Saturday, October 02, 2010

ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

இந்த நிலத் தகராறு விசயமா இவ்வளவு நாலு இத்தனை பேரு எங்கப்பா போயிருந்தீங்கன்னு எல்லாருக்கும் தோணும். எனக்கும் தோணுச்சு. ஆனா எந்த நேரத்தில குரல் எழுப்பணுமோ அந்த நேரத்தில மட்டும் சில விசயங்களுக்கு குரல் எழுப்பினாத்தான் பொருத்தமா இருக்கும்.

சரி நானும் இந்த வரலாற்று சந்திப்பில என்னோட நிலை என்னான்னு சொல்லி வைச்சிர்றது என்னோட பசங்களுக்கும், என்ன உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கிற என் நண்பர்கள் வட்டம் பல்முக கலாச்சார மத, இன மக்களையும் உள்ளடக்கி இருப்பதால் நாளக்கி உதவும்னு சொல்லி வைச்சிடுறேன். இது போன்ற சூழல்களில் மட்டுமே தன்னுடைய பார்வையை வைப்பதின் பொருட்டே எது போன்ற தனி மனித புரிதல் இந்த சமூகம் பொருட்டும், இந்த உலக ஞானம் பொருத்தும் தனிமனிதனாக தம்முள்ளையே வளர்த்தெடுத்திருக்கிறோம் என்பதனை முன் மொழிய வாய்ப்பாக இருக்கிறது என்று எண்ணி முன்வைக்கிறேன். நான் மற்றுமொரு மண்ணு மூட்டையாக இருந்து மடிய ஆவணப் படுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சரி விசயத்திற்கு போவோம். மனிதன் ஆஃப்ரிகா சமவெளிகளில் கற்களை கொண்டு மாமிசம் பிளந்து சாப்பிடுவதற்கு முன்னால் மனித குரங்குளாக நாலு கால்களில் அலைந்து திரிந்த கால யுகங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மரங்களில் தஞ்சம் புகுந்திருந்தான். பிறகு எழுந்து நின்றால் சமவெளியில் வெகு தூரம் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், தன்னை அணுகி வரும் அபாயத்தை கண்டறியும் திறன் இருப்பதனையொட்டி காலப் போக்கில் சிறுகச் சிறுக அந்த உடற்சார்ந்த தகவமைவினை பெற்றுக் கொண்டான். குறைந்தது இந்த ஒண்ணரை லட்ச வருஷங்களுக்கிடையேதான் இன்றைய முழு நிலையை நாம் எட்டியிருக்கிறோம். ஆனால், இன்னும் போக வேண்டிய தொலைவு வெகு தூரம் இருக்கு; அதுவரைக்கும் நம்மை நாமே விட்டு வைச்சிக்கிட்டா.

அதற்குப் பிறகான சமூகமாக கூடி வாழ்தல். இந்தத் தன்மை பாலூட்டிகளில் பல விலங்குகள் நம்மை போலவே இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது வனங்களிலும், சமவெளிகளிலும். அது போன்ற கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு யுக்தியாகவே படைப்பில் அறியப்படுகிறது. அங்கிருந்துதான் நாமும் அது போன்ற வாழ்வமையை கற்றறிந்திருக்க முடியும். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து, கிடைக்கும் உணவு, சீதோஷ்ண நிலையைக் கொண்டு இனப்பெருக்கமும், அதனையொட்டிய இடப்பெயர்வும் பிரிதொரு குழுவின் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான சூழ்நிலையை இயற்கையே அமைத்து கொடுத்து அதனை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதனைப் பொருத்தே இயற்கை ஒரு உயிரினத்தின் இருத்தலை இந்த பூமிப்பரப்பில் நிர்ணயம் செய்கிறது எனலாம்.

இந்த நிலையில் ஒரு பிராந்தியத்தில் வாழும் பல சிறு குழுக்கள் ஒன்றாக இணைந்திருந்தாலே ஒழிய பிரிதொரு குழு ஊடுருவி நிலத்தையோ அல்லது அங்கிருக்கும் இயற்கை வளங்களையோ சுரண்டும் பாங்கில் ஆக்கிரமிக்கும் பொழுது தன்னை தற்காத்து தனது நிலத்தை மீட்டெடுக்க ஒரு பெரும் இனமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் யுக்தி அவசியமாகிப் போகிறது.

