Tuesday, August 24, 2010

பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி!!

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் என்னை இன்செப்ஷன் படம் பார்க்கத் தூண்டிய தாத்தா இன்று வந்திருந்தார். நானும் தொலைபேசியில் எப்பொழுதும் போல வெட்டி அரட்டையில மூழ்கி கிடந்தேன். தாத்தா சுத்தி சுத்தி வந்து எதனையோ பேச முயற்சிக்கிற மாதிரி ஓர் உணர்வைக் கொடுத்தார். தொலைபேசியை மூர்ச்சையாக்கிட்டு அவரை பார்த்தேன். அவரும் அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்த மாதிரி, பாகிஸ்தான்ல வெள்ளம் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் அழிவைக் கொடுத்துருக்கு கவனிச்சிட்டு வாரீயா அப்படின்னு ஒரு கேள்விய தூக்கிப் போட்டார்.

விசயத்திற்குள்ளர போறதிற்கு முன்னாடி அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அவர் ஒரு வெள்ளையர். அறுபதிகளில் ஹிப்பி இயக்கம் அதி தீவிரமா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதன் ஊடாக பயணித்து உலகத்தின் பால் ஒரு தனி அக்கறையை உருவாக்கிக் கொண்டவர். இன்னமும், அதன் விட்டக் குறை தொட்டக் குறையாக போருக்கு எதிரான அமைதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் அது தொடர்பாக சில நேரங்களில் கைதாகும் நிலைக்குக் கூட தன்னை முன் நிறுத்திக் கொள்பவராகவும் இருந்து வருபவர். அது மட்டுமின்றி உள்நாட்டில் அநீதி இழைக்கும் வழியில் ஏதாவது சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு கடத்தப்படும் நிலைக்கெதிராக அதனையொட்டிய கருத்தரங்கங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வது, சைட்ல உலகப் படங்களும் அறிவியல் புனைவு படங்களையும் பார்த்து திளைப்பதுவெமென வாழ்க்கையை ஜரூராக நடத்தி வருகிற அறுபதுளின் தொடக்கத்தில் இருக்கும் ஓர் இளங்காளையவர்.

மீண்டும் விசயம் பேசுவோமா? பாகிஸ்தானின் வெள்ளத்தினை ஒட்டிய பேரழிவைப் பற்றி கேள்வியைக் கேட்டாரா. எனக்கு போன வாரத்தில் சி. என். என் -ல் ஒரு நழுவும் செய்தியாக பார்த்ததோட முடிந்து போனது, அந்தச் செய்தி. இருப்பினும் எனக்கு அந்த வாரத்தில கொஞ்சம் ஆட்டம், ஓட்டமென்று சொந்த விசயங்கள் காரணமாகவும் உலக விசயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை ;). இங்கு தமிழ் ப்ளாக்குகளிலும் அவ்வளவாக அதனையொட்டிய பதிவுகளை பார்த்த மாதிரியாக ஞாபகமில்லை. இருந்தாலும் பாகிஸ்தான்ல அதுவும் நம்ம எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும் அவிங்க பண்ணுற அழும்பிற்கு கடவுளே பார்த்து தண்டனைக் கொடுக்கிற ரேஞ்சிற்கு யோசிக்கிற புத்தியும் சேர்ந்திருக்கிறதாலே, இதெல்லாம் நம்மோட பிரச்சினையான்னு விட்டிருப்போம் போல.

ஆனா, அன்னிக்கு அவர் கேட்ட தொனியே ஏதோ பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாக எண்ணச் செய்தது. ஒவ்வொரு முறையும் அவருடன் பேசும் பொழுதும் பலத்த சிந்தனைகள் எழும்பும்மாரு கேள்விகளையோ அல்லது சம்பாஷணைகளையோ நிகழ்த்திவிட்டு சென்றுவிடுவார். அப்படியே இன்று என்னிடம் அவர் கேட்ட கேள்வி - இந்தியாவும் பாகிஸ்தானும் எலியும் பூனையுமாக இருப்பதாக அந்தப் பிராந்தியத்தில் காட்டிக் கொள்கிறார்கள். நல்லுறவை பேணும் பொருட்டு நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இரு நாடுகளுமே பாடுபட வேண்டிய கட்டாயத்திலுள்ளது. மக்களின் மனத்தில் அது போன்ற நன்னம்பிக்கையை விதைத்து தொலை தூர நட்புறவு பாதையில் நடந்து செல்ல வேண்டுமாயின் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று எதார்த்தம் அப்படியாக இருக்கும் பொழுது அண்டைய நாட்டில் அப்படியொரு மாபெரும் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்து 170 மில்லியன் மக்களில் 60 விழுக்காடுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் உலக நாடுகளின் முன்னால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது உதவி கேட்டு, இந்தியா ஏன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டின் மீதான தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை கோலோச்சும் வழியாக ஐந்து மில்லியன் டாலர்களைத் தாண்டி தனது உதவிக் கரங்களை நீட்டியிருக்கக் கூடாது? என்பதே அவரின் கேள்வி.

அதனையொட்டி எப்படி உலக அரங்கில் உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் சாதா மக்களின் அன்றைய அவலத் தேவைகளைத் தாண்டியும் கோணல் பார்வையில் அந்தச் சூழலை கடந்து செல்ல வைக்கிறது என்று பேசிக் கொண்டோம்.

