Friday, January 03, 2014

புதுக்கோட்டையில் ஓர் ஞானாலயம்: Gnalaya P. Krishnamurthy

என் வாழ்நாளில் புதுக்கோட்டையை எத்தனையோ முறை  பேரூந்து வழியே கடந்து சென்றிருப்பேன். எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதுவும் அந்த மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானாலயா இல்லத்தை கடந்துதான் நான் பயணம் செய்த பேரூந்து சென்றிருக்கக் கூடும். ஆனால், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்த பிறகு, வாழ்க்கையின் மத்திம பகுதியில் வந்து நிற்கும் எனக்கு சில நாட்களுக்கு முன் ஞானாலயா ஆய்வு நூலகத்தை பார்க்கவும், அதன் நிறுவனர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எனது உலகத்தில் இவர்களுக்கான காட்சியளிப்பு எனக்கு நானே வழங்கிக் கொள்ளவும் இப்பொழுதுதான் அமைந்திருக்கிறது.

ஒரு நாள் முழுதும் தங்கி ஐயா ஞானாலயா கிருஷணமூர்த்தி மற்றும் அவருடைய துணைவியாருடன் உரையாடினோம்.  அவர்கள் அளித்த மதிய உணவை முழுதும் உண்ணும் வரையிலும் அருகிலேயே அமர்ந்திருந்து என்னுடைய கொரித்து சாப்பிடும் பழக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க செய்தார் அம்மா.

மனிதனின் நினைவாற்றல் என்பது ஒருவர் தனது துறை சார்ந்து எது போன்ற இலக்கை சென்றடைய வேண்டுமோ அதற்கென பயன்படுத்தி தன்னை சந்தைப் படுத்தி கொள்வது நடைமுறையில் நாம் காண்பது.

இவர் தான் வாசித்து சுவாசித்த அத்தனை புத்தக, நிஜ மனிதர்களின் நினைவுகளோடும் அவர்களின் கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவரும், பெரியவர்களென தன்னைத் தானே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிறியவர்களுக்கு முன்னால் ஒரு சொப்பன மனிதர்.

இரண்டு மாடிகளில் உள்ள எந்த புத்தகத்தை தொட்டாலும் அதனைப் பற்றிய சிறப்புகளை எடுத்து வைக்கும் பாங்கு நம்மை கொக்கிப் போட்டு உடனே அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையை வளர்த்தெடுக்கிறது.

எத்தனையோ பெரிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு உரையாடி இருக்கக் கூடும். ஆனால் திருப்பூர் ஜோதிஜியுடன் சென்ற போது, எங்களிருவருக்காக இத்தனை ஆர்வத்துடன் தன்னுடை அத்தனை வாழ்பனுவத்தை வருடியும், தேவையான இடத்தில் எங்களின் குறுக்கீடுகளை மன்னித்தும், கலந்து கொள்ளுமாறு எங்களையும் அணைத்து கருத்துகளையும் உள் வைத்து எடுத்துச் சென்றது முதல் ஆச்சரியம் என்றால் அவரின் உரையாடலின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டே சென்றது  என் கண்களை அகல விரிய வைத்தது.

அவர் ஓர் அறிவுச் சுரங்கம். 1800களின் இந்தியாவிலிருந்த வாழ்க்கை முதல்  சமகால அரசியல் நிலையென்று அத்தனை விசயங்களையும் இதுவரையிலும் நாம் வெகுஜன ஊடகம் வழியே அறியாத முக்கியமான தகவல்களாக சொல்லிக் கொண்டே செல்ல எனக்கு கனவா நினைவா? என்று யோசிக்கத் தோன்றியது.  அக்காலத்திய மனிதர்களின் வார்த்தைகளிலிருந்து அவர்களின் கனவுகள் எப்படியாக இன்றைய இந்தியாவில் வெறும் நினைவுகளாகி இருக்கின்றன என்று கூறி அவர் விடுக்கும் ஒரு வெறுப்பு கலந்த வரட்டுப் புன்னகை அவ்வப்பொழுது என் மனதை என்னவோ செய்தது.

அவரின் பார்வையில் காந்தியின் செயல்பாடுகளும் அவரின் தொலை நோக்கு பார்வையும் ஓவ்வொரு வார்த்தைகளின் ஊடாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தமாக சில சான்றுகளை காந்தியின் வார்த்தைகளிலிருந்தே மேற்கோள் காட்டி சொல்லும் பொழுது “அட, ஆமால்ல” என்றுதான் வாய்பிளக்கச் செய்தது.

ஒரிடத்தில் நம்மை எல்லாம் காந்தியின் சுயசரிதை வாசிப்பிலிருந்து மீண்டு அவரைப் பற்றிய, காந்தியே எழுதிய பிற புத்தகங்களையும் ஆழ்ந்து வாசிக்க அழைக்கிறார். மற்றொரு இடத்தில் மிக அதிகமாக புத்தகங்களின் விற்பனையும், வாசிப்பாளர்களையும் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கியதின் பின்னணியை விளக்கும் பொழுது, எப்படி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழுக்கென செய்த பெரும் தொண்டுகளை பெயர், வருடம் வாரியாக அட்டவணை இடுகிறார்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் மொத்த பிரசுரங்களே 13 தானாம். அதனில் பத்து பிரசுரங்கள் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார செட்டியார்களால் நடத்தப் பெற்றவைதானாம். எனவே, இயல்பாகவே அதிகப்படியான புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பாளர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்து போனதாக உபரித் தகவலாக போகிற போக்கில் பெரிய தகவல்களைச் அள்ளித் தெளிக்கிறார்.

பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக  ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.

ஞானாலயா நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் முதற் பதிப்பு கண்டு அத்துடனே அத்தனை மூலத்தையும் உள்ளடக்கி அதற்கென உரிய புனிதத் தன்மையுடன் நம்மை சற்றே பணிவுடன் வணங்கச் செய்கிறது.

பெரியாரின் 1920களின் விடுதலை செய்தித் தாளை தொடும் பொழுது பயம்மா/மிரட்சியா/அதன் அதிர்வா அல்லது அந்தத் தாளின் இப்பொழுதோ அப்பொழுதோ விரலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடுவேங்கிற புனிதம் தோய்ந்த பழமையா ஏதோ ஒன்று அந்த பைண்டிங் தொகுப்பை திறக்கும் பொழுது காலுக்கு கீழ் பூமி நகர்வதாக உணரச் செய்தது.

இத்தனை புத்தங்களையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்க வேண்டி தனது வளர்ச்சியை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அளவிலே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். தான் ஆசிரியர் பணியில் இருந்த அனுபவம், புதுக்கோட்டை தவிர வேறு எந்த பகுதிக்கும் செல்ல விரும்பாத காரணத்தால் வந்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியராகவே வாழ்ந்த அனுபவம், கடைசியில் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த போது பள்ளியில் உருவாக்கிய சீர்சிருத்தம் என்ற அவர் நிஜவாழ்க்கை சாதனை என்பது தமிழிலில் வந்த சாட்டை படம் போலவே இருந்தது.
ஆனால் எதையும் எவரிடமும் சொல்வதும் இல்லை. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து செய்யும் பழக்கமும் இல்லாத அவரைப் பார்த்த போது சகமனிதர்களின் குறிப்பாக பணமே சரணம் என்று காட்டு ஓட்டமாக ஓடும் இன்றைய நவீன இந்தியர்களின் மீதாக நான் வைத்திருந்த பார்வையை சற்றே மறு பரிசீலனை செய்யச் சொல்லி இருக்கிறது. சென்ற பள்ளிகளில் எல்லாம் தனது நிர்வாக திறமையால் பல மாற்றங்களையும் செய்திருக்கிறார்.

குறிப்பாக கந்தர்வகோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ரஜினி ரசிகர்கள் ஒரு முறை பென்சில் நோட் புத்தகம் வழங்க வந்த பொழுதில் அவர்களை பள்ளியின் சுற்றுச் சுவற்றை வெள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்ட லாவகம் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டிய ஆளுமைத் திறன்.

இன்றைய அரசியல் போகும் போக்கிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பணத்திற்கு ஓட்டு என்கிற பரிணாம சுழற்சியில் இது போன்ற மனிதர்களும் இவைகளை சகித்துக் கொண்டு எப்படியாக தங்களை இன்னமும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது சமூக அறிவியல் - உளவியலுக்கே உரித்தான கேள்வியது.

நம்முடைய வயதை ஒத்தவர்களுக்கு இதுவே வாழ்க்கையென ஓடும் ஓட்டத்தோடு கலந்து கரையேறுவது எளிமையாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படை உரிமைகளை காக்கவும், அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காக்கவென போராடியே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையின் ஊடாக வாழப் பெற்ற இது போன்ற அறிவார்ந்தவர்களின் அங்காலய்ப்புதான் எதனை ஒத்ததாக அமையக் கூடும்.

இப்பொழுது உள் நாட்டிலும் சரி, உலக அரங்கிலும் சரி எந்த ஒரு முடிவும் தன் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும் சார்ந்து இல்லாமல் வியாபாரிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் மண்ணை/பாறை முகடுகளைக் கூட கூறு போட்டு விற்கும் நிலைக்கு நகர்ந்து வந்துள்ளோம்.

இத்தனைக்கு நடுவிலும் இத்தனை ஆயிரம் புத்தகங்ளையும் அதனூடாக வசிக்கும் மனிதர்களையும் வாசித்து அவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் ஒன்று ஒன்றாக பறக்க விடுவதனையும் கவனத்தில் நிறுத்தி இன்னமும் மனதை விட்டு விடாமல் நேர்மறை எண்ணத்தில் அவருக்கே ஆன வாழ்வை அவரது தத்துவார்த்த நோக்கில் வாழ்வது simply notable and impressive!

அந்த குடிலை விட்டு வெளிக் கிழம்பி வரும் பொழுது நான் விளையாட்டாக சொன்னது எனது நண்பரிடத்தில் “ஏதாவது செய்யணும் பாஸ்.” அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.

3 comments:

கோமதி அரசு said...

அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.//


நன்றாக சொன்னீர்கள் தெகா.

Unknown said...

//பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.//

நல்ல அவதானிப்பு... அரிய தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி...!

Anonymous said...

சித்திரபரிவாலானம் எளிதா இல்லாது வெஞ்சியவரிகோடிய பனைக் குருத்தேடுகலள் பரிபாலனம் எளிதா என்றுரைத்தால் சித்திரம் எளிதென்பர் விச்வகர்ம சாகிர்தியங்கள் அறிந்தோர். அணிசேர்ந்தங்கோர் பேராதரவில் பெரும் பொருள் சேர்த்தங்கே செலவிட்டோ சேர்த்த நூல்கள் சுவைபட மெலிதாக்கி வைத்திடல் எளிதல்லா இயம்புவேன் நான் முதுபொருள் முயங்கலாக.

வாழ்க அய்யனார் தம் சேவை வளர்க அறிவுசேர் செல்வம்.

சையது உசேன்

Related Posts with Thumbnails