Sunday, March 20, 2011

லிபியாவின் கடாஃபிக்கு குரல் குடுப்போம் வாங்க...

லிபியாவில் ‘ஆபரேசன் ஆடிசி டாவ்ன்’ தொடங்கி கடாஃபி மற்றும் அவர்களது மகன்களின் கொக்கரிப்பிற்கு ஒரு முடிவுரை உலக நாடுகள் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் நமது அ’ஹிம்சையை மட்டுமே விரும்பும் தேசம் இங்கிருந்து கடாஃபியை அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு கூக்குரலிடுகிறது. யாருக்காவது என்ன ஏதுன்னு ஏதாவது தெரியுமா?

லிபியாவில் கடந்த 40 வருடங்களாக தனது இரும்பு கரத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி பெட்ரோல் வளத்தின் மூலமாக கிடைக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் தானும், தன் மகன்களின் மூலமாகவும் வெளி நாட்டு பாடகிகளை கொண்டு வந்து நாலு பாட்டு பாடு மில்லியன் கணக்கா பணம் தாரேன்னு நாட்டின் பணத்தை செலவு பண்ணி களிக்கும் கூட்டத்திற்கு ஏன் இத்தனை பெரிய ஜனநாயகம், சர்வதிகார அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கிறது?

கிட்டத்தட்ட எகிப்தில் மக்கள் எழுச்சி எழ ஆரம்பித்த சமயத்திலேயே லிபியாவிலும் மக்கள் துணிந்து தெருவிற்கு வந்து விட்டார்கள். சர்வதிகாரிக்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென்றால் தனது உயிரை இரண்டாம் பட்சமாக பனயம் வைத்து விட்டுத்தான் முன் வந்திருப்பார்கள். அதுவும் இத்தனை ஆண்டுகள் வறுவலுக்கு பிறகு.

இது போன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தில் திளைத்த நாகரீக நாடுகள் அது போன்று தானாக மக்களே முன் வந்து கேக்கும் நிலையில் தன்னாலான உதவிகளை செய்து, ஏனைய சர்வாதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் செயல்களை செய்து மக்களுக்கு ஒரு தீர்வை வாங்கி கொடுப்பதல்லவா முறையாக இருக்க முடியும்.

இருந்தாலும் யூ. என்_க்கு செலக்ட்டிவ்வா மனித உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, தட்டிக் கேட்கப் போகும் இடம் எது போன்றது, செல்வதின் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இறங்குகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. ஈழத்திலோ அல்லது உகண்டாவிலோ நடந்தேறிய இனப் படுகொலையின் போதெல்லாம் இது போன்ற செலக்ட்டிவ் முன் உரிமைகளே முன் நின்றன. இது போன்ற சமயங்களில் உலக நாடுகளுக்கிடையே முடிவு எடுப்பதில் பிளவுற்று இருந்தாலும் அங்கே சென்று செலவழிப்பதில் எந்த பயனுமில்லை என்றால், மனித உரிமை மீறல்களைக் கூட கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்க வைத்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

கடாஃபி தனது நாட்டின் தேசீய தொலைக்காட்சியிலேயே தோன்றி போராட்டக்காரர்களை நோக்கி - இதோ எனது கூலிப்படை இன்று இரவு வருகிறது, எந்த ஈவு இரக்கமும் காட்டப் போவதில்லை சாவதற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விட்டே கோரக் கொண்டாட்டத்தை தொடர்கிறார். இதனை யூ. என் என்ற அமைப்பு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதன் மூலமாக என்ன இந்த உலகத்திற்கு செய்தியாக கொடுக்க முடியும்? மேலும் பல ஈழ, உகாண்டாவை ஒத்த படுகொலைகளை நடத்துங்கள் உங்களின் சொந்த குடும்ப பேராசைக்காக என்று விட்டுவிடலாமா.