ஒரு வியாபாரிக்கு தன்னிடம் இருக்கும் சரக்கை வித்து தீர்க்க வேண்டுமாயின் என்ன தேவையாக இருக்கிறது. சந்தையில் அந்தச் சரக்கின் தேவை. அந்தத் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதனையொட்டியே தீர்மானிக்கப் படுகிறது. அப்படி அந்த வியாபாரி கையிருப்பு அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு தற்காலிக வறட்சியை ஏற்படுத்தி பின்பு லாப நோக்கில் வெளியிட்டு அதிக முதலீட்டை திரும்பப் பெற எத்தனிக்கிறான். அதே போர்வையில்தான் எது போன்ற சூழலாக ஒரு அண்டைய நாட்டின் அவலம் அமைந்து போனாலும், உள் நாட்டு அரசியல் வாதிகளும் கண்களை இறுக மூடிக் கொண்டு வாய்ப்புகளை தெரிந்தே நழுவ விட்டு விடுகிறார்கள். எந்த அண்டைய நாட்டுடனும் மற்றொரு நாடு மிகவும் தோழமையுடன் இருந்து போக எத்தனித்தாக தெரியவில்லை. ஏனெனில், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தனக்குத் தேவையான (தன் தலை தப்பியிருக்க தேவையான) பொழுது பிரச்சினை இருப்பதாக அண்டைய நாட்டுடனான உறவுச் சிக்கலைப் பேசி, தன் உள்நாட்டு குழப்பங்களை தற்காலிமாக மறக்கடிக்க சாதா மக்களுக்கு போதையூட்டு கைச்சித்திரமாக காட்சியப் படுத்த முடியும்; என்ற வாக்கில் எனது வாதத்தினை வைத்தேன்.

இதனை எழுத அமர்வதற்கு முன்னால், இன்னும் காத்திரமாக எனது கருத்துக்களை வைக்க வேண்டுமென்றேதான் நினைத்திருந்தேன். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை படிக்கும் பொழுது கொடுத்த ஐந்து மில்லியன் டாலர்களைக் கூட பாகிஸ்தான் அரசு பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று பரிசிலீத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஓபாமா அரசு இந்தியாவின் உதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் சிபாரிசு பண்ணுமளவிற்கும் இருக்கிறது நிலமை என்று படித்ததும் தான் நான் மேலே குறிப்பிட்ட அரசியல் உள் லாப நிலை பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்று ஊர்ஜித படுத்திக் கொள்ள முடிந்தது.

இரண்டு நாடுகளும் இத்தனை வறுமைக் கேடுகளை கொண்டிருப்பினும் தனது பாதுகாப்பிற்கென தன்னுடைய நாடுகளின் எல்லைகளுக்குள் அத்தனை இராணுவ தளவாடங்களையும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுப்பாக்கி, வானூர்தி, டேங்குகள் என்றும் பல்லாயிரக்கணக்கில் காவல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் மனித உயிர்கள் என்றும் பல செலவுகளை கோடிகளில் செய்து கொண்டிருந்தாலும், இன்று நாட்டு முழுமைக்குமே பேராபத்து இயற்கைச் சீற்றத்தால் என்று வரும் பொழுது தன்னுடைய அத்துனை resourcesகளையும் பயன் படுத்தி மக்களை காப்பாற்றி அதன் மூலமாக இவர்கள் எதற்காக அத்தனை பொருளையும் செலவு செய்து காக்கிறார்களோ அந்த செலவீனங்களை மட்டுறுத்தி நிறுவிக் கொள்ள முடியாதா? மக்களின் மனங்களில் அமைதி, சகோதர பாசம் என்ற விதைகளை இது போன்ற அவல நிலைகளின் மூலமாக தங்களுடைய இருப்பைக் காட்டி, கண்களுக்கு புலப்படாத பாசக் கயிற்றைக் கொண்டு கட்டி நீண்ட தூர தீர்விற்கு வழிவகை செய்து கொள்ள முடியாதா...

நாமும் பேருந்து விட்டுப் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாண்டு பார்க்கிறோம். பிற நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நிகழ்த்திக் கொள்கிறோம். இருப்பினும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பக்கத்து பக்கத்து கதவுகளைக் கொண்ட அண்டைய வீட்டுக்காரர்களுக்கு ஒன்றென்றால் ஓடிப் போய் கை கொடுக்கும் வாய்ப்புகளை எல்லாம் உள் அரசியல் லாப நோக்கிற்காக தட்டிக் கழித்துக் கொண்டே எந்த அமைதியை வளர்க்க இவர்கள் பாடுபடுகிறார்கள்? இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டுக்களன்றி வேறென்ன? ஏன், சாதா மக்களான நாம் அதனைப் பற்றி யோசிப்பதே இல்லை?

லார்ட் ஆஃப் வார் Nicholas Cage நடித்து வெளி வந்த படம் அதனில் மிகத் தெளிவாக காட்டுவார்கள் எப்படி வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் இராணுவ விளை பொருட்கள் வளரும் நாடுகளில் விற்பனையாகிறது அதற்கு எப்படியாக வளரும் நாடுகளில் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு எண்ணெயிட்டு வளர்த்தெடுத்து பிரச்சினை ஓய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்ற ரேஞ்சிற்கு கதை நகரும்; அதுவே உண்மையும் கூட. அதனையும் தாண்டி இன்று நம் அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அண்டைய நாடு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக வேண்டும் என்பதே அடிப்படை நாதம். அதற்கு மக்கள் உயிரொன்றும் பெரிய விலையல்ல! யாருக்கு வேண்டும் தொலை தூர அமைதியும், தென்றல் காற்றும்...