இங்குதான் ஏதோ ஒன்றின் பொருட்டு அனைத்து சிறு சிறு குழுக்களையும் இணைக்கும் விதமாக மொழி, நிறம், பின்பு கல்லு, மண்ணு, தெருப் புழுதி என்று எதனையோ ’பயத்தின்பால்’ சார்ந்து தங்களது மனக் கவலையை அல்லது தன்னிடமிருக்கும் பயத்தை போக்கிக்கொள்ள பயன்படுத்துவதாக தனிமனித நிலையில் வைத்திருந்த ஒரு விசயத்தை ஒரு பரந்துபட்ட குறியீடாக நிறுவனப்படுத்தி ஒரு மதமாக உருத் தேத்துவதின் அவசியம் வந்திருக்கக் கூடும்.

நாம பேசிக்கிட்டு இருக்கிறது எல்லாம் பல ஆயிரம் வருஷங்களை கடந்து, இன்னும் மனிதன் முழுதுமாக நாகரீகமடையாமல் இருந்ததிற்கு முன்னாடி உள்ள கதை. அது போன்ற இடப்பெயர்வு ஓரளவிற்கு கற்காலம் தாண்டி, நாகரீகமடைந்ததாக கருதிக் கொள்ளும் அய்ந்தாயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல்வேறு தேவைகளால் நாடு விட்டு நாடு போயி இடம் பிடிப்பதும், பிரிதொரு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டு அவர்களை இவர்களாக்குவதும் வரலாறறிந்ததே!

அந்த காலக் கட்டத்தையும் நாம் கடந்து அண்மைய 1000 வருடத்திய வரலாற்றை புரட்டினாலும் இது போன்ற அவசியமே இருந்து வந்திருக்கிறது. ஏன் இன்று கூட ஓர் அந்திய நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு நாடு விட்டு நாடு சென்று ஆளுமை செய்து வருவதும் நடந்துதான் வருகிறது. கண்டும் வருகிறோம்.

அது போன்ற கால கட்டத்தில் இடப்பெயர்வின் பொருட்டு பிரிதொரு கலாச்சாரத்தை உட்கொள்ளுவதோ, இடம் பிடிப்போ ஒன்றும் புதிதல்ல. அது அன்றைய காலத்து நடைமுறை, எதார்த்தம்! அப்படியாகத்தான் வட அமெரிக்காவிலேயே ஒரு நாள் கொலம்பஸ் கால் வைத்து ‘யுரேகா!’ என்று கத்தி கூப்பிட்ட அன்றைய தினத்திலிருந்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு இந்த பரந்த நிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டார்கள், காலனிய மக்கள். அதற்காக, நவீன அமெரிக்காவின் இடம் பூர்வீக குடிகளான எங்களுடையது என்று நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில் அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தால் நிலத்தை மீட்டெடுக்க விட்டுவிடுவார்களா? கனவிலும் நிகழாதுதானே!

இப்போ நம்ம விசயம். மொகலயா காலத்தில் அப்படியாக இடப்பெயர்வு பண்ணி இங்க வந்து தனக்கு வேணுங்கிற (அதுக்கும் முன்னடி எங்கங்கோ இருந்து எல்லாம் புகுந்து அள்ளிகிட்டு கொண்டு போயி வைச்சிருக்காங்க அது வேற விசயம்) மாதிரி ஆட்சி நடத்தி ஒரு நாட்டை ஆண்ட காலத்தில தனக்குத் தேவையான வழிபாட்டுத் தளம், அரசாங்கம் நடத்த கட்டடமின்னு கட்டி ஜெக ஜோதியா வாழ்ந்திட்டு பிரிதொரு நாள் கிளம்புற நேரம் வந்தவுடன் மிச்சங்களாக இது போன்ற சுவடுகளையும், அவர்களின் வழியை பின்பற்றி வாழ்ந்த மக்களையும் விட்டுட்டு போயிருக்காங்க.