ஏன் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு யூ.என்_ல் கடாஃபி நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஓட்டு போடுவதில் இருந்து வெளி வந்தது, வந்தும் ஏனைய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சியினை உடனடியாக நிறுத்துமாறும் கூறி வருகிறது. ஏன் இதனைப் போன்று அன்று ஈழத்தில் இறுதி கட்ட போரில் அத்தனை அப்பாவி உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், சீனாவும் இலங்கை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று கொல்லத் துணை போகிறது என்று தெரிந்தும் இந்தியா இன்று லிபியாவிற்கு விடும் அறை கூவலை அன்று ஈழ மக்களுக்காக விடவில்லை? ஒன்னுமே புரியலை...


சகாய விலையில் எண்ணெய் தருகிறேன் என்றால் மனித உயிர்கள் ஒன்று மற்றதாகி விடுகிறதா? இங்கேயும் நம் சுயநலம் வெட்ட வெளிச்சத்தில் அம்மணமாக நிற்கிறது.

பஹ்ரைனில் நம்மவர்கள் அந்த நாட்டு அரசருக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கூலிப்படைகள் எப்படி அந்த நாட்டு அரசருக்கு சாதகமாக போலீஸ் என்ற பெயரில் அடித்து கொல்வதற்கு துணை நிற்கிறதோ, அதே நிலையில் நம்மூரிலிருந்து சாதாரணமாக வேலைக்கு சென்றவர்களும் கிட்டத்தட்ட பாகிஸ் கூலிப்படைகளின் மனம் போன்றே தாங்களும் நடந்து கொள்வதாக படிக்க முடிகிறது.

அங்கும் 200-300 வருடங்களாக ஒரே பெரும்பான்மையற்ற சன்னி முஸ்லீம் நாட்டை ஆண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஷியா பிரிவினர் தங்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் எங்கிருந்து நாம் இடையில் வருகிறோம். ஏன் இந்த சுயநலத்தனமான நிலையை எடுக்க வேண்டும்? அங்கே, நமக்கு வேலை போய் விடலாம் என்பதனைத் தவிர வேறு ஏதாவது யோசிப்பதற்கு இருக்கிறதா? இது போன்ற புத்தியைத்தான் நாம் ஐக்கிய நாட்டுச் சபையிலிலும் காட்டி வருகிறோம்.

நீதி, நியாயம் என்ற ஒன்றெல்லாம் நமது சுயநலத்திற்கு முன்பு ஒன்று மற்றதாகி விடுகிறது என்றுதான் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் காட்டிக் கொள்கிறோம். இதனையே பிர தேசங்களில் தற்காலிகமாக இருக்கும் பொழுதும் கண்ணை மூடிக் கொண்டு முன் வைக்கவும் எத்தனிக்கிறோம் விளைவுகளை பற்றி சிறிதும் கவலையோ, அக்கறையோ இல்லாமல்.

லிபியாவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சியினையொட்டி வரும் ஆபத்திற்கு பின்னால் பல நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். நம்மூர்க்காரர்கள் ஊருக்கு சென்று என்ன செய்வது, நம்மூரில் எனக்கு உள்ள சூழ்நிலையை விட இதுவே பரவாயில்லை என்று அங்கயே இருந்து விடவும் துணிவதாக செய்திகள் படிக்கிறோம் அதுவும் லிபியா போன்ற நாட்டிலிருக்கும் நம்மூர் பெண்களே இப்படியாக முடிவு எடுத்து தங்கியிருக்கிறார்களாம். இதன் மூலமாக தெரிய வருவது என்ன? நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.

நம்மால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்யவாவது விட்டு விலகி நிற்போம். இந்த நேரத்தில போயி இரட்டை நிலை எடுப்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி காட்டி கொடுத்துவிடும். கொஞ்சம் அப்படி ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கலாம், ஈழத்தில நடந்தப்போ இருந்த மாதிரியே!



P.S: Photo Courtesy: Net

19 comments:

ஜோதிஜி said...

இரண்டு மூன்று நாட்களாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் செய்து கொண்டிருக்கும் நாட்டாமை வேலையை திகைப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். எனக்கும் லிபியாவுக்கும் ஒரு கணக்கு முடிக்க வேண்டி இருந்தது. இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு வகையில் வியப்பு. காரணத்தை பேசும் சொல்கின்றேன்.