பி.கு: இதில பெரிய ஜோக் என்னத் தெரியுமா பாகிஸ்தான்ல இப்ப அடிச்சு முடிச்சிருக்கிற வெள்ளத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணமாம். இயற்கையை திசை திருப்பி அங்க ஏவி விட்டாங்களாம். மக்கள ஏமாத்தி போதையிலேயே வைச்சிக்க இதை விட பெரிய கேணத்தனமான சப்பைக் காரணங்களை கூறி தன் நாட்டு மக்களையே முட்டாள்களாக காட்டிக் கொள்ள வேறு யாரும் அஞ்ச மாட்டாங்க இந்த அரசியல் வியாதிகளை விட்டால்.


Photo Courtesy: Net

32 comments:

Thekkikattan|தெகா said...

I know I live with a Utopian ideology :)

silandhy said...

""இருந்தாலும் பாகிஸ்தான்ல அதுவும் நம்ம எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும் அவிங்க பண்ணுற அழும்பிற்கு கடவுளே பார்த்து தண்டனைக் கொடுக்கிற ரேஞ்சிற்கு யோசிக்கிற புத்தியும் சேர்ந்திருக்கிறதாலே, இதெல்லாம் நம்மோட பிரச்சினையான்னு விட்டிருப்போம் போல.""
ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் படும் கஷ்டங்களை எப்படி உங்களால் இந்த முறையில் அணுக முடிகிறது?
பாகிஸ்தான் மக்கள் படும் துயரங்கள் இந்து கடவுள் கொடுத்தது என்றால் நம்நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு
அனைத்தும் பாகிஸ்தானின் இஸ்லாமிய கடவுள் கொடுத்தது என்றல்லவா ஆகிறது? இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?

கிரி said...

தெகா இந்தபதிவிற்கு நன்றி. இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான்.

பாகிஸ்தான் ஆயுதம் வாங்கும் விசயத்தில் காட்டும் ஆர்வத்தை தன் நாட்டை முன்னேற்றுவதிலும் காட்டினால் நலம்.

இந்தியா பணம் கொடுத்தது நல்ல விஷயம் .. இன்னும் கொஞ்சம் முயற்சித்து பாக் மக்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்யலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடுக்கிறேன்னு சொன்னதுல ஒரு அரசியலும் ,வேணாம் வாங்கமாட்டேன்னு சொல்றதுல ஒரு அரசியலும் இருக்குமா இருக்கும்..

ஆனா இது மாதிரி பணம் குடுக்கிறென்னு சொல்லும்போதெல்லாம் நான் யோசிப்பேன்.. அய்யா நம்ம ஊருல யே எவ்ளோ ஏழ பாழைங்க சாகக்கிடக்காங்க.. இவ்ளோ பணம் குடுக்கிறதுக்கு இருக்குன்னா ஏன் அதை இவங்களுக்கு இத்தனை நாள் குடுக்கல ந்னு.. என்ன பண்ண ஓவர் சுயநலம் தான்

Thekkikattan|தெகா said...

சிலந்தி,

நீங்க இதைக் கவனிக்கலயா? “””எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும்””” அப்படின்னு, அத ஒரு கிண்டல் தொனியில வைச்சிருக்கேன்.

அந்த மாதிரி நினைக்கிற எத்தனையோ அப்பாவி அறிவு ஜீவிகள் மற்றும் பொது மக்களை நம் அரசியல் வாதிகளும், பொது ஊடகங்களும் மூளைச் சலவை பண்ணி நம்ப வைச்சிருக்கு. சுனாமி வந்து கிழக்கத்திய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்ட பொழுது கிருஸ்டியன் நாடுகளில் ஒரு பொதுவான பேச்சு அடிப்பட்டு கொண்டிருந்தது. அது ‘பாவப்பட்டவர்கள் -நம்பாதவர்கள்’ அதிகமிருக்கும் பகுதியாம் அதான் கடவுள் தண்டித்துவிட்டதாக... இப்படியாகத்தான் நமது எண்ணங்கள் மிருக நிலையிலேயே தேக்கமுற்று விசயங்களை காணச் செய்கிறது.

//இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?//

அப்படி நான் ஏற்றுக் கொண்டதாக கருதினால் இந்தப் பதிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்படி உண்மையிலேயே நினைத்து கொண்டாட்டம் அடிப்பவர்கள் எவரும் பதிவு போட மாட்டார்கள் ;).

நல்லவேளை நீங்க இந்தக் கேள்விய கேட்டு இதப் பத்தி விளக்க ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நன்றி. சிலந்தி!

Thekkikattan|தெகா said...

//பாகிஸ்தான் மக்கள் படும் துயரங்கள் இந்து கடவுள் கொடுத்தது என்றால் நம்நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு
அனைத்தும் பாகிஸ்தானின் இஸ்லாமிய கடவுள் கொடுத்தது என்றல்லவா ஆகிறது?//

சொல்ல விட்டுப் போனது. இது எல்லா எல்லைகளைத் தாண்டியும் இருக்கும் அனைத்து தர மக்களுக்கும் (பொருந்தும்) அவ்வப்பொழுது மேம்போக்காக எழும் குரூர எண்ண திருப்தியாக இருக்கக் கூடும் யார் கடவுளர் யாரை அந்த நேரத்தில் தண்டிருக்கிறார் என்று நேற்று அவர்களின் கொல்லைப் புறத்தில் சுனாமியில், பூகம்பத்தில், வெள்ளத்தில் மாண்டவர்களை மறந்து விட்டு திருப்தி பட்டுக்கொள்பவர்களை என்ன வென்பது? விட்டுத் தள்ளுங்க... மத அரசியல்.