அதுக்குபிறகு, இன்னுமொரு நாடு பிடிப்பு நடக்கிது. அது போன்றே அவர்களும் செய்துவிட்டு போகிறார்கள். இடையில் ஒரு நாடா சேர்ந்து போராடி, நாடுங்கிற ஒரு கான்செப்டிற்குள்ளர நாம முதல் முறையா நுழையிறோம். அன்றைய தேதியிலிருந்து அதுக்குள்ளர வருகிற எல்லா இன, மத, மொழி மக்களும் ஒரு நாடுங்கிற கட்டமைப்பிற்குள்ளர அவங்கவங்க வழித் தோன்றல், வரலாறு என்றும் உள்ளடங்கி வந்தாச்சு, நல்லா புரிஞ்சிக்கணும். இனிமே உள்நாட்டு குழப்பமே டைம் பாசிற்கு கூட இருக்கக் கூடாது. ஒரு நாடாக இருந்து அத்துனை பன்முகத் தன்மையையும் உள்வாங்கி அது வரைக்கும் எது நடந்தேறி இருக்கிறதோ, அதனையும் ஏத்து அவர்களின் வாழ்வு முறைக்கும் மரியாதை கொடுத்து, உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உணர வைப்பதில்தான் ஒரு நாட்டின் அமைதியும், முன்னேற்றமும் இன்றைய நிகழ்காலத்திற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.

அதனைத் தவிர்த்து, புராண கால இதிகாசங்களைக் கொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் 500 வருடங்களுக்கு முந்திய வரலாற்று சிக்கலை இன்றைய நாகரீகமடைந்த நாடாக, தனக்கென சட்டங்களையும் கொண்டு இயங்கும் ஒரு நாடு ‘பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை’ மட்டுமே அடிப்படையாக கொண்டு நிகழ்காலத்தை சிதைத்துக் கொள்வது எந்த விதத்தில் சமயோசித யுக்தியாக இருக்க முடியும்? கண்டிப்பாக பண்படைந்த மக்களை உள்டக்கிய ஒரு நாடாக இது போன்ற நிகழ்வுகள் நம்மை மிகவும் வெட்கித் தலை குனிய வைக்க வேண்டிய இடத்திற்கே நகர்த்தும்! இன்றைய வரலாற்றுச் சின்னங்களை நேற்றைய பழிக்குப் பழி சிறுமையைக் கொண்டு சிதைப்பதும், அதன் வழியில் இன்றைய வாழ்வு சார் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பங்கம் வருமாறுபிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதும், தன் தலையை தானே கொல்லிக்கட்டையால் சொரிந்து கொள்வதற்கு சமம் என்பேன்.

இந்த பாபர் மசூதி இடிப்பும், ஆஃப்கானிஸ்தீய புத்தர் சிலை இடிப்பிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த சிலை இடிப்பு இன்னமும் உலக அரங்கில் ‘காட்டுமிராண்டித்தனமாகத்தான்’ அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அது போலவேதான் இந்த நவீன உலகில் புராண காலத்து நம்பிக்கையைக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னத்தை அன்று இடித்ததும். ஆக மொத்தத்தில இந்த ஓட்டு ஆண்டிங்க அவங்களோட வயித்துப் பொழப்பிற்கு எல்லா பயலையும் தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டு சாக விடவும் தயாரா இருக்காங்க!

I feel very sad this day!



- Photo Courtesy: Net

25 comments:

Thekkikattan|தெகா said...

பின் இணைப்பு: சொல்ல விட்டுப் போனது எனக்கு மொகலாய காலத்து வரலாற்றுத் தடயங்களான ரெட் ஃபோர்ட், ஆக்ரா, ஃபாதேபூர் சிக்ரி போலவேதான் இந்த பாபர் மசூதியையும் வைத்துப் பார்க்கத் தோன்றியது. மற்ற இடங்கள் எப்படி பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறப் படுகிறதோ அது போன்று இதுவும் வரலாற்றுப் பார்வையுடன் பார்க்கப் பட்டுருந்தால் இந்த ஒரு சூழலில் நாம் நின்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லத் தோணியது. இங்கே வைச்சு சொல்லிக்கிறேன்.