ஜோதிஜி said...

உரையாடும் போது சொல்கின்றேன்.

Anonymous said...

இங்கிலாந்தும், அமெரிக்காவும் நாட்டாண்மை வேளைப் பார்த்தாலும், அது லிபிய மக்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுத் தரும் ... ஆனால் லிபியாவின் கடாபியின் முந்தானையைப் பிடித்த இந்தியாவின் நிலைப்பாடு காறித்துப்பச் சொல்கிறது.. எங்கே இன்றைக்கு லிபியாவுக்கு வந்த ஆப்பு நாளை கஷ்மீருக்கோ, பிற இந்தியாவுக்கு வந்துவிட்டால் கொள்ளையடிக்க முடியாதே .... அதிகாரவர்க்கம் ஒழிந்து லிபியாவின் மக்களாட்சி மலர் வேண்டும் ... மலரும் ...

http://thavaru.blogspot.com/ said...

இந்தியாவின் ராஜதந்திரமா அல்லது ராஜ தரித்திரமா தெகா இது. என்னமோ போங்க...

Anonymous said...

அமெரிக்காவும் இங்கிலாந்தும் குண்டுகளை எறிந்து அப்பாவி மக்களைக் கொள்வது சரியென்றால்,கடாஃபி செய்வதும் சரியென்று ஆகிவிடாதா சார்?

லிபியா பிரச்சனைக்கு வேறு தீர்வுகள் இல்லையா?

அமெரிக்கா, கடாஃபியை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது இப்போது அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவுக்கு எல்லா நாட்டிலும் தனுக்கு ஜால்ரா போடுபவர்களே அதிகாரத்துக்கு வரவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் சார்?.

Anonymous said...

ஈழத்தில பெட்ரோல் வளம் இருந்திருந்தால் இந்த மாதிரியான நிலை இலங்கை தமிழர்க்கு ஏற்ப்பட்டிருக்காது.

Thekkikattan|தெகா said...

இரண்டு மூன்று நாட்களாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் செய்து கொண்டிருக்கும் நாட்டாமை வேலையை திகைப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.//

ஜி, ஏதோ நல்லது நடந்தா சரிதான். முன்னே உள்ள அழுக்கு அரசியல் விளையாட்டு மீண்டும் சப்பனமிட்டு உட்கார்ந்திக்காதுன்னு நம்புவோம். ஏன்னா, இப்போ நடக்கிற போராட்டங்கள் எல்லாம் நாட்டின் உள்ளரயே இருந்து இளைஞர்களாலே நடத்தப் பெறுவது.

அதனால் மாற்று அரசாங்கம் அமைக்கும் பொழுது அது மக்களின் நலனுக்கென இயங்கும் அரசாக அமையலாம். பொருத்திருந்து பார்ப்போம்.

//எனக்கும் லிபியாவுக்கும் ஒரு கணக்கு முடிக்க வேண்டி இருந்தது.//

அது என்ன கணக்குவோய்... ராச பக்கியை வெளுக்கிற மாதிரியா ;-) ...

Thekkikattan|தெகா said...

//இங்கிலாந்தும், அமெரிக்காவும் நாட்டாண்மை வேளைப் பார்த்தாலும், அது லிபிய மக்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுத் தரும் .//

//அதிகாரவர்க்கம் ஒழிந்து லிபியாவின் மக்களாட்சி மலர் வேண்டும் ... மலரும் ...//

வாங்க இக்பால் செல்வன், அதுவே அந்த நாட்டின் வரலாற்றை கவனித்துக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும். இந்தியாவின் நிலை என்னவென்று சொல்வது... தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதைதான்...

Thekkikattan|தெகா said...

தவறு said...