Thekkikattan|தெகா said...

கிரி நலமா? ரொம்ப நாட்களாச்சு வலைப் பக்கமே பார்த்து.

//பாகிஸ்தான் ஆயுதம் வாங்கும் விசயத்தில் காட்டும் ஆர்வத்தை தன் நாட்டை முன்னேற்றுவதிலும் காட்டினால் நலம். //

இதெல்லாம் ஒரு பெரும் நகைமுரண். வீட்டிற்குள்ள கொல பட்டினியா கிடந்து செத்தாலும் வெளியில கிளம்பும் போது சில பேருக்கு வெள்ளை வேஷ்டியும், ஐநூறு ரூபா தெரியுறமாதிரி பாக்கெட்ல இருக்கணும்ல அதே கதைதான்.

நேற்று ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். பாகிஸ்தான் ‘பப்ளிக் ஸ்கூல்’களைப் பொருத்து, தலைப்பு Pakistan's public School are ticking time bombs பள்ளிகள் பூராவும் சிதில மடைந்த நிலையில் கிடப்பதாகவும், பள்ளி புத்தகங்களில் ஐரோப்பாவும், இந்தியாவும் எதிரிகள் என்றும் சொல்லி கொடுக்கிறார்களாம். அதனை கல்வித் துறை இயக்குனரிடம் டாகுமெண்டரி நடத்துபவர் கவனத்திற்கு எடுத்துச் சென்று கேக்கிறார், அதற்கு அவரின் பதில் நான் ஒரு வரலாற்று ஆசிரியன் அல்ல, பாடப் புத்தகங்கள் நம்பகமான முறையில் அதற்கென உள்ள மக்களால் தொகுக்கப்படுகிறது. அப்படின்னு எரிச்சலாக பதிலிரைக்கிறார்.

இந்த நிலையில் போய் கொண்டிருக்கும் ஒரு நாட்டை அண்டைய வீடாக கொண்டிருக்கும் நாம் எப்படி இருக்க வேண்டும்?

//இந்தியா பணம் கொடுத்தது நல்ல விஷயம் .. இன்னும் கொஞ்சம் முயற்சித்து பாக் மக்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்யலாம்.//

இந்த இன்னும் கொஞ்சம் அப்படின்னு சொல்லுறீங்க பார்த்தீங்களா... அந்த கொஞ்சத்தில எவ்வளவோ இருக்கு. அடுத்த பின்னூட்டத்தில பேசுவோம். நன்றி - கிரி!

Thekkikattan|தெகா said...

முத்து வணக்கம்,

முக்கியமான பதிவிற்கு உங்க கருத்து அதுக்கு ஒரு சிறப்பு நன்றி :) .

//குடுக்கிறேன்னு சொன்னதுல ஒரு அரசியலும் ,வேணாம் வாங்கமாட்டேன்னு சொல்றதுல ஒரு அரசியலும் இருக்குமா இருக்கும்..//

கண்டிப்பா அரசியல வைச்சித்தான் கொஞ்சமா கிள்ளிக் கொடுக்கிறதும் அத வாங்கிக்கிறதா வேண்டாமான்னு யோசிக்கிறதும்...

//ஆனா இது மாதிரி பணம் குடுக்கிறென்னு சொல்லும்போதெல்லாம் நான் யோசிப்பேன்.. அய்யா நம்ம ஊருல யே எவ்ளோ ஏழ பாழைங்க சாகக்கிடக்காங்க.. இவ்ளோ பணம் குடுக்கிறதுக்கு இருக்குன்னா ஏன் அதை இவங்களுக்கு இத்தனை நாள் குடுக்கல ந்னு.. என்ன பண்ண ஓவர் சுயநலம் தான்...//

பழமொழியை மறந்துட்டீங்களே ‘’ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்’’ இந்த மாதிரி நேரத்திலதாங்க நாம நம்மகிட்ட இல்லாட்டியும் எப்படியாவது அந்த நேரத்தில உதவ நிக்கணும். இப்போ அமெரிக்கா இத்தனை போண்டிக்கதைகளையும் தன்னைச் சுத்தி உலாவ விட்டுக்கிட்டு நாட்டை நடத்திட்டு இருந்தாலும் எங்காவது இது போன்ற இயற்கைச் சீற்றமின்னா நிதி கொடுக்கணுமின்னு பாதிக்கப்பட்ட நாடுகள் எதிர்பார்கிறதும் இவிங்க கொடுக்கிறதும் காலம் காலமா நடந்திட்டுதானே வருது. நீங்க நினைக்கிற மாதிரி நினைச்சா, அந்தப் பணத்தையெல்லாம் உள் நாட்டு மக்களுக்கு மாச மாசம் செக்கவே கொடுக்கலாமே, இலவச மருத்துவ காப்பீடும் கொடுத்து... :)