மீன்துள்ளியான் said...

அண்ணே ரெம்ப அருமையா சொல்லி இருக்கீங்க..

திருபுவனம் வலை தளம் said...

நீதிமன்றம் பதட்டத்தை தணிக்க இப்படியொரு கேவலமான தீர்ப்பை வழங்கியுள்ளது
முஸ்லிம்களின் பொறுமை அவர்கள் இந்நாட்டின் சட்டத்தின் மேல் இன்னும் நம்பிகையை வைத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது . ஆமாம் காவி பயங்கரவாதிகள் இத்துடன் நிறுத்த மாட்டார்களே அடுத்து காசி ,மதுரா என ரத்த வெறி மத நம்பிக்கை என்ற பெயரில் ஓடுமே அதற்கும் இந்த நவீன கட்ட பஞ்சாயத்து ஒத்து ஓதுவுமே

குவைத் தமிழன் said...

நல்ல பதிவு



http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_03.html

ராஜ நடராஜன் said...

தெகா!மனிதனின் ஆதி அந்தம் முதல் நிறைய சிந்தித்திருக்கீங்கன்னு தெரியுது.

தீர்ப்பை எப்படி எழுதினாலும் Ayothya is a disputed land என்ற பெயரை சம்பாதித்துக்கொண்டுள்ளது.இனியும் அப்படியே!இதனை யாரும் எப்படியும் மாற்றி விட முடியாது.

தீர்ப்புக்கு முன்பு வரை அகோரா அமைப்புக்கள் பற்றி எனக்கும் பெரும்பாலோருக்கும் கூட அதிகம் தெரியாது என நினைக்கிறேன்.தர்க்க ரீதியாக,ஆன்மீக ரீதியாக,இயல்புலகம் சார்ந்து அகோரா மீண்டும் விவாதிக்கப்படவேண்டியவை என கருதுகிறேன்.

அயோத்தியா உலகளாவிய பார்வையில் நான் சொன்னபடி இன்றைய செய்தியில் நியுயார்க் நிலம் கூட செகுலரா விளையாட்டு,நீச்சல் குளம்,குழந்தைகள் காப்பகம்,கூடவே தொழுகைக்கான ஒரு இடமாக அமைக்கப்போகிறார்கள்.அதேமாதிரி நல்லுணர்வை வளர்க்கிற மாதிரி சேவை மய்யம் ஏதாவது கூட அயோதித்திக்கு இப்போதைய தீர்வுடன் அதிகப்படுத்தலாம்.

இனியும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அலையாமல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு சமரசத்திற்கு வருவது நல்லது.உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றுமென்ற நம்பிக்கை எனக்கில்லை.

ராஜ நடராஜன் said...

உங்கள் பின் இணைப்பு பார்த்தவுடன் இன்னுமொரு பின்னூட்டம் போடத் தோணுச்சு.

//வரலாற்றுத் தடயங்களான ரெட் ஃபோர்ட், ஆக்ரா, ஃபாதேபூர் சிக்ரி போலவேதான் இந்த பாபர் மசூதியையும் வைத்துப் பார்க்கத் தோன்றியது. மற்ற இடங்கள் எப்படி பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறப் படுகிறதோ அது போன்று இதுவும் வரலாற்றுப் பார்வையுடன் பார்க்கப் பட்டுருந்தால் //

அடைப்பானுக்குள் இருப்பது Hypothetical.நேற்று எந்திரன் கூட hypothetical question க்கு பதில் சொல்ல மறுத்துடுச்சு:)

ஜோதிஜி said...

நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...

இந்த பதிவுக்கு இதை விட வேறு விமர்சன வார்த்தைகள் தேவையில்லை.

ஹேராம் said...

உலகத்துக்கே பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் இழிவான மதத்தைச் சேர்ந்த ஒருவன் இந்து மதத்தினரைப் பார்த்து பயங்கரவாதி என்பது வேடிக்கையாக உள்ளது!

