Sunday, April 15, 2018

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்? இதற்கான பதிலில் இது போன்ற அவலங்களுக்கான தீர்வு இருக்கிறது.
விருதுநகர் கல்லூரியின் விரிவுரையாளர் நிர்மலா தேவி என்பவர் இன்றைய இந்தியாவின் நவீன சுரண்டல் அமைப்பின் ஒரு குறியீடு என்றளவிலேயே இதனை அணுக வேண்டியதாக இருக்கிறது. இந்த செய்திகளின் அடிப்படை அணுகுமுறையிலேயே ஒரு தவறு இருக்கிறது.
நாம் யாரும் அதனை நோக்கி கேள்வி எழுப்பவோ, கவனிக்கவோ நம்மை தயார்படுத்தவில்லை. அந்த ஒலிக்கோப்பு முழுதுமாக கேட்டால், நிர்மலா, தான் ஓர் அம்பு மட்டுமே எய்தவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் உள்ளவர்கள், நம்முடைய வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்று கை சுட்டும் இடம் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கிறது.
எந்த ஊடகமாவது, யார் அந்த பெரிய தலை? எது போன்ற அதிகார மையமது? இதற்கு பதில் தேடி அதனை நோக்கி தங்களுடைய துப்பு துலக்கும் ஊடகப் பணியை மேற்கொள்ளும் நிழல் கேள்விகளை எழுப்பியதா? இல்லைதானே? அப்படியெனில் டிஸ்கவரி சானலில் நாம் ஒரு வித அச்சத்தினூடும், வெறுப்போடும் அதே நேரத்தில் விரும்பிப் பார்க்கும் புலி ஒரு புள்ளி மானின் குட்டியை துரத்தி குரல்வளையை கடித்து சாகடிக்கும் ஒரு நிகழ்வை பார்க்கும் அதே வக்கிரத்தோடுதானே இதனையும் ரசித்து ஒரு சாஃப்ட் போர்ன் ஒலி அளவில் கேட்டு அதிர்ச்சியுறுவது போல மகிழ்ந்து கேட்டு நகர்கிறோம்?
இந்த ஊழலை, மாசுபாட்டை நிர்மலா என்ற ஒற்றை நபருடன் சுருக்கிவிட முடியுமா? இதற்கு பின்னான காரணிகளை நாம் அரசியல், சமூக, மக்கட்பெருக்க நிலை, அதிகார முறைகேடு இத்தியாதிகளுடன் தொடர்பு படுத்தி எப்படி இதனை நேர்கொள்ள வேண்டுமென்று எண்ண வேண்டாமா?
ஒலிக்கோப்பிில் அந்த நிர்மலா மிகத் தெளிவாக கூற வருவதில் இவை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அவர் வார்த்தைகளிலே ஓரிரு இடங்களை மேற்கோள் காட்டுகிறேன் - இது ஒன்றும் புதிதல்ல, எங்கும் நடக்காததும்அல்ல. உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல அந்த ‘பெரியவர்கள், அதிகார மையம்’ அனைத்தையும் கடந்து உதவி செய்யும்.
அதற்குள் இருக்கும் பொருள் பொதிந்த, கையாலாகாத , மிரட்டல் தொனியும் நாள்பட்ட வியாதித்தன்மையின் அயற்சியுமாகத்தான் எனக்கு நிர்மலாவின் உரையாடல் புரியத் தந்தது.
நான் கல்லூரிகளில் படிக்கும் பொழுதே சக மாணவிகளுக்கு இது போன்ற நூல் விட்டுப் பார்த்தல் நடந்து கொண்டு வருவதாகத்தான் அறிகிறேன். இத்தனை மக்கட் தொகை கொண்ட தேசத்தில் இது போன்ற நிகழ்வுகள், அழைப்புகள், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால்தான் விந்தை. படி, படி, படி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நான்கு வயதில் ஆரம்பித்து 26 வயது வரைக்குமே அந்த மதிப்பெண்கள் என்ற குத்தூசி வைத்து விரட்டும் பொழுது அங்கே மாசுபாடு ஏற்படாமல் போகுமா?
இதற்கிடையில் அப்பாடு பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி விட்டால் கூட உடனடியாக அந்த போட்டிக்கிடையே வேலைதான் கிடைத்து விடுகிறதா? ஒரு அரசாங்க காலி இடத்திற்கு ஒரு லட்சம் விண்ணப்பம் வருகின்ற சூழலில் எப்படித்தான் பின்னே தங்களை முன்னிறுத்திக் கொள்வது என்ற அயர்ச்சி வரத்தானே செய்யும். அதனைத்தான் நிர்மலாக்களின் மூலமாக ’அதிகார மையங்கள்’ ஆசை வார்த்தைகளைக் கூற வைத்து ஆள் பிடிக்கும் அவலத்திற்கு தள்ளி விடுகிறது.
நிர்மலாக்களுக்கு குறுக்கு வழியில் தாங்கள் இனிமேல் இழக்க ஒன்றுமேயில்லை எனவும், போட்டியில் தனது சக துறைசார் தோழமைகளிலிருந்து துருத்தி நிற்க அவர்களும் இந்த மாசுநிலைக்குள் தள்ளிவிடப்பட்டு பிரிதொரு நாள் அனுபவ பின்புலத்தில் ஆள் சேர்ப்பு பணிக்கும் எத்தனிக்கும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இங்கே இந்த மாசுபாட்டின் ஆணி வேர், தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்று யாருமே பேசவில்லையே! நம்முடைய விரல் சுட்டு அது வரையிலும் நீளாத வரை இவைகளை நாம் அடைக்க முடியாது. கசிந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இன்றைய போட்டி நிலை அப்படி. ஏதோ ஒன்றை தொற்றிக் கொண்டு தான் தங்களை அந்த இடங்களுக்கு நகர்த்திக் கொள்ள வேண்டிய அபத்த நிலை. அது பணமாக, அதிகார சேகரிப்பாக, வலைபின்னும் நோக்கமாகவென பல அவதாரங்களாக பரிணமிக்கிறது.
இது நமது சமூகச் சூழலில் எந்த துறைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

4 comments:

RPKN said...

Sensible post

ஆதி said...

உண்மை,சரியான கருத்து

ஆரூர் பாஸ்கர் said...

சரியான பார்வை. உள்ளார்ந்த உரையாடலாக இது மாறவேண்டும்.

Thekkikattan|தெகா said...

நன்றி நண்பர்களே!

Related Posts with Thumbnails