இப்போ கூட பாகிஸ்தானுக்கு இந்த வெள்ள நிவாரண நிதியாக 100மில்லியன் டாலர்ஸ் கொடுத்திருக்கே. அப்படி இருக்கும் பொழுது நம்ம பக்கத்து வீட்டுக் காரய்ங்க இன்னும் கூடுதலா நிதியும் சரி, மற்ற இராணுவ வளங்களான ஹெலிகாப்டர்ஸ், படகுகள், பணியாட்கள், மீட்பு சாதனங்களை தாராளமாக வழங்கி மீட்புப் பணியிலும் இதர விசயங்களிலும் உதவி அந்த நாட்டு மக்களின் மனங்களில் வில்லன் என்கிற அரசியல் முகமூடியிலிருந்து நழுவி ஒரு நல்ல காரியத்திற்காக மக்களை யோசிக்க வைக்கலாமல்லவா? இருந்தாலும், 5 மில்லியன் டாலர்ஸ் ஒரு பிச்சாத்து காசுங்க, நம்ம நாட்டு சைஸ்க்கு இந்த நிலமையில... எத்தனையோ முறையில் உதவியிருக்கக் கூடும், அது போலவே அவர்களும் தான் நமக்கு ஒன்று என்றால்... ஆனா, யாருக்குங்க வேணும் தொலை தூர அமைதி?

மங்கை said...

why do u say that u have an utopian ideology?...it is perfectly ok..

i think India has access to pakistan through land morethan any other country...

வேணாம்னு சொல்றதுக்கு ரம்ஜான் நோன்பை காரணம் காட்டி ஒர் ஆர்டிகல் படிச்சேன்..

ராஜ நடராஜன் said...

பல முறை கூகிளண்ணன் சொல்லியும் நான் கேட்கிறதாயில்ல.ஒண்ணு யாருக்கும் கருத்தே சொல்றதில்ல.சொன்னா நீட்டி முழக்குறது.இதற்கும் முந்திய பின்னூட்டம் வந்தால் கூகிள் மறுபடியும் மன்னிச்சுட்டார்ன்னு அர்த்தம்.இல்லைன்னா சொன்னதையெல்லாம் திரும்ப ஒட்ட வைக்க வார்த்தையில்லை:)

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

ஆஹா! அப்படியெல்லாம் விட்டுட முடியுமா? அதெல்லாம் முடியாது இந்தப் பதிவிற்கின்னு நினைச்சு அடிச்சதை ஒழுங்க உடைச்சு உடைச்சு ரெண்டா அல்லது மூணா இல்ல எத்தனவாவது போட்டுடுங்க சொல்லி புட்டேன் :))

ராஜ நடராஜன் said...

பயந்தபடியே ஆகிப்போச்சே:(

Thekkikattan|தெகா said...

மங்கை வணக்கம்.

//why do u say that u have an utopian ideology?...it is perfectly ok.. //

மிகச் சரியான கேள்வி. ஏன் அப்படி சொல்லிகிட்டேன்னா இங்க படிக்க வாரவங்க, சரியான அயலுறவு கொள்கை தெரியாத சின்னப் பய புள்ளையா இருக்கும் போலவே இதெல்லாம் இந்த மாதிரி கட்டுரை எழுத உட்காந்திருதுகங்கிற அளவிற்கு படிச்சிட்டு கொமட்டில ஒரு சிரிப்பை விட்டுக்கிட்டே நகர்ந்து போயிடலாம்.

அவங்களுக்காக அதனையும் நான் ஒத்துக்கிறேன், அதைத் தாண்டிப் போயி கொஞ்சனுண்டு சொன்னதில சாத்தியம் இருக்கா இல்லையா - சிந்திக்கிறவங்களே சொல்லிப் போட்டு போங்கன்னு, அதச் சொல்லி அவங்க நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னுதேய்ன் :)

//i think India has access to pakistan through land morethan any other country... //

கண்டிப்பாகங்க, அங்கே ஒரு மாபெரும் பிரச்சின்னனா பக்கத்து வீட்டுக்காரன் நமக்கும் தலைவலி வந்தது மாதிரிதான்.

30 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தாலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ரம்ஜானுக்கும் வருகிற நிதியை பெற்றுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? சரி, வந்து விரிவா சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்.

மரா said...

பாகிஸ்தானின் அடிப்படையே இந்திய வெறுப்புத் தான் என்பதைப் புரிந்துகொண்ட எழுதியிருந்தார் என்றால், இவ்வளவு நீட்டித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியப் பிரிவினை... இது இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரிடிஷார் ஏற்படுத்திவிட்டுப் போன அவநம்பிக்கையில் எழுந்த வெறுப்பு, பகை, வன்மம்..
-ki.moo sir

Thekkikattan|தெகா said...

வாங்க மரா,

//பாகிஸ்தானின் அடிப்படையே இந்திய வெறுப்புத் தான் என்பதைப் புரிந்துகொண்ட எழுதியிருந்தார் என்றால்,//

அது புரிந்ததினாலும் அதன் ஊடாக அண்டைய வீடான நமக்கு காத்திருக்கும் அபாயங்களை ஊரளவிற்கு யூகிக்க முடிந்ததினால்தான் இது போன்ற பதிவு. விஷ கடி முறிவிற்கு அதற்கு தகுந்த வைத்தியம் அதனைக் கொண்டுதான் கொடுக்க முடியும். அங்கே 30 மில்லியன் மக்கள் இன்று வீடற்று, உழைப்பிற்கான அனைத்து வசதிகளையும் இழந்து சும்மா இருக்கப் போகிறார்கள் என்றால் ஏற்கெனவே அடிப்படை வாதத்தை நீங்க குறிப்பிட்ட படி ...அவநம்பிக்கையில் எழுந்த வெறுப்பு, பகை, வன்மம்... மேலும் அவர்களின் மனங்களில் விதைக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு நம் ஊருக்குள் அனுப்பி கலகம் செய்ய பயன்படுத்தப் படுவார்கள்.