இந்தியாவின் ராஜதந்திரமா அல்லது ராஜ தரித்திரமா தெகா இது. என்னமோ போங்க..//

தெரிஞ்சா செஞ்சிக்கிறோம் சொ.செ.சூ :)) தெரியாம ஆப்பா தேடி ஏறி உட்கார்ந்துக்கிறதுதான்... அப்புறம் காலத்தை வாங்கி வாங்கி போட்டு பிரச்சினை தள்ளிப் போடுறது இதான் நம்மோட ராசதரித்திரம் ;-)

Anonymous said...

இந்தியா என்ற சனநாய் அக நாடு இன்று தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டு உண்மை முகததை மறுபடியும் வெளிக்காட்டியுளளது. அன்று சிங்கள கொலை வெறியருக்கு இன்று லிபியாவின் கடாபிக்கு. வாழ்க இநதியனின் சனநாயகம்.

Thekkikattan|தெகா said...

அனானி,

//அமெரிக்காவும் இங்கிலாந்தும் குண்டுகளை எறிந்து அப்பாவி மக்களைக் கொள்வது சரியென்றால்,கடாஃபி செய்வதும் சரியென்று ஆகிவிடாதா சார்?

லிபியா பிரச்சனைக்கு வேறு தீர்வுகள் இல்லையா? //

வேறு எது மாதிரியான தீர்வு. கடாஃபியிடம் பேசி ஜனநாயகத்தை மலர வைக்கலாங்கிறீங்களா? அவரோட யூகேவில படிச்ச மகனே சொல்லுறார் லிபியாவிற்கு ஜனநாயகமெல்லாம் லாயக்கு படாதாம். காட்டுமிராண்டி மக்கள்ங்கிறார்.

கடாஃபியே அடக்கு முறையை கொண்டுதானே காலத்தை ஓட்டியிருக்கார். இப்போ அவருக்கு வேண்டியவர்கள் மட்டும்தானே குரல் கொடுக்கிறாங்க, பெரும்பாலான மக்களுக்கு அவரின் ஆட்சியிலிருந்து விடுதலையைத்தான் எதிர்பார்த்து செய்றாங்க.

//அமெரிக்காவுக்கு எல்லா நாட்டிலும் தனுக்கு ஜால்ரா போடுபவர்களே அதிகாரத்துக்கு வரவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் சார்?.//

நீங்க சொல்லுறதில அதிகமான உண்மையிருக்கு. ஆனா, இப்பொழுது மாறிவரும் அரசியல் சூழ்நிலை மத்திய கிழக்கு நாடுகளில் வேறு மாதிரியாக இருக்கிறது. பழைய ஜால்ரா அரசுகள் அமையுமான்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.//

அதேதான்.. நாடு திரும்பும் எண்ணம் பலருக்கு வராமல் இருக்க அரசியல் மேலுள்ள அருவருப்பும் காரணம்..

ராஜ நடராஜன் said...

என் மனசு குறுகுறுக்கும் அத்தனையையும் பதிவில் வைத்துள்ளீர்கள்.எனவே எனது சார்பாக இன்னொரு பதிவு தேவையில்லாமல் பின்னூட்டம் மட்டும் இங்கே இடுகிறேன்.

ராஜ நடராஜன் said...

சதாம் ஹுசைனுக்கு நிகழ்ந்ததைக் கண்டு அமெரிக்காவுடன் பேரழிவு ஆயுதங்கள் உபயோகிப்பதில்லையென்று சமாதானம் செய்து கொண்ட கடாபி மக்களின் எதிர்ப்புக்குரல் எழுந்த போதே புத்திசாலித்தனமாக தனக்கான அடைக்கல இடத்தை துனிசியாவின் அலி மாதிரியோ அல்லது எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மாதிரியோ தேர்ந்தெடுத்திருக்கலாம்.ஈராக்கின் போர்க்கால சுவடுகள் அத்தனையும் லிபியாவில் தெரிகிறது.இருந்தும் வீண் வாய்ச்சவடால்களால் கடாபி தனக்கும் தனது குடும்பத்துக்கும் குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்.எதிர்ப்புக்
குரல் கொடுத்த தன் நாட்டு மக்களுக்கு இனி கருணை காட்ட மாட்டேன் என கோபத்தில் கத்தியதே கடாபியின் முதல் அழிவுக்கான அறிகுறி.மனுசனா இந்த ஆள்?