சிறுபான்மையினருக்கு ஒரு நாட்டில் என்ன தீர்ப்புக் கிடைக்க வேண்டுமோ அந்தத் தீர்ப்பு இந்தியாவில் கிடைத்துள்ளது! அனைத்து நாடுகளிலும் இது எழுதப்படாத சட்டம்! அதற்கு மட்டும் இந்தியா விதிவிலக்கா என்ன?

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வரலாறுகளை படித்தவர்களுக்கு இடிப்புகளின் காரணம் தெரியும். அது வரலாற்றில் இருந்து அந்த இனத்தினை அகற்றுவதற்கான ஒரு உத்தி.

மனிதர்கள் மாறும் வரை இடிப்புகள் தொடரும்.

http://sagotharan.wordpress.com/

Thekkikattan|தெகா said...

நேற்று எந்திரன் கூட hypothetical question க்கு//

ராஜ நட, எந்திரன் படம் பாபர் விசயத்திற்கு என்ன antidoteஆ ;) - ரொம்ப அவசியம், மதச் சடங்கா எல்லாம் என்னால படம் பார்க்க முடியாதுங்க. அதுவா தோணணும்; எனக்கு தோணச் செய்யல :D

மங்கை said...

மத அடிப்படைவாத்த்தை பறைசாற்றிய அந்த நிகழ்விற்கு நியாயம் கற்பிக்கப்படிருக்கிறது..it will only alienate India's millions of muslims, who already feel marginalised... இது எல்லாம் தெரியாம இல்லை யாருக்கும்.... என்னத்தை சொல்ல போங்க... வருத்தமான விஷ்யம்... ம்ம்

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, எந்திரன் படம் பாபர் விசயத்திற்கு என்ன antidoteஆ ;) //

அய்ய!நீங்கள் கொடுத்த பின் இணைப்பில் வரலாற்றுப்பார்வையுடன் பார்க்கப்பட்டிருந்தால்....என்பது இப்படி நிகழ்ந்திருந்தால்,அப்படி நடந்திருந்தால் என்பது மனித எதிர்பார்ப்பு.அதனையே Hypothetical என்றேன்.ஒரு நிகழ்வு நடந்தது நடந்துதான்.அதனை மாற்ற முடியாது.நடந்த நிகழ்வை ஒட்டி வேண்டுமானால் மறுநிகழ்வு நடக்கலாம்.இப்படி தியரி சொன்னா யாருக்காவது புரியுமா?

அதனால்தான் நேற்று எந்திரன் பார்த்த Hangover ல கமெண்டிட்டேன்:)

கலகலப்ரியா said...

well written..! :-)

கோவி.கண்ணன் said...

சிறுபான்மை பெரும்பான்மை அரசியல்களை விட்டுத்தள்ளுங்கள். பாபர் மசூதி மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிப்பது போல் குண்டு வைத்து தகர்கப்பட்ட புத்தர் சிலைகள் மறு சீரமைப்புக்கு எதேனும் குரல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா ?

பாபர் மசூதி மட்டும் ரத்தத்தாலும், புத்தர் சிலை தக்காளி சட்டினியால் செய்யப்பட்டது போன்றல்லவா கண்டுகொள்ளாமல் கிடப்பில் உள்ளது

Thekkikattan|தெகா said...

//பாபர் மசூதி மட்டும் ரத்தத்தாலும், புத்தர் சிலை தக்காளி சட்டினியால் செய்யப்பட்டது போன்றல்லவா கண்டுகொள்ளாமல் கிடப்பில் உள்ளது//

கோவி, ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பும் இந்த மசூதி இடிப்பைப் போன்றே ஒரு ‘காட்டுமிராண்டித்தனம்’ என்பதனை ஒப்புமை படுத்தவே இங்கு சுட்டிக்காட்டப்பள்ளது.

அது தலீபான் அரசாங்கத்தின் கீழ் வருகிறது. அவர்கள் வைத்ததே சட்டம், அது உலகம் அறிந்தது. இருப்பினும் கண்டனங்கள் பல பக்கமுமிருந்து முன் வைக்கப்பட்டதே அன்று. இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மதத்தவர்களின் அன்றைய குரல் எது போல ஒலித்தது என்று எனக்குத் தெரியவில்லை.

