Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

4 comments:

Bibiliobibuli said...

முதல்ல, அந்த விவரண காணொளி இங்கே மிஸ்ஸிங் :)

ஏனோ பதிவை படித்த போது கொஞ்சம் ஈழமும் நினைவில் வந்து போனது. எப்பிடின்ன்னா, காடுகளை அழித்து நதி நீர்த்திட்டம் (மகாவலி, கல் ஓயா, யான் ஓயா இப்பிடி கிழக்கில்) அப்பல்லாம் நீங்க சொல்ற யானை, காட்டெருமை போல தமிழன் தான் வீதி, வீதியா விரட்டியடிக்கப்பட்டான். ஸாரி, கவனம் திசை திரும்பினதுக்கு.

இப்போ, இந்த பிரச்சனைக்கு வருவோம். இப்போ கேரளா அரசு என்ன ஆயத்தம் செய்யுது என்பது எனக்கு தெளிவில்லை. எனக்கிருக்கும் தகவற்பற்றாக்குறையே அதுக்கு காரணம்.

இருந்தாலும், இந்த நீர்ப்பிரச்சனையில், காவிரி, முல்லைப்பெரியாறு, உச்ச நீதி மன்றம், நடுவர்மன்ற தீர்ப்புகள் கூட உண்டு என்று படித்த ஞாபகம்.

ஒரு மத்திய அரசு நியாயமாய் இதில் தன் அரசு சட்ட நியமங்களுக்கு இணங்க செயற்பட்டிருக்க வேண்டும்.

ஒரு மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு சொல்லமுடியவில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நட என்று! அரசசட்ட விதிகள் கூட இருக்கும்போது ஏன் ஒரு செயலற்றதன்மை மத்தியில்.

இந்திய அரசியல் தன்மையும், அதன் போலி ஜநாயகப் போக்கும் புரிந்ததால் இதில் அதிகம் நான் ஆச்சரியப்படவும் முடியாது.

ஒரு அரசு நிர்வாகம், அரச சட்ட விதிகள், நீதியமைப்பு, இதெல்லாம் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைப் பிரச்சனையான குடி நீர், விவசாயப் பாசனம் இதெயெல்லாம் தீர்க்க முடியவில்லையென்றால்....

Sorry....

Bibiliobibuli said...

Thanks for attaching the video clip :)

Thekkikattan|தெகா said...

you are welcome and thanks for the comment - Rathi :)

Suresh Subramanian said...

Thanks for sharing the video .. nice..

www.rishvan.com

Related Posts with Thumbnails