அது போன்றே நாமும் செய்ய முடியுமா? அல்லது, இது போன்ற வாய்ப்புகளை பயன் படுத்தி அந்தப் பக்கத்து பொது மக்களின் மனதில் positive antidote கொடுத்து வைத்து, அதற்கு ஒரு check வைப்பது நடைமுறையா?

மரா said...

//அது போன்றே நாமும் செய்ய முடியுமா? அல்லது, இது போன்ற வாய்ப்புகளை பயன் படுத்தி அந்தப் பக்கத்து பொது மக்களின் மனதில் positive antidote கொடுத்து வைத்து, அதற்கு ஒரு check வைப்பது நடைமுறையா?//

அது எப்புடி முடியும்...நாமதான் நல்லவிங்களாச்சே.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்னு
‘வால்பையன்’ சொன்னாலும் சொன்னாரு...எல்லாரும் அதையேதான கேக்குறோம் :)

க ரா said...

இது இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரிடிஷார் ஏற்படுத்திவிட்டுப் போன அவநம்பிக்கையில் எழுந்த வெறுப்பு, பகை, வன்மம். பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டு போனத ரெண்டு ஊரு அரசியல்வாதிகளுமே சேந்து தண்ணி ஊத்தி அனையாம பாத்திட்டு இருக்காங்கன்றதுதான் உண்மை.. எப்படி தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க அவங்களுக்கு பிரச்சின வரப்ப அத திச் திருப்ப இலங்கை பிரச்சினைய கைல எடுப்பாங்களோ.. அதே மாதிரி நம்ம செண்ட்ரல்ல யாரு ருல் பன்னினாலும அவங்க அவங்களுகு பிரச்சின வரப்ப எல்லாம் கேடயாம யூஸ் பன்றது பாகிஸ்தானயும் காஷ்மிரயும்.. அதே மாதிரிதான் அங்க பாகிஸ்தான்ல இருக்கற அரசியல்வாதி வர்க்கத்துக்கும்.. இந்தியாவ எதிர்க்கற்மோ இல்லயோ, ஆனா சப்போட பன்ன கூடாது அவங்களுக்கு.. இப்ப சர்தாரி இந்தியா பன்ற உதவிய ஏத்துகிட்டா அநத ஆள நாடு கடத்திருவாங்க.. உலகத்துல இருக்கற எல்லா அரசியல்வாதியும் ஒரே சாதிதான் இந்த விசயத்துல..

மரா said...

@ இராமசாமி கண்ணன்

// உலகத்துல இருக்கற எல்லா அரசியல்வாதியும் ஒரே சாதிதான் இந்த விசயத்துல.. //

சத்தியமான வார்த்தைகள். கண்ணனின் கருத்தை வழிமொழிகிறேன் வரிக்கு வரி :)

Thekkikattan|தெகா said...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்னு//

செய்ற நேரத்தில மிகச் சரியா செஞ்சா ஏன்யா நாம இப்படி இருக்கோம். அரசியல் சாணக்கியத்தனமின்னு எல்லாத்திலும் சொதப்பித்தானே வைச்சிருக்கோம்.

எங்கே வால்பையன்?

Thekkikattan|தெகா said...

ரெண்டு ஊரு அரசியல்வாதிகளுமே சேந்து தண்ணி ஊத்தி அனையாம பாத்திட்டு இருக்காங்கன்றதுதான் உண்மை.. எப்படி தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க அவங்களுக்கு பிரச்சின வரப்ப அத திச் திருப்ப இலங்கை பிரச்சினைய கைல எடுப்பாங்களோ..//

வாங்க ராமசாமி கண்ணன், என்னோட மொத்தப் பதிவையும் அழகா, அப்ஸ்ராக்ட் பண்ணி கொடுத்திட்டீங்க. நன்றி!

வரிக்கு வரி உண்மை அது தானுங்கோவ். இலங்கையுடனான தமிழக/இந்திய அரசியல் ஊறுகாய்த் தனங்கள் இங்கே குறிப்பிட்டு காமிச்சது ரொம்பப் பொருந்தும்.

மரா said...

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீஎங்கள் சொன்னதெல்லாம் முப்பத்தெட்டு வருடங்களாக நடந்து கொண்டிருப்பது தான்.

1971 வங்காளதேசம் பிரிக்கப் பட்டதிலும், போரில் அடைந்த தோல்வியிலும் பாகிஸ்தான் ஒரு முழு யுத்தத்தை நடத்தி இந்தியாவை ஜெயிக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டது. எல்லை தாண்டிய தீவீரவாதம், பயங்கரவாதத்தை மத்சத்தின் பெயரால், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை விசிறிவிட்டு பாகிஸ்தான் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது. நம்முடைய உதவியோடு விடுதலை அடைந்த வங்காளதேசமாவது நட்போடு இருக்கிறதா என்று பார்த்தால், அங்கேயும் இந்தியாவின் மீதான அவநம்பிக்கை, வெறுப்பு தான் பிரதானமாக இருக்கிறது.

இன்னும் கண்ணை அகலத் திறந்து பார்த்தால், இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகள் முழுவதுமே அரசியல் ரீதியாகத் தோற்ற, ரவுடி ராஜ்ஜியங்களாக இருப்பதைப் பார்க்க முடியும். நேபாளம், பர்மா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை என்று அத்தனையுமே rogue states தான்! பெத்தண்ணாவாக இந்தியாவை சகித்துக் கொள்ள முடியாத இந்த நாடுகளை, அமெரிக்காவும் சீனாவும் தங்களுடைய ஆதாயங்களுக்காக நன்றாகத் தூபம் போட்டு, பயன்படுத்திக் கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறதா?

அதெல்லாம் கிடக்கட்டும்! இங்கே உள்ள அரசியல் தலைமைக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சூடு சுரணை இருக்கிறதா? -- ki.moo sir

முகுந்த்; Amma said...

சமூக அக்கறையோடு எழுதப்பட்ட பதிவு.

//இங்கு தமிழ் ப்ளாக்குகளிலும் அவ்வளவாக அதனையொட்டிய பதிவுகளை பார்த்த மாதிரியாக ஞாபகமில்லை//

இதெல்லாம் ஒரு செய்தின்னு எழுதினா எப்படி ஹிட் கிடைக்கும் அப்படின்னு நினைச்சிருப்பாங்க. எந்திரன் பத்தி எழுதினாலாவது ஹிட் மேல ஹிட் வரும்.

//இதில பெரிய ஜோக் என்னத் தெரியுமா பாகிஸ்தான்ல இப்ப அடிச்சு முடிச்சிருக்கிற வெள்ளத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணமாம். இயற்கையை திசை திருப்பி அங்க ஏவி விட்டாங்களாம். //

இயற்கையை ஏவி விட்டு தான் நாம அந்த நாட்டை சீர் குலைக்கனுமா என்ன, அதான் அங்க தாலிபான் மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிடுச்சே, அது போதாது.

Thekkikattan|தெகா said...

மீண்டும் மரா,

//பாகிஸ்தான் ஒரு முழு யுத்தத்தை நடத்தி இந்தியாவை ஜெயிக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டது.//

ஆமா புரிந்து கொண்டது. அது அப்போ எழுபதுகளில். ஆனா, இன்னிக்கு நிலமை அப்படி இல்லையே! நாம அணுகுண்டு வெடிச்சு பார்த்துக்கிட்ட மூணாவது வாரத்தில அவங்களும் வெடிச்சு பார்த்துக்கிட்டாங்களே அது எப்படி சாத்தியமானுச்சு? இப்போ counter balance ஏதோ ஒரு வகையில ஆகிப் போச்சா இல்லையா, இதெல்லாம் ஒரு பொழப்பா அவன் 50 குண்டு வைச்சிருந்தான்னா நான் 100 வைச்சிக்குவேன்னு ஊரு முழுக்க குண்டு கட்டி பொதைச்சு வைச்சிக்கிட்டு எவன் முந்திகிட்டு போடுவானோன்னு விடிய விடிய முழிச்சிக்கிட்டே வாழுறது.

//நேபாளம், பர்மா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை என்று அத்தனையுமே rogue states தான்!//

ஏன் இப்படி ஆகிப் போச்சு? அப்போ அயலுறவுக் கொள்கையில நாமோ ஏதோ சொதப்பிட்டு இருக்கோம்னு தானே அவன் அவனும் குழம்பின குட்டையில மீன் பிடிக்க வாரான்.

ஏன் நமக்கு விவரம் தெரியுறதிற்கு முன்னாடி நடந்த வெளி நாட்டு உறவு சொதப்பல் அரசியல எல்லாம் பேசிகிட்டு நம்ம கண்ணு முன்னாடி இப்போ எப்படி இலங்கை பிரச்சினையை ஆக்கி வைச்சிருக்கோம். கொல்லை புறத்தில கொண்டு வந்து சிவப்பு ஜியண்டை நிறுத்தி வைச்சிருக்கோம், அவிங்க அருணச்சல்லிலும், அஸ்ஸாமிலும் குடையுற பத்தாதுன்னு - அந்த அளவிலதான் நம்மோட சாணக்கியத்தனம் இருக்குது.

//அதெல்லாம் கிடக்கட்டும்! இங்கே உள்ள அரசியல் தலைமைக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சூடு சுரணை இருக்கிறதா?//

இதுக்கு யாராவது நல்ல கவனிச்சிக்கிட்டு வாரவங்க வந்து பதில் சொல்லுங்கப்பா... :))

Thekkikattan|தெகா said...

இந்தியா ட்ரிப்பிற்கு பிறகு முதல் நடை தெக்கி பக்கமா. வாங்க! வாங்க!!

//இதெல்லாம் ஒரு செய்தின்னு எழுதினா எப்படி ஹிட் கிடைக்கும் அப்படின்னு நினைச்சிருப்பாங்க. எந்திரன் பத்தி எழுதினாலாவது ஹிட் மேல ஹிட் வரும்.//

எப்படிங்க இவ்வளவு சீக்கிரமா நீங்க பதிவுலகின் நாடியை பிடிச்சு படிச்சிட்டீங்க. முதல் ரவுண்ட் அல்ரெடி முடிஞ்சிச்சு. அடுத்த ரவுண்டிற்கு எல்லாம் வெயிட்டீஸ். :)

//இயற்கையை ஏவி விட்டு தான் நாம அந்த நாட்டை சீர் குலைக்கனுமா என்ன, அதான் அங்க தாலிபான் மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிடுச்சே, அது போதாது.//

இயற்கையை அப்படித்தான் ஏவி விட முடியுமா? சொல்லவே இல்லை :D. தலீபான் எல்லாம் சொந்த செலவில சூன்யம் வைச்சிக்கிட்ட விசயம். இப்போ என்ன கவலைன்னா இந்த வெள்ளத்தினாலே கூடுதல் உறுப்பினர்கள் அவங்க கையாண்ட சிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அங்கே பிசாசு கதவ தட்டினா, அடுத்த வீடு நம்ம கதவுதான்.

