Sunday, July 28, 2013

வானமும் என்னுடைய வாழ்க்கையும்...

மீண்டும் ஒரு அழகானதொரு நள்ளிரவு! இன்று எனக்கு நானே பேசிக்கொண்ட கோயப்புத்தூர் காலம்பாளைய நாள் 1996ஆம் வருடம் போன்றதொரு இரவு. காரின் ஹூடில் மல்லாந்து படுத்தபடி இரவு வானத்தை ஒரு ஏகாந்த நிலையில் தரிசித்தபடி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே மணி போவது தெரியாமல் அருந்திக் கொண்டிருந்தேன். எனக்கும் இரவு வானத்திற்குமான தொடர்பு சொற்களில் சுருக்கவதாக இல்லை.

எனக்குத் தேவையான அத்தனை உள்ளார்ந்த சக்தியை எப்பொழுதும் ஒவ்வொரு தருணத்திலும் அங்கிருந்தே தரவிறக்கம் செய்து வந்ததாக எனது நினைவு. இந்தியாவிலிருந்து என்னுடைய இருபத்து ஆறாவது வயதில் இது போன்றதொரு சம்பாஷணைக்கு பிறகே அமெரிக்காவிற்கான பயணத்தை நிகழ்த்தி இருக்கிறேன். இடையில் எத்தனையோ மயிர் கூச்சரியும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அது எனக்கும் அந்த நிகழ்வுகளுக்குமான அதிர்வுகளை பன்மடங்கு மற்ற மனிதப் பார்வைகளிலிருந்து எகிறி காமித்தாலும் எனக்கொன்னவோ அவை தேவையானதொரு பாடமகவே அமைந்திருக்கிறதாகப் படுகிறது.

அன்று கோவையில் நிகழ்ந்த அந்த இரவு வானத்தினூடான சம்பாஷணை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் நகைத்திருக்கக் கூடும். ஆனால், உள்ளார்த்தமாக அந்த பெளர்ணமி இரவு எனக்கு கொடுத்தது என்னுடைய பதினெழு வருட அமெரிக்கப் பயணத்திற்கு போட்ட உரமாக அமைந்தது.

இன்று மீண்டும் நான் அதே நிலையில் இந்தியா திரும்பும் ஒரு சந்திப்பில் நிற்கிறேன். அதே உத்தரவு கேட்டு. அதே பைத்தியக்காரத்தனம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. என்னவோ எனக்கு உத்தரவு கிடைத்த மாதிரியான உணர்வுதான். இரவு வானத்தின் பின்னணியில் மரத்தைப் பார்த்தேன், என்னுடைய வீட்டைப் பார்த்தேன்- செய்வது சரிதானா என்று கேள்வியை முன்வைத்து நட்சத்திரங்களை உற்று நோக்கியபடிபடியே- என்னுடைய மற்றொரு குரல்- மச்சான் எல்லாம் நல்லாதான் நடக்கும். எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தேறிருக்கிறது; keep it going என்று உள்ளிருந்து ஒரு குரல். அவ்வளவுதான் எனக்கு வேணும்.

என்னைச் சுற்றியும் எப்பொழுதும் எனக்காக மனம் கசிந்து நல்லதே நடக்கும் என்று உருகும் நல்ல நண்பர்களும்/உறவுகளும் உண்டு. அதனைத் தாண்டிய தீர்க்கமாக ஆற்றோடு மிதக்கும் அபரிதமான மன நிலையும் என்னிடமுண்டு. இத்துடன் ஒருமித்து ஒத்திசைவுடன் அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்துகிறேன்.

May this universe bless me all along the way! Good luck to me!! போய் வருகிறேன் அமெரிக்கா!! :)

2 comments:

ஜோதிஜி said...

அப்பாற்பட்ட சக்தி, வித்தியாசமான சூழ்நிலை, விவகாரமான சந்தர்ப்பங்கள் என்று ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் கடந்தே வந்துள்ளோம்.

எனக்கும் இதே போல உள்ளார்ந்த உரையாடல் உண்டு.

வணக்கம் சென்னை
வணக்கம் இந்தியா
என்பது போல வருகிறேன் அமெரிக்கா என்று சொல்லிவிட்டுத்தான் வர முடியுமே தவிர முழுமையாக நான் இனி இந்தப் பக்கம் வர முடியாது என்று சொல்ல முடியாது.

காரணம் உலகம் கிராமம்.
தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு பிணைப்பும் ஏதோவொரு இடத்தில் தொடக்கமும் அதுவே முடிவுமாகவும் இருந்து விடுகின்றது.

முதல் வரவேற்பு தேவியர் இல்லத்தில் இருந்து.

நல்வாழ்த்துகள். காத்திருக்கின்றேன்.

தருமி said...

வாருங்கள் .. வாருங்கள் ..

அடுத்த கட்டம் .. இனிமையாக தொழிலும் வாழ்வும் அமைய வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails