Saturday, September 17, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I


எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.

...பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்...

என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.

மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு. இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.

இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.

ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...

...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...

என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.


பி.கு: வலைச்சரத்திற்காக எழுதியது 2008ல்...

1 comments:

இராஜராஜேஸ்வரி said...

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I"

அருமையாய் அசை போட்ட பகிர்வுக்கு பாராட்டுக்கள்,

Related Posts with Thumbnails