Thursday, May 01, 2014

நிறமிழக்கும் கனவுகள்: ஒரு மயான அமர்வு!

நேற்று இரவு அந்த ஒரு சிறு கிராமத்தின் அடர்ந்த இருளில் விஞ்ஞானத்தில் ஊறித் திளைத்திட்ட உடல் சாம்பலாகிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்தேன்.

அந்த பொட்டலை சென்றடையும் வரையிலும் அந்த உடலை நகர்த்திச் சென்ற ஊர்தியின் பின்னால் அந்த இருளைக் காட்டிலும் பூசி அப்பிய கறுமையான எண்ணங்களுடன் ஊர்ந்து கொண்டிருந்தோம். அந்த கிராமத்து சாலையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த சின்னஞ்சிறு வீடுகளிலிருந்து நடுநிசி பன்னிரெண்டைத் தொட்டிருந்தாலும் ஊரே அவருக்காக விழித்திருந்தது. அதில் குறிப்பிடும் படியாக என் கண்களுக்கு தட்டுப்பட்டதெல்லாம் கூப்பிய கைகளுடன் நின்ற வயதான பாட்டிகளும், தாத்தாக்களுமே!

அந்த விஞ்ஞானிக்கு அது ஒன்றும் செத்துப் போகும் வயதல்ல. வெறும் ஐம்பத்திரண்டு வயதே! மிகவும் மென்மையாக பேசும், பழகும் குணத்திற்கு சொந்தக்காரர். எங்களுடைய காடு புகும் அனுபவத்தில் எத்தனையோ முறை தடுக்கி விழுந்திருக்கலாம் எழுந்திருக்கலாம். ஆனால், ஒரு போதும் இப்படி ஒரு கெடுநிகழ்வு நிகழக் கூடுமென்று நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இப்படி நாங்கள் அறிந்துக் கொள்ளக் கூடியதாக எங்களவு காடு புகும் அனுபவ ஓட்டத்தில் நிகழ்ந்திடவே இல்லாத ஒரு கெடு நிகழ்விது.

அப்படி ஓர் உடைந்த மூங்கில் சிறு குச்சு அங்கே கிடந்திருக்க வேண்டாம். இவர் விழுந்த வேகத்தில் கண்ணின் வழியாக பாய்ந்து மறுமுனையில் துருத்தி நின்றிருக்கிறது. அவர் அதே இடத்தில் தனது அத்தனை ஆசாபாசங்களையும் காலன் இடத்தில் ஓப்படைத்துவிடக் கூடிய அசுர வேகத்தில் நடந்து முடிந்தே விட்டது.

இரவு பதினோரு மணி வாக்கில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும் பொழுது ஊரே உறங்கிக் கிடந்தது. நண்பர் அருண் வழிக்காட்டலின் பெயரில் ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். வழியெங்கும் அந்த ஆட்டோ, சாலை பல்லாங்குழியில் வாகனத்தின் ஒற்றைச் சிம்னி வெளிச்சத்தில் வான வீதியின் ஏதோ ஒரு முனையில் மிதந்து செல்வதைப் போன்ற மயக்கத்தில் வைத்தபடியே அந்தப் பயணம் நீண்ண்ண்டு கொண்டே சென்றது. மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கும், சுற்றிலும் மற்ற விளக்கு ஒளிகள் அறவே இல்லை. ஏதேதோ எண்ணங்கள்!

ஒரு வழியாக அந்தச் சாலையை அடைத்த படி மக்கள் திரண்டிருக்கும் அந்த இடத்தை அடைந்தது. அங்கயே இறங்கிக் கொண்டேன். வாழ்விற்கும் பிசுபிசுத்து திணறி நிற்கப்போகும் அந்த அனைத்து நிகழ்வுகளையும் கண்ணுரும் பொருட்டு எங்கிருந்தோ எனை நகர்த்தி இங்கே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டதாகப் பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பிரவேசிக்கும் பொழுது, விஞ்ஞானியின் விசித்திரமான சிரிப்பொலியை என்னால் என் காதருகில் பிரத்தியேகமாக கேட்க முடிந்தது. காலம் அவர் முகத்தில் சிறு ரேகைகளை விட்டுச் சென்றதைத் தவிர்த்து பெரிதாக ஒன்றும் அவருடைய முகத்தில் வித்தியாசங்களை காணமுடியவில்லை. சிலபல நிமிடங்கள் முகத்தை பார்த்தபடியே தரைக்கு கீழே பூமி நகர்வதை உணர்ந்து அங்கிருந்து என்னை பெயர்த்து எடுத்து வெளியில் வைத்துக் கொண்டேன்.

மீண்டும் அந்த உடல் எடுத்தும் செல்லும் ஊர்திக்கு பின்னால் செல்கிறேன். தனியனாக. சாலையை மூடியபடியே விதைத்துச் செல்லும் மலர்களின் மீதாக என்னுடைய அடிபட்டு விடாத படிக்கு மிககக கவனமாக...

இன்னமும் நமது உடல் எரியூட்டும் நிகழ்வு பல ஆயிரம் வருடங்களைத் தாண்டியும் கடைபிடிக்கப் படும் வகையிலேயே அந்த ஏற்பாடுகள் நடத்தப்பெறுவதாக என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஏற்பாடுகள் நம் ஒவ்வொருவரின் அகங்காரத்தில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகவே படுகிறதெனக்கு. மேலே சாணத்தால் தயாரிக்கப்பட்ட வராட்டி அடுக்கப்பட்டது. அதன் மீது வைக்கோல் பரப்பப்பட்டு களி மண்ணால் சாத்தப்பட்டது. பிறகு அந்தத் தீ ஒரு முனையில் செருகப்பட்டது. பிறகு நான்கு முனைக்கும் பரப்பட்டது.

எரியும் சிதையை படமெடுக்க வேண்டுமென எண்ணம் அவ்வப்பொழுது எழுந்தாலும், மனதில் திராணி இல்லை. சற்றே கொச்சையாகப் பட்டது. எதனை சுருட்டிக் கொள்ள இந்த மனம் ஆசைப்படுகிறது என்று வெட்கித்து இரண்டு முறை வெளியில் இழுத்த புகைப்படக் கருவியை திரும்பவும் உள்ளயே போட்டுக் கொள்ளத் தூண்டியது எதார்த்தம்.

முதலில் புகையாகக் கிளம்பியத் தீ பிறகு சன்னமாக மஞ்சள் நிறத்தில் அடர்ந்தது. நான் பிற கிழவன் மார்களுடன் ஓர் இருட்டு பார்த்த தரையில் சப்பனமிட்டு வானத்தையும், தீயையையும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்த தீ பிறகு தலைமாட்டிருலிருந்து நீல நிறத்தில் யாரோ ஊதி ஒற்றை திரியில் அனுப்பவதைப் போல பிறீட்டு வந்தது. உடலின் இனிப்பு!

அவர் கரைந்து கொண்டிருந்தார். அதற்கு மேல் என்னால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் நடை. இதோ அவ்வளவே நாம்! அவரின் வெற்றிடம் நிரப்பப்பட முடிவதற்கரிது! காலம் கண்ணாமூச்சியாடிபடியே சுழண்டு கொண்டிருக்கிறது.

3 comments:

தருமி said...

செய்தித் தாளில் வாசித்தேன். கொடுமை ...

Anonymous said...

யார் அவர் தெகா? வருந்துகிறேன்.
-சுந்தரவடிவேல்

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

Related Posts with Thumbnails