நன்றி, முகுந்தம்மா!

நியாஸ்தன் said...

அழையாத விருந்தாளியா போயி நிக்கச் சொல்லுறிங்களா

ராஜ நடராஜன் said...

டாவின்சி கிட்ட Smiling Beauty யை மறுபடியும் வரைந்து தருமாறு கேட்கிற மாதிரி இருக்குது.டூப்ளிகேட் மறுபடியும் யோசித்து சொல்வது இங்கே

உங்களுக்கு தாத்தா கிடைத்த மாதிரி 9/11க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த பாகிஸ்தானியர் ஒருவரிடம் பாகிஸ்தான் வெள்ளம் பற்றிய பேச்சு எழுந்தது.நான் சொன்னது மக்கள் நலன்களை பின் தள்ளி விட்டு இரு நாடுகளுமே அனைத்து பொருளாதாரத்தையும் வீணாக அணுஆயுதப் போட்டியில் கொட்டுவது கொள்ளியால் தன் தலையில் தானே சொறிந்து கொள்வது மாதிரி.மேலைநாடுகள் தமது அத்தியாவசிய செலவுகளுக்கும அப்பால் உள்ள வளத்தை அணு ஆயுதத்திற்கு செலவிடுகிறது.

2.பி.பி.சி,சி.என்.என் தவிர பாகிஸ்தான் வெள்ளம் பற்றி கருத்து வெளியிட்டதை உங்கள் இடுகையில் மட்டுமே பார்த்தேன்.

3.பாகிஸ்தானின் அடிப்படை வாதக் கல்வியை அகற்றுவதும்,இந்தியாவில் அரசியல் விழிப்புணர்வு அனைவருக்கும் உருவாவதும் அவசியம்.

4.கிருஷ்ணா பாகிஸ்தான் போய் முகத்தில் கரி பூசிக்கொண்டு தமிழக மீனவர்கள் விசயத்தில் ஊய்ன்னு விசில் அடிப்பது புதுசா இங்கே சேர்த்துக்குறேன்.

5.அவதியுறும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அதே சமயத்தில் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மனித மனங்களை மாற்றி விடாது.உதாரணம் சுனாமி.

(கூகுளண்ணே!Did I Pass Second Attempt?எதுக்கும் ஒட்டி வச்சிக்கிறேன்:))

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் கூகிளண்ணன் சென்சார் போர்டுல கண்டபடி கத்திரி வச்சமாதிரி மறுபடியும் வந்துருக்கு.அசல் அசல்தான்:)

Thekkikattan|தெகா said...

நியாஸ்தன் said...
அழையாத விருந்தாளியா போயி நிக்கச் சொல்லுறிங்களா//

வருமுன் காப்போங்கிற டட்டுவத்தின் கீழ் give it a try would not hurt, so I guess...

cheena (சீனா) said...

அன்பின் தெகா

கொடுப்பதும் பெறுவதும் அங்கங்கே உள்ள அரசியல் சிந்தனைகளைப் பொறுத்தே அமைகிறது. நம்மைப் பொறுத்தவரை - கொடுத்தாலும் திட்டுவோம் - இல்லை எனினும் திட்டுவோம். அங்கு அப்படி இல்லை - பெற்றால் திட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் பிரபா
நட்புடன் சீனா

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

ஒரு வழியா இது தொடர்பான சிந்தனையை ஓட விட்டு அதனை எழுத்தாவும் தட்டி கூகுள் முழுங்கி மீண்டும் காத்தில இருந்ததை தடவிப் பிடிச்சு கொண்டு வந்து சேர்த்திட்டிய, நன்றிவே!

//டாவின்சி கிட்ட Smiling Beauty யை மறுபடியும் வரைந்து தருமாறு கேட்கிற மாதிரி இருக்குது.டூப்ளிகேட் மறுபடியும் யோசித்து சொல்வது இங்கே//

அப்போ, இப்படிச் சொல்லுறதப் பார்த்தா, ஒரிஜினல்லே என்னன்னவோ வந்து விழுந்துருக்கும் போலவே! கூகிளா! ஏன்யா இப்படிப் பண்ணுறே. அடுத்த முறை நீங்க வெட்டி காப்பி பண்ணி வைச்சிக்கிடுங்க எதுக்கும் ;)

சரி, பின்னூட்டம் சார்ந்து எல்லாம் சரிதான். ஆனால், # 3 கொஞ்சம் நெம்பக் கஷ்டம். விட மாட்டாய்ங்க. நாட்டு மேல அம்பூட்டு பற்று இருக்குங்க; ரெண்டு பக்கமும்.

வாங்க இருந்து பார்த்திட்டு போவோம். என்னதான் இந்தப் பூமிக்கு முடிவா எழுதி முடிச்சிக்கப் போறோம்னு.

//(கூகுளண்ணே!Did I Pass Second Attempt?எதுக்கும் ஒட்டி வச்சிக்கிறேன்:))//

yea, you have half way jumped the கிணறு, better try next time ;) - so google says.

தருமி said...

//இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்னு////

அதெல்லாம் சரி .. ஆனா இந்திய மருத்துவர்களுக்கு மட்டும் விசா இல்லைன்னு சொன்ன என்ன பண்றது? (அதுதான் செய்தித்தாளில் வந்தது.)

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்

Related Posts with Thumbnails