ராஜ நடராஜன் said...

ஐ,நாவின் தீர்மானத்தின் படி விமானத்தாக்குதலுக்கு ஆதரவும் அளிக்க இயலாமல்,இந்தியர்கள் பஞ்சம் பொழைக்கப் போனதனால் கடாபிக்கு எதிர்ப்பும் தெரிவிக்க இயலாத தர்மசங்கடத்தில் இந்தியா ஐ.நா வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.உரிமை,சுதந்திரம் கூட மேற்கத்திய நலன் சார்ந்த,மத்திய கிழக்கு எரிபொருள் பொருளாதார நிலை சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன.

ராஜ நடராஜன் said...

அடி உதவறமாதிரி இந்திய அண்ணனும் உதவமாட்டான் என்பதே கடாபிக்குப் பொருந்தும்.

ரீகன் காலத்துலேயே இந்தாள போட்டுருக்கனும்.இந்த முறை தப்பிக்க சந்தர்ப்பமில்லை.

ராஜ நடராஜன் said...

இதுவரை நிகழ்ந்த மக்கள் எழுச்சிக்குரலுக்கு சற்றும் குறைவில்லாத குரலே பஹ்ரைனில் நிகழ்வதும்.ஆனால் இதனை ஷியா,சன்னிப்பிரிவு என திசை திருப்பி ஈரான், GCC நாடுகளின் நலன்களின் தலையிடுகிறதென்று திசை திருப்பி ஷேக்குகள் ஒன்றாக கூடி படை அனுப்பி போராட்டத்தை நசுக்கிவிட்டார்கள்.

மேற்கத்திய நலன்களுக்கு தற்போதைய மன்னராட்சியே நல்லது என்பதால் வளைகுடா நாடுகளின் மாற்றமென்பது A hard nut to break.

ராஜ நடராஜன் said...

ஈழம் சுதந்திர குரலுக்கான காரணங்கள் எந்த நாட்டவரோடும் ஒப்பிடும் போது முக்கியமாக கடாபியோடும்,ராஜபக்சேவுடன் ஒப்பிடும் போது இப்போது அதற்கான தேவை முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கிறது.

ஆனால் கால ஓட்டத்தில் சோர்ந்து போகும் நிலையிலான ஈழத்து மக்கள் மனநிலை,அங்கேயும் தமிழனுக்குள் சுயநலன் அரசியல் செய்யும் புல்லுருவிகள்,புலம் பெயர் மக்களின் குழு மனப்பான்மை,ஈழத்தை தமது கட்சி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்ட தமிழகத்தின் தலைவலிகள் என்ற சுழலில் ஈழத்தின் குரல் ஈனஸ்வரம் வாசிக்கிறது.

முன்னெடுத்துச்செல்ல சரியான இயக்கமும்,தலைமையுமே தற்போதைய தேவை.நாடுகடந்த தமிழீழ அரசு அதற்கான வாய்ப்பாய் அமைந்தது.ஆனால் அங்கும் நிகழும் திரைமறைவு நிகழ்வுகள், இலங்கை அரசின் வலுவான உள்வேலைகள் என அமெரிக்காவுக்கு சொல்வதற்கு ஆட்கள் இல்லா நிலை.

தற்போதைக்கு தமிழகம்,புலம் பெயர்ந்த மக்கள் கடாபிக்கு ஒரு நீதி ராஜபக்சேவுக்கு ஒரு நீதியா என கோசம் எழுப்புவதும் பெயர்ப்பலகை அணிவகுப்புமே மக்கள் குரல் சார்ந்த தூதரகங்கள் சார்ந்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரக குறிப்பேடுகளிலாவது இடம் பெற உதவும்.

Thomas Ruban said...

இதை அவசியம் படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்களேன் சார்.


http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_23.html

நன்றி.

Related Posts with Thumbnails