இருப்பினும் உங்கள் கேள்வி இரு தரப்பினரையும் சிந்திக்க வைத்தால் நலமே!

கோவி.கண்ணன் said...

//அது தலீபான் அரசாங்கத்தின் கீழ் வருகிறது. அவர்கள் வைத்ததே சட்டம், அது உலகம் அறிந்தது. //

இந்த ஸ்டேட்மெண்ட்..சங்கர் பரிவார் கூட்டங்கள் காட்டுமிராண்டிகள் இல்லைன்னு சர்டிபிகேட் கொடுப்பது போல் உள்ளதே தெகா..

Thekkikattan|தெகா said...

//சங்கர் பரிவார் கூட்டங்கள் காட்டுமிராண்டிகள் இல்லைன்னு சர்டிபிகேட் கொடுப்பது போல் உள்ளதே//

அப்படியா சவுண்டாகிது, கோவி. யாரு இது போன்ற செயலில் பழைய வரலாற்றுச் சுவடுகளின் மீது நவீன காலத்தில் கை வைத்தாலும் அது கண்டிக்கப்படதக்கதும், காட்டுமிராண்டித் தனமானதும் கூட.

மரா said...

நல்லதொரு கட்டுரை. சரியான நேரத்தில். சரியான இணை. ரெண்டு சம்பவங்களுமே மிகவும் துரதிஷ்டமானவை. தவிர்த்திருக்கபடவேண்டியவை.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

ராஜ நடராஜன் said...

//சிறுபான்மை பெரும்பான்மை அரசியல்களை விட்டுத்தள்ளுங்கள். பாபர் மசூதி மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிப்பது போல் குண்டு வைத்து தகர்கப்பட்ட புத்தர் சிலைகள் மறு சீரமைப்புக்கு எதேனும் குரல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா ?//

கோவி,தெகா!இதை...இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.அநீதிகள் எங்கிருந்து கிளம்பினாலும் குரல் கொடுக்க வேண்டும்.இந்துத்வா சக்திகளை நினைத்து மகிழ ஒரு கூட்டம் இருப்பது போல் பின்லேடன்&Co வை மகிழவும் ஒரு கூட்டம் இருக்கிறது.இந்துத்வா,இஸ்லாமிய தீவிரவாதங்கள் அழியட்டும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[ஒரு நாடாக இருந்து அத்துனை பன்முகத் தன்மையையும் உள்வாங்கி அது வரைக்கும் எது நடந்தேறி இருக்கிறதோ, அதனையும் ஏத்து அவர்களின் வாழ்வு முறைக்கும் மரியாதை கொடுத்து, உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உணர வைப்பதில்தான் ஒரு நாட்டின் அமைதியும், முன்னேற்றமும் இன்றைய நிகழ்காலத்திற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.]]


அருமையா சொல்லியுள்ளீர்கள்..

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks

Radhakrishnan said...

அழகிய உணர்வுகளை செதுக்கி வைத்து இருக்கிறீர்கள் தெகா. அருமை.

Anna said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.

Jarrette Kusuda said...

உங்கள் பின் இணைப்பு பார்த்தவுடன் இன்னுமொரு பின்னூட்டம் போடத் தோணுச்சு. //வரலாற்றுத் தடயங்களான ரெட் ஃபோர்ட், ஆக்ரா, ஃபாதேபூர் சிக்ரி போலவேதான் இந்த பாபர் மசூதியையும் வைத்துப் பார்க்கத் தோன்றியது. மற்ற இடங்கள் எப்படி பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறப் படுகிறதோ அது போன்று இதுவும் வரலாற்றுப் பார்வையுடன் பார்க்கப் பட்டுருந்தால் // அடைப்பானுக்குள் இருப்பது Hypothetical.நேற்று எந்திரன் கூட hypothetical question க்கு பதில் சொல்ல மறுத்துடுச்சு:)

Related Posts with Thumbnails