குழந்தைகளின் அப்பாவும் ஒரு சராசரி ஆண்தான் அவரிடம் அவர் பெற்ற பெண் குழந்தைகள் கூட கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் போல எனக்கு விளங்கிக் கொள்ள முடிந்ததாகப்பட்டது. இது நான் கேட்டு வளர்ந்த ஒரு சொல்லாடல் "பஞ்சையும், நெருப்பையும் தள்ளி தள்ளித்தான்" வைச்சுப் பார்க்கணுங்கிற அதே மனவோட்டத்தில் பொருந்திப் போனது."///

நீங்க‌ள் கொடுத்திருந்த‌ இணைப்பில் உள்ள‌ க‌ட்டுரையைப் ப‌டித்தேன். அதில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் அம்மா என்ற‌ சொல்லைப் பெற்றோராக‌ மாற்றலாமெனத் தோன்றியது. அம்மருத்துவர் எமது சமூகத்துடன் ஒன்றிக் கதைத்தாரோ தெரியவில்லை.

நான் கர்ப்பமாகி இருந்த பொழுதில் எனது வேலைத்தளத்தில் என்னுடன் வேலை செய்யும் ஒரு மேலைத்தேய ஆண் எனக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். அவர் மனைவி கர்ப்பமாகியது தெரிந்தது முதல் அவரது மகள் பிறக்கும் வரையில் நடந்தவற்றை மிக விளக்கமாக விவரிப்பார். He even remembers the first heart rate of his daughter, the scans and his daughter was 2.5 years old at that time.

மகள் பிறந்த பின் தானும் மனைவியும் எவ்வாறு பெற்றோராக வளர்ந்தனர், the trial ad errors, so many things. And I used to think 'Wow, never would imagine a Tamil guy being this emotional, this connected, this involved with his family'.

அப்பா‍‍ மகள் உறவு முறையை மிக இறுக்கமாகப் பேணுதல் அப்பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. பெண்பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கு இது மிகவும் அவசியமானதென சில ஆய்வுகள் கூறுகின்றன. I think a dad should have a very close relationaship with his daughter as her guide and friend.

////"அப்படியாக ஆண்களை விதி விலக்காக விலக்கியே வைத்து ஒரு சமூகம் இயங்குமாயின், ஆண்கள் அங்கே 'முரடர்களாகவே' சித்தரிக்கப்படும் அபாயமிருப்பதால், தினசரி வாழ்க்கையிலும் இரு பாலரும் அவ்வாறே ஏற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறோம். ஆண் என்பவன் சபலத்தினூடாகவே வாழக் கூடியவன், பெண்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டுமென்றும், ஆண்கள் அப்படியே தவறாக புரிந்து கொண்டதை, சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் காலம் தோறும், அவர்கள் அப்படித்தான் என்ற நியதி இருப்பதால் மென்மேலும் 'நல்ல' பக்குவத்தை வளர்த்துக் கொள்வதனைத் தவிர்த்து மனம் போன போக்கில் வாழ்வதற்கான ஒரு சமூக வாய்க்காலை வகுத்து கொடுத்ததாக ஆகிவிடாதா?"////

Exactly. அநேக‌மான‌ இக்க‌ருத்துக்க‌ள் எம் ச‌மூக‌ம் சார்ந்தவை என்றே நினைக்கின்றேன்.


////"இது போன்ற அடிப்படை மனத் தடங்கள்களிலிருந்து ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டுமாயின் குடும்பப் பொறுப்புகளில் யாரையும் விலக்கி வைக்காமல், டயபர் லெவலுக்கு மாற்ற விடுவதே சிறந்த வழியாக இருக்க முடியும். அந்த நிலையிலிருந்து குழந்தைகளும் வளர்ந்து வரும் பொழுது எந்த ஒரு மனத் தடையுமில்லாமல் அப்பா/அம்மா இரு பாலருக்கும் நல்ல நண்பர்களாகிப் போனால், அங்கே உரையாடலுக்கு எந்த ஒரு தடையும் இருக்க முடியாதுதானே! ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஒரு முதல் சிறந்த பெண் நண்பியாகவும், பெண் குழந்தைகளுக்கு அப்பா ஒரு முதல் சிறந்த ஆண் நண்பனாகவும் அமைந்து போகும் பட்சத்தில் வெளிப்புற உலகத்தை அந்தக் குழந்தைகள் மிக நேர்த்தியாக எதிர் கொள்ளுமென்றே நம்புகிறேன்."///

Brilliantly said. Couldn't agree with you more.

Related Posts with Thumbnails